RSS

தீர்ப்புகள் திருத்தப்படலாம்!


சமயகுரவர் செய்த அற்புதங்களில் மிகவும் பேசப்படுவதும் நீண்டகாலமாகச் சர்ச்சைக்குரியதுமானது திருஞானசம்பந்தர் செய்த சமணரைக் கழுவேற்றியமை என்பதுவாகும். அதன் குற்றமும் பின்னணியும் ஆர்வமானவர்களுக்கு அறியப்படவேண்டிய ஒன்றாகும். 

கழுமரம் என்பது ஒரு பண்டைக்காலக் கொலைக்கருவி. கூர்மையாக செதுக்கபட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியின் ஆசனவாயைச் சொருகி விடுவார்கள்; அவன் கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேறி இறந்து போவான். வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போடுவதும் செத்த உடலை பறவைகள் கிழித்து உண்பதையும் பற்றி நிறைய கேள்விபட்டிருக்கின்றோம்.
தமிழ்நாட்டில் எட்டாயிரம் சமணர்கள் சம்பந்தரால் கழுவில் ஏற்றிக் கொல்லப்பட்டார்கள் என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் ஆவுடையார் கோவில் ஒவியம் ஒன்றில் கழுவேற்றம் சித்திரமாக வரையப் பட்டிருக்கிறது.


சம்பந்தரது தேவாரப் பாடல்களில் மதக் காழ்ப்பு இருப்பதாகக் கூறுகிறார்கள். சம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்திலும் “திருக்கடைக்காப்பு” என்று சொல்லப்படும் கடைசிப் பாடலுக்கு முந்தைய பாடலில் புத்த,சமண மதங்களாகிய பொய்நெறிகள் அகலவேண்டும் என்று இறைவனிடம் வேண்டும் பகுதி வருகிறது. “தோடுடைய செவியன்” என்ற தனது முதல் திருப்பதிகத்திலேயே “புத்தரோடு சமணும் பொறியில் புறம்கூற நெறிநில்லா” என்று ஆரம்பித்து விடுகிறார். பாண்டி நாட்டுக்குக் கிளம்பும்போது பாடிய கோளறு பதிகத்தில் “புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்” என்கிறார்.


சமணத் துறவிகள் அரசு ஆதரவு பெற்று, பொதுமக்களில் ஏராளமானோர் தங்கள் சைவ நெறியைத் துறந்து வந்தபோது, அதனை மீண்டும் மீண்டும் நினைவுறுத்தவே அவ்வாறு கூறுகிறார் என்பது ஒருசாராரின் முடிவு. 


சமண சமயத்தைப் பொறுத்த வரையில், துறவிகளே முழுமையாக அந்தச் சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள்.. அவர்களுக்கு ஆதரவு அளித்து வந்த தமிழ்க் குடும்பத்தார்கள், மன்னர்கள் உட்பட அந்த சமயத்தின் புரவலர்களே அன்றி, சமண சமயத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. ஒருவிதத்தில் பார்த்தால், இந்த்த் துறவிகள் கருத்து ரீதியாக தங்களை ஆதரித்துவந்த பொதுமக்கள் மீது ஆதிக்கம் செலுத்தினர் என்றே சொல்லவேண்டும். மேலும் சம்பந்தரது கண்டன்ங்கள் அனைத்தும், சமண தெய்வங்களை அல்ல, சமணத் துறவிகளின் நடவடிக்கைகளைக் குறிப்பதாகவே உள்ளதையும் நோக்கவேண்டும்.


வேதாந்தத்தை மூலமாகக் கொண்ட சைவ சமயத்தில், தத்துவ அளவில் ”முற்றாகிய தீமை” என்ற கருத்தும் அதனின்று பெருகும் துவேஷ உணர்வும் கிடையவே கிடையாது. அனைத்தும் பரம்பொருளின் விளையாட்டே, அந்த பிரபஞ்ச லீலையின் ஒரு அங்கமே எனும்போது, நன்மையும், தீமையும், இந்தச் சமயங்களும், அவற்றைப் பின்பற்றுபவர்களும் கூட அதன் ஒரு பகுதியே தான்.அதனால் தான், வேதங்களை ஆக்கியவனும் அவனே, உலகை மயக்குவதற்காக சமண, சாக்கிய மதங்களையும் அவனே ஆக்கினான் என்ற கருத்தையும் மிகத் தெளிவாகவே சம்பந்தர் கூறுகிறார் -


”இணையில் இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
அணையில் சமண் சாக்கியம் ஆக்கியவாறே”.
”வாக்கினால் மறை ஓதினாய், அமண்
தேரர் சொல்லிய சொற்களான பொய்
ஆக்கி நின்றவனே, அடைந்தார்க்கருளாயே”.


எனவே சம்பந்தரின் கண்டனங்கள் அனைத்தும், உள்ளார்ந்த வெறுப்புணர்வால் அல்ல, சமணர் நிகழ்த்திய சமூகச் சீரழிவினைக் கண்டு மனம் நொந்து கூறியது என்றே கொள்ள வேண்டும்.


பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய வரலாற்றை எழுத ஆரம்பித்த சில பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள், மதப்பூசலும், ரத்தம் பெருக்கெடுத்து ஓடி, சிலுவைப் போர்களால் நிரம்பிய மத்திய கால ஐரோப்பா பற்றிய அதே கருத்துச் சட்டகத்துடன், இந்தியாவிலும் இது போன்ற மதப்போர்கள் நடந்திருக்கும் என்று கற்பனை செய்தார்கள். இது அவர்களது பிரித்தாளும் கொள்கைக்கு வலு சேர்ப்பதாகவும் இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே, சுதந்திரத்திற்குப் பின் இந்திய வரலாற்றை எழுதிய இடதுசாரி வரலாற்றாசிரியர்களும், அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் சில தகவல்களைச் சேர்த்து ஆதாரமற்ற மதப்போர்களை நியாயப்படுத்தினர். 


இன்றைக்கு தமிழில் நவீன இலக்கிய ஏடுகள், சிற்றிதழ்கள், அறிவுஜீவித்தனமான சஞ்சிகைகள் இவற்றில் திரும்பத்திரும்ப திருஞானசம்பந்தர் வரலாற்றில் வரும் சமணர் கழுவேற்றம் பற்றி ஏராளமான ஜோடனைகளுடன் யாராவது ஒருவர் எழுதிக் கொண்டே இருக்கிறார். மதுரைக் கருகில் ஒரு ஊரில் எண்ணாயிரம் சமணர்களின் எலும்புகள் குவிந்துள்ளன, அவர்களை எரித்த சாம்பல் கூட இருக்கிறது என்றெல்லாம் சிறிது கூட அறிவியலுக்கும், பொதுப் புத்திக்கும் ஒவ்வாத வகையில் எழுதுகிறார்கள். எண்ணாயிரம் சமணர்களைக் கொன்று குவித்து, அந்த வன்முறை மூலம் வேத நெறியும், சைவ சமயம் பரவியதாக திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமே அதில் ஏதேனும் உண்மை இருக்குமோ என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.


இதற்கு இன்னொரு உள்நோக்கமும் இருக்கலாம். ஆபிரகாமிய மதங்களான 
கிறிஸ்தவம், இஸ்லாம் இவற்றின் வரலாறு முற்றாக வன்முறையும், போர்களும் நிறைந்தது. ஆரம்பகாலத்தில் அதற்கு முன்பிருந்த புராதன மதங்களையும், இயற்கை வழிபாட்டாளர்களையும் கிறிஸ்தவம் வன்முறை மூலமே அழித்தொழித்தது. அதன் பின் ஐரோப்பிய காலனியாதியாக்கமும், கிறிஸ்தவ மிஷன்களும் இணைந்து ஆபிரிக்கா, அமெரிக்கா மற்றும் உலகின் பல பகுதிகளில் பழங்குடிகளை ஈவிரக்கமின்றிக் கொன்றார்கள். அரேபியப் பாலைவனத்தில் இஸ்லாமிய மதம் தோன்றியவுடன், ரத்தவெறி கொண்ட போர்கள், கொள்ளைகள், கட்டாய மதமாற்றங்கள் ஆகிய வன்முறைச் செயல்கள் மூலமே பெரும்பாலும் பல பகுதிகளில் பரவியது. இந்த மனிதப் படுகொலைகள் தெளிவாக வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ள. வரலாறு இந்த மதங்கள் மீது ஏற்றிவைத்துள்ள சுமை இது. எனவே, “மதச்சார்பற்ற” வரலாற்றில், இதனை ஈடுசெய்வதற்காக, இந்திய மண்ணிலும் பெரிய மதப்போர்கள் நடந்திருப்பதாக, வேண்டுமென்றே பொய்களையும், தங்கள் காழ்ப்புணர்வுகளையுமே வரலாறு என்ற பெயரில் திரித்துக் கூறுகிறார்கள்.


பாரத நாட்டில் சமய விவாதங்கள் தொன்று தொட்டு நிகழ்ந்து வந்தன. வேத, உபநிஷதங்களிலும் சரி, புராண, இதிகாச இலக்கியங்களிலும் சரி, சமண, பௌத்த சமய நூல்களிலும் சரி, ஏராளமான உரையாடல்களையும், வாத விவாதங்களையும் நாம் பார்க்கிறோம். இன்றைக்கு இந்து மதத்தின் முக்கியமான தத்துவ நூலான விளங்கும் பகவத்கீதை இத்தகைய ஒரு உரையாடல் வடிவிலேயே உள்ளது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதையான பேராசிரியர் அமர்த்யா சென் Argumentative Indians என்ற தமது நூலில் இதனை மிக விரிவாகவே குறிப்பிடுகிறார். எனவே பண்டைய இந்திய வரலாற்றில் மத மோதல்கள், பூசல்கள் பற்றிய எல்லா சித்திரங்களும், கருத்துத் தளத்தில் நிகழ்ந்தவற்றையே குறிக்கின்றன. இந்த வாதங்கள் முற்றி, சிறிய அளவில் நேரடி வன்முறையாக சிற்சில இடங்களில் நடந்திருக்கலாம். ஆனால் மதப் போர்களும் பெரும் வன்முறையும் நடந்த்தற்கான ஆதாரங்கள் இல்லை என்றே கருதலாம்.


தமிழக சமணத்தின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் சம்பந்தர் காலத்தில் அது தனது வலுவிழந்த, சீரழிந்த நிலையில் இருந்தது. அதனால் தான் சம்பந்தர் அதனை வாதத்தில் எளிதாகவே வென்று விட முடிந்தது. சமணத் துறவிகள் சமூகத்தில் இருந்து மேலும் மேலும் விலகிச் சென்று தனிமையை (seclusion) நாடினர். காலப் போக்கில், இந்தத் தனிமைச் சூழல் பல மாந்திரீக, தாந்திரீக முறைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் வழிவகுத்தது. பிற்காலச் சமணத்தில் தீர்த்தங்கரர் வழிபாட்டை விட அதிகமாக பரிவார தேவதைகள் மற்றும் யட்சிகள் வழிபாடு வலியுறுத்தப் பட்டது. இந்த தேவதைகள் மோட்சத்திற்காக அல்ல, லௌகீக வாழ்க்கைப் பலன்களுக்காகவே வணங்கப் பட்டனர். தமிழகத்தின் பல சமணக் கோயில்களில் பத்மாவதி, லலிதாட்சி ஆகிய அழகு கொஞ்சும் சிலைகளை இன்றும் காணலாம். தமிழகத்தில் சமணம் வாழும் இன்றைய வடிவத்திலும், தீபங்குடி (தஞ்சை மாவட்டம்) போன்ற ஊர்களில் வாழும் சமணக் குடும்பங்கள் பெண்தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.


சமணர்களின் செயல்களாகப் பெரியபுராணம் கூறும் செய்திகள் மூலம் இது மேலும் உறுதியாகிறது. சம்பந்தர் பாண்டிநாட்டிற்கு வந்து சைவமடத்தில் தங்கியிருக்கையில், மந்திரத்தால் தீவைக்க முயன்றனர். பின்னர் அது பலிக்காமல் போகவே, உண்மையிலேயே தீமூட்டினர். மன்னனுக்கு வெப்பு நோய் பீடிக்க, பின்னர் மன்னன் நோய்தீர்ப்பவர் வெல்வார் என்ற போட்டிக்கும், பிறகு அனல் வாதம், புனல் வாதம் இவற்றிற்கும் சமணர் அறைகூவுகின்றனர். இதன் மூலம் ஆழ்ந்த சமய, தத்துவ விவாதத் தளத்திலிருந்து சமணம் வெகுவாக நகர்ந்து விட்டது புலனாகிறது. அதனால் தான், சைவம் மிக எளிதாகவே அதனை வென்று விட முடிந்தது.
பெரியபுராணத்தின் படி, வாதத்தில் தோற்றால் தங்களை வேந்தன் கழுவேற்றட்டும் என்று சமணர் தாமாகவே கூறுகின்றனர்.


அங்கது கேட்டு நின்ற அமணரும் அவர்மேற் சென்று பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமேயாகத் தங்கள் வாய் சோர்ந்து - தாமே தனிவாதில் அழிந்தோமாகில் "வெங் கழுவேற்றுவான் இவ்வேந்தனே" என்று சொன்னார்.அவர்கள் வாதத்தில் தோற்றவுடன், மன்னன் மந்திரியாகிய குலச்சிறையாரைப் பார்த்து, இவர்கள் மடத்திற்குத் தீவைத்த குற்றமும் புரிந்தவராதலின், தண்டிக்கப் படவேண்டியவர்கள், அதனால் இவர்களைக் கழுவில் ஏற்றுக என்று ஆணையிடுகிறான். அரச நீதியில் தலையிடுவது முறையாகாது என்று கருதி சம்பந்தர் திருவருளைச் சிந்தித்து, வாளாவிருந்தார், அதாவது அமைதியாக இருந்தார். குலச்சிறையார் அரசன் இட்ட ஆணையை நிறைவேற்றினார். புராணம் சொல்வது இது தான்.
இதில் “எண்ணாயிரவர்” என்பது எண்ணிக்கையை அல்ல, ஒரு குழுவினரைக் குறிக்கிறது என்றே கொள்வதற்கு ஆய்வு நோக்கில் இடமிருக்கிறது. 


மேலும் “கழுவேற்றம்” என்பது ஒரு குறியீட்டுச் செயலாகவே இருக்கலாம். வாதம் நடக்கும் ஞான சபையில் ஒரு கழுமரம் இருக்கும். வாத்த்தில் தோற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளும் முகமாக, தங்கள் தோளில் இருக்கும் உத்தரீயத்தைக் கழற்றி அந்தக் கழுமரத்தில் வீசுவார்கள். அதாவது அவர்களது ஞானமும், பாண்டித்யமும் அங்கே வீழ்ந்து விட்டதாக இதற்குப் பொருள். அந்தக் காலகட்டத்துச் சூழலில், கற்றறிந்த ஒரு பண்டிதனுக்கு உயிர்போவதை விட அவமானகரமான ஒரு செயலாக இது கருதப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
இன்னும் இரண்டு முக்கியமான விஷயங்கள் கவனத்திற்குரியவை.
ஒன்று, சம்பந்தர் காலத்திற்குப் பின்னும், தமிழகத்தின் பல பகுதிகளில், சமணக் கோயில்களும், மடங்களும் எந்த இடையூறும் இல்லாமல் இன்றுவரை செயல்பட்டு வருகின்றன.
இரண்டு, கழுவேற்றம் பற்றிய இந்தக் குறிப்பு சமணர்களது எந்த நூல்களிலும் இல்லை.


 அது சைவர்கள் தங்கள் வெற்றிக்காக உருவாக்கிய கதைமட்டுமே என்கிறார்கள். காரணம் அச்சம்பவம் குறித்து தோற்றவர்கள் தரப்பில் ஒரு ஆவணம் கூட இல்லை. இத்தனைக்கும் கல்வியை அடிப்படையாக்க கொண்ட சமணம் விரிவான ஆவணப்பதிவை வழக்கமாக்க கொண்டது. சமணத்தின் வரலாறு அதன் தென்னகத் தலைநகர்களான சிரவணபெலகொளா, மற்றும் முடுபத்ரே மடங்களில் தெளிவாகவே பேணப்படுகிறது.  


சமண, பௌத்த தத்துவங்களின் ”சூனியம்” என்ற வெறுமைக் கோட்பாடு மறுப்பும், விரக்தியும் சார்ந்த வாழ்க்கை நெறிகளை நோக்கி இட்டுச் சென்றது. அதற்கு மாற்றாக வேதாந்தமும், சைவ சமயமும் முன்வைத்த “பூரணம்” என்ற கோட்பாடு உயர்தத்துவ அளவில் நிறைவானதாகவும், அதே சமயம் வாழ்க்கையின் வர்ணஜாலங்கள் அனைத்தையும் அர்த்தமுள்ளதாக ஆக்குவதாகவும் இருந்து. ”உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்” ”அலகில் சோதியன்” ஆன பரம்பொருளை “நிலவுலாவிய நீர்மலி வேணியன்” ஆகவும் “அம்பலத்து ஆடுவான்” ஆகவும் காணும் சமய நெறியில், உயர்தத்துவமும், உணர்ச்சிமயமான பக்தியும், கவித்துவமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தன.


“குன்றெலாம் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலார் அடிவருடச் செழுங்கரும்பு கண்வளரும் திருவையாறே”என்பது சம்பந்தர் தேவாரம். இப்படி ஒவ்வொரு திருத்தலத்திலும் நதிகளையும், மலைகளையும், வயல்களையும், சோலைகளையும் உவகை பொங்க அவர் வர்ணித்துச் செல்வதன் காரணம் இவை அனைத்தும் அந்த பூரணத்தின் வெளிப்படுகளாகவே அவருக்குத் தோன்றுகின்றன.


”மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் செல்கதிக்கு யாதுமோர் குறைவிலை”

என்று வாழ்க்கையை இம்மை, மறுமை இரண்டிலும் சாரமுள்ளதாக சம்பந்தரின் பாடல் காண்கிறது. இசை, நடனம், சிற்பம் ஆகிய கலைகள், கோயில்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், களியாட்டங்கள் ஆகியவற்றால் நிரம்பிய சைவ சமயம் சமூகத்தில் மிகப் பெரிய சக்தியாக ஆனதில் வியப்பே இல்லை. காலப் போக்கில் இதுவே சமணம் தமிழகத்தில் தேய்ந்து மறையவும் காரணமாயிற்று.
எனவே, சமணத்தின் மீதான சைவத்தின் வெற்றி தத்துவச் செழுமையாலும், அது உருவாக்கிய வாழ்வியல் நெறிகளின் முழுமையாலும் தான் நிகழ்ந்ததே அன்றி வன்முறையாலோ, ஆக்கிரமிப்பாலோ நிகழ்ந்தது அல்ல என்று உறுதியாகக் கூறலாம்.
இன்றைக்கு சமண சமயத்தவர்களுக்கிடையிலும், சைவ, வைணவ சமயங்களைச் சேர்ந்த இந்துக்களுடையிலும் எந்தவிதமான மதப் பூசலோ, மோதலோ இல்லை. இந்தியா முழுவதும் சமணர்கள் விநாயகர், லட்சுமி, திருமால் முதலிய தெய்வ வடிவங்களை தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களோடு இணைத்து வைத்துப் பூசிப்பதையும், இந்துக்கள் சமணக்கோயில்களுக்குச் செல்வதையும் சகஜமாகப் பார்க்கிறோம். அகிம்சை, தர்மம், நீதிநெறிகள் ஆகிய துறைகளிலும் இரு மதங்கள் கொண்டும், கொடுத்தும், ஊடியும் வளர்ந்து செழித்திருக்கின்றன.


"கழு என்பதன் பொருள் கண்டம். கண்டம் என்பது விதிவழி மரணம். அதனால்தான் இந்தக் கொலைக்கருவியை "கழுமரம்" என்றனர். 

"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே. 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உயிர்மெய்


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி; பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி; கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்; வல்லசுரர் ஆகி முனிவராய்த் தேவராய் .... இது தொல்காப்பியர் தனது இலக்கணநூலில் கூறியுள்ள ஒரு அறிவில் இருந்து 6 அறிவுவரையாக உயிரினங்களில் மறுபிறப்புப் தோன்றும் என்பதை மாணிக்கவாசகர் தனது பாடலில் வைத்த கருத்தாகும். 

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்கூன் குருடு செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பிறந்த காலையின்கல்வியும் செல்வமும் தான் பெறுதல் அரிது....இது ஓளவையாரின் கூற்றாகும். 

ஒருமனிதன் 100 வருடங்கள் வாழலாம் என் வைத்துக்கொண்டால் 40 வருடங்கள் நித்திரையில் கழிந்து விடுகின்றது. 15 வருடங்கள் குழந்தைப் பருவத்தோடும் ஒன்றுமறியாப் பருவமாகவும் கழிந்து விடுகின்றது. மீதமுள்ள 45 வருடத்தில் படிப்பு;தொழில்; குடும்பம்; பிள்ளைகள்; நோய்பிணி; துன்பம்; மகிழ்ச்சி; பகை; கோபம்; முதுமை என்று கழிந்து இறப்புவரை சென்று விடுகின்றது. இதில் இறைவனை நினைக்கவோ ஆன்மிகத்தில் ஈடுபட்டு பொதுவாழ்வு வாழவோ ஒருவனுக்குப் போதிய அளவு அவகாசம் கிடைப்பதில்லை. டார்வினது கூற்றுப்படி மனிதன் உலக உயர்ந்த விலங்கினம் என்பதுவே சரியாக இருக்கின்றது. 

இவற்றின் அடிப்படையில் தொல்காப்பியத்தின் சூத்திரங்கள் கூறும் விளக்கங்களே இன்றுவரை பழமைவாய்ந்த தேசவழமைச் சட்டம்போல் இன்றுவரை மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கின்றது. 

உடம்பினால் அறிவது ஓரறிவு கொண்ட உயிர் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. 
"புல்லும் மரனும் ஓரறிவினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே!
அதாவது புல் மரம் முதலியனவற்றோடு கொட்டி; தாமரை என்பனவும் இவற்றுள் அடங்கும். 

உடம்பினாலும் வாயினாலும் அறிவது ஈரறிவு கொண்ட உயிர் என்று வலையறுக்கப்பட்டுள்ளது. 
"நந்தும் முரளும் ஈரறிவினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே!
அதாவது நந்து முரள் போன்றவற்றோடு சங்கு நத்தை போன்றனவும் இவற்றுள் அடங்கும். 
உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் அறிவது மூவறிவென்று வரையறுக்கப்பட்டுள்ளது.
சிதலும் எறும்பும் மூவறிவினவேபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே!
அதாவது சிதல் எறும்பு போன்றவற்றோடு அட்டை போன்றனவும் அடங்கும்

உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் கண்ணினாலும் அறிவது நான்கறிவாகும் 
"நண்டும் தும்பியும் நான்கறிவினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே!
அதாவது நண்டு தும்பிபோன்றவை இவற்றுள் அடங்கும்.

உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் கண்ணினாலும் செவியினாலும் அறிவது ஐந்தறிவாகும்
மாவும் புள்ளும் ஐயறிவினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே!
அதாவது நாலுகால் விலங்குகளும் பறவைகளும் பாமபு மீன் முதலை ஆமை போன்றனவும் இதனுள் அடங்கும். 

உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் கண்ணினாலும் செவியினாலும் (இவற்றையே ஐம்புலன்னள் என்பர்) மனத்தினாலும் (பகுத்தறிவு)அறிந்து கொள்ளுதல் ஆறறிவாகும்.
மக்கள் தாமே ஆறறிவுயிரே 
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே!
அதாவது மனிதர்களுடன் தேவர்கள் அசுரர் இயக்கர் முதுலானவரும் இதனுள் அடங்குவர். 
ஒருசாரார் கிளி குரங்கு யானை முதுலானவும் ஆறறிவு உடையது எனக்கூறுவர். 

அறிவு என்பதனை பலபாகங்களாக வகுத்து நோக்கலாம்! கல்வி அறிவு கேள்வி அறிவு
அனுபவ அறிவு தன்னறிவு சொல்லறிவு நுண்ணறிவு
இயற்கையறிவு உணர்வறிவு தொழில்சார் அறிவு ஆள்மனப்பதிவறிவு
 அறிவை விளக்கும் திருவள்ளுவர்.
சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ
 நற்றின்பால் உய்ப்பது அறிவு.
பொருள்: மனத்தை அது சென்ற இடங்களிலேயே செல்லவிடாமல் தீமைகளிலிருந்து விலக்கி, நன்மையில் மட்டுமே செல்லவிடுவது அறிவு ஆகும்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
 மெய்ப்பொருள் காண்பது அறிவு.
பொருள்: எந்தப் பொருளைப்பற்றியும், எவரெவரிடமிருந்து கேட்பதானாலும், அப் பொருளினது மெய்யான தன்மைகளைக் காண்பதுதான் அறிவு.  
 வேதகாலத்தில் அறிவு.

 மேல் அறிவு. ஆன்மிகத்தேடல் மூலம் பெறும் அறிவு மேல் அறிவு எனப்பட்டது.
 கீழ் அறிவு. கலைகளில் உள்ளவை கீழ் அறிவு.

சமணம் மேலோங்கிய காலத்தில் அறிவு.
 நேர் அறிவு. சுய அனுபவம் ( பிறர் மனதினை உணருதலும் சுய அனுபவமாக கருதப்பட்டது).

வழி அறிவு. படித்து பெற்றவை, பிறர் சொல்ல கேட்டு பெற்றவை. பெற்றவை யாவும் வழி அறிவாக கருதப்பட்டது.

அறிவின் வரத்துக்கான பல்வேறு வழிகள்
விளங்கிக்கொள்ளல்; தெரிந்துகொள்ளல்; புரிந்துகொள்ளல்;கற்றுக்கொள்ளல்
உணர்ந்துகொள்ளல்;அறிந்துகொள்ளல; அனுபவப்படுதல்
 மேற்க்கண்ட யாவும் அறிவின் வரத்துக்கான பல்வேறு வழிகளாகும். இவ்வழிகள் யாவையும் எண்ணம் என்ற ஒன்று இல்லாமல் திறப்பது கடினம். தொடர்ச்சியான ஓங்கிய சிந்தனையின் மூலம்தான் அறிவின் கதவுகளை மெல்ல மெல்ல திறக்க முடியும். சிந்திக்கும் தன்மையும் அதன் விளைவை கிரகிக்கும் தன்மையும் இல்லாமல் அறிவு வளர்சியடைவதில்லை.
"தோன்றிற் புகழெடு தோன்றுக அகிதிலார் தோன்றலில் தோன்றாமை நன்றே" (குறள்)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சித்தம் எல்லாம் எமக்கு சிவமயமே


, 2012 at 6:43am
புலமை பெற்றவன் புலவன் என்பதுபோல் சித்துக்களை உடையவன் சித்தன் எனப்புடுகிறான். வள்ளுவரது கூற்றுப்படி நிறைநிலை மாந்தர்கள் என்பவர்கள் யார் என்ற கேள்விக்கு விடைகாணுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். சொல்லப்போனால், மனிதனாகப் பிறந்து மானிடவாழ்வில் சித்தத்தை அடக்கித் தாங்களும் சிவமாய், இறையாய் மாறும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள். இவர்களையே நாம் சித்தர்கள் என்று அழைக்கின்றோம். 

நமது அறிவிற்கு எட்டிய 18 பேர் மட்டும் சித்தர்கள் என்று கூறிவிடமுடியாது. பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் இறைவனது நிலையில் இருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயல்வது புத்திசாலித்துனம் அல்லஎன்பது என் கருத்து. பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.சித்தர்கள் பார்ஐவபட்டால் பல சித்துக்கள் மானிடர்களுக்கு வந்துசேரும் என்பது ஒரு ஐதிகம்.

சித்தர்களை எதற்காகத் தேடுகிறோம் என்பதைப் பொறுத்தே அவர்களது பார்வைகள் ஆத்மாக்களில் வியாபிக்க ஏதுவாகிறது. லௌகீக சுகங்களுக்காகவா, அல்லது ஆன்ம அனுபூதி பெறவா என்பதைப் பொறுத்து அது சுயநலமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். ஆனாலும் சங்கரரது அத்வைதத் தத்துவத்தின் படி அனைத்தும் அகத்துள்ளே அமைந்திருப்பதால், அதை வெளியே தேடுவதில் பயனில்லை என்பது ஒரு கருத்து. அதாவது இறைவனை வெளியே தேடுதல் ஆன்மவிடுதலையைத் தராது என்பது பொருள்.

இதைத் தான் பகவான் ரமணர், “நீ யார் என்பதை உன்னுள் பார். அதை அறிந்தால் மற்றவையெல்லாம் தானாய் விளங்கும்” என்கிறார். சொல்லப் போனால் “நாம் யார்” என்பதை அறிந்தால் அறிய வேண்டிய வேறு விஷயங்களே எதுவும் இல்லை என்பதே ரமணர் கருத்து. அதுவே ஆத்மா அனுபூதி – தன்னை உணர்வதன் மூலம் இறை மெஞ்ஞானத்தை உணர்தல் – “அகம் பிரம்மாஸ்ஸ்மி” தத்துவம். அதை முழுமையாக உணர்ந்தால் அறிய வேண்டியது எதுவும் இல்லை. யாரையும் தேட வேண்டியதும் இல்லை. ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு ஜென்மத்திலும்  நடக்கலாம். அல்லது பல யுகங்களும் ஆகலாம். அது, ஆன்மாவின் பக்குவத்தைப் பொறுத்து வேறுபடும். 

உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் ஆன்ம உயர்வுக்கும், சமுதூய நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான திறமையும் பொடுப்பனையும் , நல்வினையும் நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம். 

சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.

மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம். சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்…

 தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை; 
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்; 
தன்னை அறியும் அறிவை அறிந்தபின் 
தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!

என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.
அகத்தியரும்.. மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே!என்கிறார்.

ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது? வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது? யார் உதவுவார்கள்? ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன. சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?. யார் உதவி செய்வார்கள்? இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே!

சித்தரின் பெயர் - பிறந்த மாதம் - நட்சத்திரம் - வாழ்நாள் - சமாதியடைந்த இடம்.
 
1- திருமூலர் - புரட்டாதி – அவிட்டம் - 3000 வருடம் 13 நாட்கள் – சிதம்பரம்.
 2- இராமதேவர்– மாசி – பூரம் - 700 வருடம் 06 நாட்கள் – அழகர்மலை.
 3- அகத்தியர் – மார்கழி – ஆயில்யம் - 4யுகம் 48 நாட்கள் - திருவனந்தபுரம்.
 4- கொங்கணர் – சித்திரை – உத்திராடம் - 800 வருடம் 16 நாட்கள் – திருப்பதி.
 5- கமலமுனி – வைகாசி – பூசம் - 4000 வருடம் 48 நாட்கள் திருவாரூர்.
 6- சட்டமுனி – ஆவணி - மிருகசீரிடம் - 800 வருடம் 14 நாட்கள் – திருவரங்கம்.
 7- கருவூரார் – சித்திரை – அஸ்தம் - 300 வருடம் 42 நாட்கள் – கருவூர்(கரூர்).
 8- சுந்தரானந்தர் – ஆவணி – ரேவதி - 800 வருடம் 28 நாட்கள் – மதுரை.
 9- வான்மீகர் – புரட்டாதி – அனுசம் - 700 வருடம் 32 நாட்கள் – எட்டுக்குடி.
 10- நந்திதேவர் –வைகாசி – விசாகம் - 700 வருடம் 03 நாட்கள் – காசி.
 11- பாம்பாட்டி சித்தர் – கார்த்திகை – மிருகசீரிடம் - 123 வருடம் 14 நாட்கள் – சங்கரன்கோவில். 
 12- போகர் – வைகாசி – பரணி - 300 வருடம் 18 நாட்கள் – பழனி.
 13- மச்சமுனி – ஆடி – ரோகிணி - 300 வருடம் 62 நாட்கள் – திருப்பரங்குன்றம்.
 14- பதஞ்சலி – பங்குனி – மூலம் - 5யுகம் 7நாட்கள் - இராமேசுவரம்.
 15- தன்வந்திரி – ஐப்பசி – புனர்பூசம் - 800 வருடம் 32 நாட்கள் – வைத்தீச்வரன்கோவில்.
 16- கோரக்கர் – கார்த்திகை- ஆயில்யம் - 880 வருடம் 11 நாட்கள் – பேரூர்.
 17- குதம்பை சித்தர் – ஆடி – விசாகம் - 1800 வருடம் 16 நாட்கள் – மாயவரம்.
 18- இடைக்காடர் – புரட்டாதி – திருவாதிரை - 600 வருடம் 18 நாட்கள் – திருவண்ணாமலை.

அட்டமா சித்திகள்

1- அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல். 
 2- மகிமா - மலையைப் போல் பெரிதாதல். 
 3- இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல். 
 4- கரிமா - மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல். 
 5- பிராத்தி - மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடைய, அவற்றைப் பெறுதல்.
 6- பிராகாமியம் - கூடு விட்டுக் கூடு பாய்தல். 
 7- வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல். 
 8- ஈசத்துவம்(இறைத்துவம்) - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.


இறந்தவனை எழுப்புதல்
திருநாவுக்கரசர், பாம்பு தீண்டி இறந்தவரை எழுப்பியதாகக் கூறப்படும். ‘நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்மே’ என்ற பாடல் சான்றாக அமையும். அவ்வகைச் சித்தொன்றும் சித்தர்கள் ஆடிய சித்தில் காணப்படுகிறது.
“காரப்பா அரவினுட நஞ்சுப் பித்துங்; கருவாக மத்தித்து ரவியில் வைத்து
தீரப்பா ரெண்டு பத்து நாளைக் குள்ளே; சிவசிவாஎன் சொல்வேன் கருவாய் நிற்கும்
ஆரப்பா அறிவார்கள் ஐங்கோ லத்தில்; அழுத்திமிக மத்திக்க மையாய்ப் போகும்

என்னும் மையைப் பாம்பு கடித்து இறந்தவர் கண்ணில் தீட்டி தலையில் ஒரு தட்டு தட்ட விஷம் இறங்கி எழுந்து நிற்பார் என்பதிலிருந்து, சித்துகளோடு தொடர்புடைய நிகழ்ச்சியே திருநாவுக்கரசர் செய்தது எனத் தெரிகிறது. மேலும் திருநாவுக்கரசரைக் கல்லைக் கட்டி கடலில் வீசியதும் ஒருவகைச் சித்துவினால்தான் தண்ணீரில் மூச்சடக்கியிருந்து வெளியே வந்தார் எனக் கருதலாம்.

திருவிளையாடற் புராணங் கூறும் நரிபரியானதும் பரி நரியானதும் சிவபெருமானின் திருவிளையாடலாகக் காட்டப் பெறும். அதுவும் ஒரு வகைச் சித்து எனக் கூறப்படுவதைக் காணலாம்.

“வாங்காமல் நரிபரியாஞ் சித்து சொல்வேன்; வணக்கமுடன் வாங்கினதோர் தைலந் தன்னை
தீங்கில்லாப் புழுகொடு சவ்வாத சேர்ந்து;சிவசிவா மத்தித்து ரவிக்கண் ணாடி; 
பாங்காக பரி நரியாய்ப் பாரு பாரு; பறக்கிறதோர் குதிரையைப் போல் கண்ணில் காணும்

பாரதத்தில் சூரியனைக் கிருஷ்ணன் மறைத்ததும், இராமாயணத்தில் ஜானகி அக்கினிப் பிரவேசம் செய்ததும், அனுமன் சஞ்சீவி மலையைக் கையில் சுமந்து வருவதும் சித்தர்கள் கூறும் சித்துகளின் வடிவங்களாகும். புராணங்களின் பாத்திரங்களை உயர்த்திக் காட்ட வேண்டுமென்பதற்காகக் காட்டப்பட்ட காட்சிகளாகக் கொள்வதில் தவறில்லை. 

சித்தர்கள் வழி வாழ விரும்புபவர்களுக்கு இது எனது ஒரு சிறு துரும்பே தவிர துடுப்பு அல்ல. நன்றி வாசகர்களே.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சங்கம் சொன்ன சங்கதிகள்.



தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலத்தில் எழுந்த அகத்திணை புறத்திணை கூறும் நூல்களைவிட ஒரு மனிதனது நோய்க்கான குணப்படுத்தும் மருந்துகளையும் வழிமுறைகளையும் அக்காலத்தில் எழுந்த ஏனைய சில நூல்கள் கூறுகின்றன.

மருந்தின் பெயரால் அமைந்த சங்க நூல்கள்;மருந்தின் பயனை உணர்ந்திருந்த சங்க கால இலக்கியப் புலவர்கள், தாங்கள் இயற்றிய நூல்களுக்கு மருந்தின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர். அவ்வாறு அமைந்த நூல்களாகக் காணப்படுபவை திரிகடுகம்' ஏலாதி, சிறுபஞ்சமூலம் ஆகிய மூன்று நூல்களாகும். இந்நூல்கள் மனத்தில் தோன்றுகின்ற மாசுகளை நீக்கி, மக்களை நல்வழிப் படுத்துவதற்காக இயற்றப்பெற்ற அறநூல்களாகும்.

திரிகடுகம்; திரிகடுகம்' என்பது சுக்கு, மிளகு' திப்பிலி என்னும் மூன்று மருந்துகளின் கூட்டுப் பெயராகும். இம்மருந்து மூன்று மருந்துகளைக் கொண்டிருப்பதைப் போல' இந்நூலின் செய்யுள் ஒவ்வொன்றிலும் மூன்று கருத்துக்களைக் கூறி ஓர் அறநெறியை வலியுறுத்திக் கூறுவது போல் அமைந்திருக்கும்.

 சிறுபஞ்சமூலம்; சிறுபஞ்சமூலம்' என்பது கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி' பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகைகளின் வேர்களைக் கொண்ட கூட்டுப் பெயராகும். இந்நூலின் செய்யுள்கள் ஐந்து கருத்துகளைக் கூறி ஒரு நீதியை உரைப்பதாக அமைந்திருக்கின்றது.

ஏலாதி; ஏலாதி' என்பது ஏலம், இலவங்கம்' சிறுநாகப்பூ, மிளகு' திப்பிலி, சுக்கு ஆகிய ஆறு பொருள்களின் கூட்டுப் பெயராகும். இதன் பாடல்கள் ஆறு கருத்துகளைக் கொண்டு ஒரு நெறியை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.
மேற்கண்ட இம்மூன்று கூட்டு மருந்துகளும் சிறப்புடன் போற்றப்படுகின்ற மருந்துகளாக தமிழ் மருத்துவத்தில் இடம் பெறுவதாகும். இம்மருந்துகள் சித்த மருத்துவம்' ஆயுர் வேதம் என்னும் இரண்டு மருத்துவத்திலும் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், இம்மருந்தின் தோற்றம்' பழந்தமிழர் மருத்துவ முறையைச் சார்ந்ததாகும்

மருந்தின் பெயரால் சங்ககாலப் புலவர்கள்; மருந்து; மருத்துவம் ஆகியவற்றின் பயனையும் சிறப்பினையும் அறிந்த சங்ககாலப் புலவர்கள் பலர் இருந்திருக்கின்றனர். அவர்களுள் நல்லாதனார் (திரிகடுகம்)' காரியாசான் (சிறுபஞ்சமூலம்), கணிமேதாவியார் (ஏலாதி), கபிலர் (குறிஞ்சிப் பாட்டு) ஆகிய நால்வரும் தங்கள் பெயரை மருந்தின் பெயரால் அமைத்துக் கொள்ள வில்லை என்றாலும்' இவர்களின் பாடல்களில் மருத்துவச் செய்திகள் இடம் பெற்றிருந்தன. ஆனால், மருந்துப் பொருளின் பெயரால் புலவர்கள் என்பது, அவர்களின் பெயரைக் கொண்டு அறிய முடிகிறது. அவ்வாறு பெயரமைந்த புலவர்கள், கடுகு பெருந்தேவனார் (கடுகு) போந்தைப் பசலையார் (பனை),வெள்ளெருக்கிலையார் (வெள் ளெருக்கு),காவட்டனார் (காவட்டம் புல்),இந்நான்கு பெயரிலும் பொதிந்துள்ள மருந்தின் பெயர்கள் மருத்துவ நூல்களில் காணக் கூடியதாக இருக்கின்றன.

புலவன் என்றால் கவிபாடுதல் என்பது மட்டும் பொருள் அல்ல. ஒரு துறையில் புலமை பெற்றவனையே புலவன் என்று அழைத்தூர்கள். மருத்துவப் புலவர்கள் மருந்தினை அறிந்த புலவர்களைப் போல மருத்துவத்தைத் தொழிலாக கொண்ட புலவர்களும் இருந்திருக்கின்றனர். திருவள்ளுவ மாலை11ஆம் பாடலைப் பாடிய புலவர் ‘மருத்துவன் தாமோதரனார்' என்பதாகும். இவரும், இவரைத் தொடர்ந்து, ‘மருத்துவன் நல்லச் சுதனார்' என்பவர், பரிபாடலின் 6,8,9,10,15,19 ஆகிய ஆறு பாடல் களுக்கும் இசையமைத்த இசையறி புலவராகக் காணப்படுகின்றார்.இவர்கள் இருவரின் பாடல்கள் சங்கப் பாடல் தொகுப்பில் இடம் பெறவில்லை. என்றாலும் ‘மருத்துவன்' என்னும் தொழிற் பெயரை, பெயர் அடையாகக் கொண்டு வழங்கிவரக் காண்கிறோம்.

சங்ககால மருத்துவப் பாடல்கள்; சங்க காலத்தில் இலக்கியப் புலவர்களாலும் மருத்துவப் புலவர்களாலும் இயற்றப் பெற்ற பாடல்களில், இலக்கியப் புலவர்கள் இயற்றிய பாடல்களில் ஒரு சில மட்டும் சங்க இலக்கியம் என்னும் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. சங்க காலப் புலவர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் நற்றத்தனார்' மது மலர்த்தண்டார்ப் பகுமனார் ஆகிய புலவர்களின் பாடல்கள் சங்கத் தொகுப்பில் காணப் பெறவில்லை. காரணம், சங்கப் பாடல்கள் அகம், புறம் என்னும் இரண்டு பொருட்பகுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் பெற்றதாகும். இப்புலவர்களின் பாடல்கள் இவ்விரண்டு பொருட் பகுப்பில் அடங்காமல் மருத்துவப் பொருளை உள்ளடக்கியதாக இருந்தமையால், சங்க நூல் தொகுத்தோரால் கைவிடப்பட்டிருக்கின்றன.
‘தேரையர் யமக வெண்பா' என்னும் மருத்துவ நூலுக்குள் உரைமேற்கோளாக அமைந்த பாடல்கள் பல. அவற்றுள் சில சங்கப் பாடல்கள் எனவும், சங்கப் புலவர்கள் பெயரும் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. அந்நூல் உரையாசிரியர் குறிப்பிட்ட சங்கப் பாடல்கள் சங்க நூல்கள் தொகுப்பினுள் காணப்பெறாதவை.

நளிர்சுரத்திற்கு மருந்து; இரசம்' தாளகம் ஆகிய இரண்டும் சீனம், கிரேக்கம், இத்தாலி போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இருப்பினும் அந்நாடுகள் உள்மருந்தாக அவற்றைப் பயன் படுத்துவதில்லை. ஆனால், அவற்றைத் தமிழ் மருத்துவர்கள் பண்டு தொட்டே பயன்படுத்தியுள்ளனர். சங்ககாலப் புலவரான நற்றத்தனார்' தாளகம் நளிர்சுரத்திற்கு மருந்தென்று குறிப்பிடுகின்றார்.

முந்நீர் சிவணிய செந்நீர் யாக்கை;முப்பிணி யானவை வெப்பமா நளிரே
மாறிய நாள்பகல் வீறிய யாமமும்; மாசுறு காய மூசுபு வெவ்வினை
மருந்தனு பானமும் இருந்தையில் தாளகம்; அடுநறா முத்திறம் இடுமுறை இல்செய
மீச்சுரம் ஆகிய மீசுரப் படலிகை; பெருமூல வைக்கெதிர் பூளைக் குவையே. (நற்றத்தனார்)
காற்றிற்கு எதிர் நிற்கவொண்ணாப் பூளைப் பூவைப் போல, மிக்குயர்ந்த நளிர்சுரமும் தாளகத்தின் முன் மறைந்தோடிப் போகிற தாம். நச்சுத் தன்மை உடைய தாளகம்,

சுத்தியினாலும் (Purification) மூலிகைச் சுருக்கினாலும் (Triturah)மருந்தாகிறதென்பர்.இதனால் தாளகம் என்னும் மருந்தின் பயன் சங்க காலத்திற்கும் முன்னரே அறியப் பட்டிருந்தது என்பது தெளிவு.

முப்பிணிகளைப் போக்கும் மருந்து; சங்கப் புலவர் பாடிய ஆற்றுப்படை ஆசிரியப்பா என்னும் பாடல் உரையாசிரியரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அப்பாடல், சக்தி பீசம் என்று கூறப்படுகின்ற கந்தகம், கந்தக பற்பம் என்னும் மருந்தானதால், அது வாதம், பித்தம், ஐயம் என்னும் மூன்று வகை நாடிகளின் குற்றங்களில் உண்டாகக் கூடிய முப்பிணிகளைப் போக்குகின்ற மருந்தாகும் என்னும் கருத்தை உரைப்பதாக அமைந்துள்ளது.

"" சத்தி பீசத் தாவளப் பொடிநிறை; யுத்த மாதி யோரிரு நாற்பால்
வினைமதி யாகா விதிமற் றுளசில; வாருணத் தினைமுதல் வரைவன மத்திமம்
வாடுறு நூன்மைய வாய்க்கின்மே வளிமுத; லாகிய நோய்க் கணமடைக்கலப் படுமுனம்
வேகிய மருத்துவர் வெருக்கொளச் சென்றது; நோய்ப்பகை யாளரோ நொடிந்தன சிதறிப்
பேய்ப்புல னெனவயிர் பெரும்பிணி யாளுநர்; தேவகுலமே யதுபு தெருமரற் பருவர
லாவகுலா லன்றிரி யாழியிற் பெய்துற்; றியங்குபு மாற்றமு மிலரென முன்னரோ.''43
(மருத்துவ ஆற்றுப்படை)

நஞ்சு நோய்க்கும் பெண்ணினச் சேர்க்கையால் வரும் நோய்க்கும் மருந்து.

உணவினாலும் பிறவற்றாலும் உடலுக்குள் செல்கின்ற நஞ்சினால் உண்டாகின்ற நோய்க்கும்' பெண்ணினச் சேர்க்கையினால் தோன்றக் கூடிய உறுப்பு நோய்க்கும் கந்தகத்தினால் செய்யப்படுகின்ற மருந்தின் குறிப்புகள் சங்கச் செய்யுள் என உரையாசிரியரால் மேற்கோளாகக் காட்டப் பெற்ற பாடலொன்றில் காணப்படுகிறது.

"" பன்னிரு வகைபெறு முன்னிய பருவர; லினமிவை முதலென நனவுறு வளிமுத
லாகிய பருவரண் மியவுயிர் நிலை; யேகிய நாபியி லுறுவிட முறப்
பெறுமொரு நலிவரப் பெற்ற தான் மேன்முறை; செறிவுறு மொன்பது தீவினை வகையொரு
பொரியரவு ருவிடப் போக்கு மேன் மீறிய; பெண்போகப் பிணி நண்பயப் பிணியொரு
பன்னிருவகை யெனப் படருறு மிடரென; வந்தடர் தானை மறவரு மிறுதிச் செய்
காலனிற் காந்துபு கனலெனக் கன்னற்; வேலென பற்பல வினையமா விளைத்துழி;
நால்வகை யாணமு மேலணிக் காப்பும்; பவனனைக் கண்டுழிப் பஞ்சினி லிரியவாங்
கெய்திய மீளியை யொய்தினிற் கண்டுழிக்; கவன்ற நெஞ்சினர் கவன்ற வானனமென்
பங்கயங் குவியப் பொங்கொளி கான்று; நெடுமா லுந்திக் கடி ""மலர் பூத்தெனப்
பின்னருங் கவினுறு முன்னிய கங்குலில்"

மருத்துவக்குலம்
பண்டைய காலத் தமிழர்கள் கலையிலும் கல்வியிலும் சிறந் திருந்ததைப் போல மருத்துவத்திலும் சிறந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றாக, ஆய், எயினன் என்னும் இரண்டு இனத்தவர்கள் அரசர்களின் படைத்தலைவர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் ‘வைத்திய சிகாமணி' என்று அரசர்களால் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களின் முன்னோர்கள் கைக்கொண்டு வந்த ‘மருத்துவக் குலத்தின்' குடிப்பெயரே ஆய் (இடையர்), எயினன்(வேடர்)எனப்படுவது. போர்க் கலைகளில் சிறந்து விளங்குகின்ற படைத்தலைவர்கள், போர் வீரர்களுக்கு ஏற்படுகின்ற புண்களுக்கும் நோய்களுக்கும் செய்யும் மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர்களாய் இருந்திருக்கின்றனர். எயினர் குலத்தில் வைத்தியத் தொழிலைப் பரம்பரையாகக் கொண்டிருந்த மருத்துவக் குடியில் பிறந்தவன், பாண்டியன் படைத்தலைவன் ‘மாறன்காரி' என்பது குறிப்பிடத்தக்கது. என்று மு. இராகவையங்கார் குறிப்பிடுகின்றார். ஒரு குலத்தினரே மருத்துவ இனத்தவராக இருந்தனர் என்பதனால், பண்டைய தமிழகத்தில் மருத்துவம் தழைத் தோங்கியிருந்ததாகக் கருதலாம்.

மருத்துவர் குடியிருப்பு
பூம்புகார் நகரத்தில் அமைந்திருந்த வீதிகளில் மருத்துவத் தொழிலுடையோர் ஒரு தெருவில் குடிவாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அத்தகைய மருத்துவக் குடியினர் ‘ஆயுள் வேதர்' என்று குறிப்பிடப் பட்டனர். அவர்கள், மருத்துவத் தொழிலுடன்' மருத்துவ நூலும் இயற்றுவோர் என்னும் குறிப்பு காணப்படுகிறது. இக்குறிப்பினால், மருத்துவத் தொழிலுடையோர் மருத்துவ நூலாசிரியர்களாகவும் இருந்துள்ளனர் என்பது தெரிகிறது.

மருத்துவன்
இலக்கியங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மருத்துவம் சார்ந்த மரம்' செடி, கொடிகள் இடம் பெறுவதைச் சிறப்பாகக் கொள்ள முடியாதெனினும், மருந்து தரும் பயன்களினால் மருந்துப்பொருள் இன்னது என அறிந்து' அவற்றைப் போற்றிப் பாதுக்காக்கும் தன்மையையும் பெற்றிருந்தனர் எனும்போது, மருத்துவம் எந்த அளவிற்கு மக்களின் வாழ்க்கையோடு இயைந்து வளர்ந்து கொண் டிருந்தது என்பதை அறிய முடிகிறது. தாவரங்களிலிருந்து பெறப்படுகின்ற எண்ணெய்களில் எள்ளின் பயன்பாடு, சங்க காலத்திலிருந்து இன்றுவரை சிறந்த இடத்தைப் பெறுகிறது. (எள்+நெய்=எண்ணெய்) எள்ளின் பயனைக் கருத்திற் கொண்டு எள்ளிற்கும் மருத்துவம் காணப்பட்டது. எள்ளிற்கு வரும் நோய் ‘மகுளி' என்றும், அவ்வாறு நோயுற்ற எள்ளின் சுவை கைப்புச் சுவை கொண்டதாக இருக்கு மென்றும் உரைக்கப்படுகிறது.

மருத்துவன் தருகின்ற மருந்தானது உடலுக்குள் சென்று நோயைப் போக்கி மகிழ்ச்சியைத் தருவது போல' எனது சொற்கள் அவனுடைய மனத்தில் தோன்றிய மாசுகளைப் போக்கும் நன் மருந்தாயின என்னும் கருத்தமைந்த பாடல், பாலைக் கலியில் இடம் பெற்றிருக்கக் காணலாம். இதனால்' மருத்துவன் தருகின்ற மருந்து, துன்பத்தினை நீக்குவது என்பது உணர்த்தப் படுகிறது.

மருத்துவன் ஒழுக்கம்
தனக்கு உற்ற நோயை நீக்குமாறு, மருத்துவனிடம் நோயாளி வேண்டி கேட்டுக் கொண்ட பின்னும் மருத்துவன் நோயாளிக்கு மருந்து அளிக்காவிட்டால் அது கொடுமை. என்று நெய்தற்கலி உரைக் கின்றது.நோயாளிக்கு வந்த நோயறிந்து நோய்க்கு மருந்தூட்டுவதே மருத்துவனின் கடமையும் அறமுமாகும். நோயாளி விரும்பும் பொருள்களை யெல்லாம் தருவது மருத்துவ முறையுமன்று. நோயாற்று கின்ற மருத்துவனைப் போற்றி, ‘அறவோன்' என்று பாராட்டுகின்ற பண்பு மக்களிடையே மிகுந்திருந்தது.

தமிழ் மருத்துவ நெறி
தமிழ் மறையெனப் போற்றப் பெறும் திருக்குறளில் அமைந்துள்ள மருந்து என்னும் அதிகாரம்' தமிழ் மருத்துவ நெறியை வகுத்துரைப் பதாகக் கருதலாம். இந்த அதிகாரத்தில் மருந்து, மருத்துவன்' மருத்துவம், மருத்துவ நூலோர், நோய், நோயாளி' நோய்க்கான காரணம், நோயில்லா நெறி, உணவு நெறி ஆகியன விளக்கப் படுகின்றன.
மருந்து/மருத்துவம்
உற்ற நோயைப் போக்குவதற்குச் செய்யப்படுவது மருத்துவம். அந்நோயைப் போக்குவது மருந்து. மருந்து, மருத்துவத்தின் பகுதி யாகும். மருந்து மட்டும் நோய் தீர்க்கப் பயன்படுவதில்லை. நோயுற் றார்க்கு உற்ற நோய் என்ன வென்று உய்த்துணரும் மருத்துவன் வேண்டும். மருத்துவன் குறிப்பிட்டுரைக்கும் மருந்தை நோயுற் றானுக்கு ஊட்டுகின்ற மருத்துவத் துணைவன் வேண்டும். ஆக மருத்துவம் என்பது நோயாளி, மருத்துவன், மருந்து, மருத்துவத் துணைவன் என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டது. இதனை மருந்து என்னும் சொல்லால் திருக்குறள் உரைக்கும்.
"" உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து''
உற்றவன்நோயுற்றவன்; தீர்ப்பான்மருத்துவன்; மருந்து மருத்து வனின் கருவியான நோய்தீர்க்கும் மருந்து; உழைச் செல்வான் மருத்துவனுக்கும் நோயாளிக்கும் துணையாயிருந்து மருந்தூட்டுபவன் (இணிட்ணீணிதணஞீஞுணூ) எனப் பொருள் உரைக்கிறது.
மருத்துவன் நோயாளியை நாடி, நோய் வந்ததன் காரணத்தை நாடி' வந்துற்ற நோய் எது என்பதை நாடி, பின்னர் வந்துற்ற நோயைத் தீர்க்கும் மருந்து எது' எவை என்பனவற்றை நாடி, அதன்பின் எவ்வகையில் மருந்தூட்ட வேண்டும் என்பதை நாடிச் செய்ய வேண்டும்.
நோயுற்ற நோயாளியின் அளவு, அதாவது உடல் பருவம்' வலிமை, மனநிலை ஆகியவற்றையும்' நோயின் அளவு, அதாவது தொடக்கம்' இடை முதிர்வு, வன்மை' மென்மை ஆகியவற்றையும், நோயுற்ற காலம், நோய் தொடருங்காலம்' மருத்துவம் பார்க்க வேண்டிய காலம், மருத்துவம் பார்க்கும் காலம் ஆகியவற்றையும் அறிந்து மருத்துவம் செய்பவனே, மருத்துவம் கற்றவனாகக் கருதப்படுவான்என்று மருத்துவனுக்குரிய செயற்பாட்டினை விவரிக்கிறது.
நூலோர்
மூன்று என்னும் எண்ணால் உரைக்கப்படுகின்றவை வளி, அழல், ஐயம் என்னும் மூன்று கூறுகளாகும். இம்மூன்றும் தத்தமக்குரிய அளவின்படி அமையாமல் குறைந்தாலோ' கூடினாலோ உடம்பில் பலவகை நோய்களை உண்டாக்கும். இம்மூன்றும் உடலுக்குக் கேட்டைத் தரும்.
"" மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
நோய்
நோய் உண்டாவதற்குக் காரணம். உடலுக்கு ஒவ்வாத குற்ற முடைய உணவுகளை உண்பதும்' உணவு உண்பதற் காகக் குறிக்கப் பட்டுள்ள காலத்தைக் கருத்திற் கொள்ளாமல் பெருந்தீனி தின்பதுமே யாகும்.
நோயில்லா நெறி
நோயில்லா நெறி என்பது வாழ்வின் பொது நெறி எனக் கொள்ளலாம். இது எல்லா நிலையினருக்கும் எல்லா வயதினருக்கும் பொருந்துமாதலான் பொது நெறியாகக் கருதலாம்.
மருந்து தேவைப்படுவது, நோய் என ஒரு தீமை தோன்றிய பின்னரேயாம். அதனால் நோய் வந்தபின் போக்குவதை விட, வராமல் தடுப்பதே நல்லநெறி எனப்படும்.
"" நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்''
என்னும் குறள் கருத்திற் கொள்ளத்தக்கது.
நோயென்பது வேண்டாம் என்றால், மருந்தென ஒன்றும் வேண்டாம். மருந்து வேண்டாம் என்றால் தாம் உண்ட உணவு செரிமானமடைந்து வெளியே சென்றபின்' உணவு உட்கொள்ளும் பழக்கத்தினை மேற்கொண்டால்' மருந்தென்பது வேண்டாம் எனப்படும்.
உண்ட உணவு செரித்துக் கழிவாக வெளியே சென்றது என்பதையும்' தாம் உண்ண வேண்டிய உணவின் அளவு எவ்வளவு என்பதையும் அறிந்தவனின் உடம்பு நீண்ட நாள்கள் நோயின்றி வாழுமஎன்பது நோயில்லா நெறிமுறையாகக் கொள்ளத்தக்கவை.
உணவு நெறி
நோயில்லா நெறியை உணர்த்துவது உணவு நெறி. அது தினவொழுக்கம், நடைப்பயிற்சி, உறக்கம் போன்றவையாகும். உணவின் நெறிமுறை தவறினால் நோயில்லா நெறி என்பது பிழையாகிப் போகும். ஆகவே' உணவு நெறியை மேற்கொண்டு வாழும் வாழ்க்கையே நோயில்லா வாழ்க்கையாகக் கருதலாம்.
உண்ணும் உணவில் குற்றமுடைய உணவு, நல்ல உணவிலும் உண்போர் உடலுக்கு ஒவ்வாத உணவு என்னும் வகை உணவை நீக்கிவிட்டு' உடலுக்கும் மனத்துக்கும் ஏற்ற உணவை உட்கொண்டால்– நேர்ந்தால்' (நேருமா என்பது வேறு) உடலுக்கு மட்டுமல்ல உயிருக்கும் குற்றம் உண்டாகாது என்பர்..
குற்றமுடைய உணவு என்பது கெட்டுப்போன உணவு என்றும், ஒருவன் உண்ணும் அளவுக்கு மீறி உண்ணப்படுகின்ற உணவையும் குற்ற உணவு என்றும் கொள்ளலாம். இத்தகைய உணவு நோயை உண்டாக்கி உடலுக்குத் துன்பத்தைத் தரும்.
உயிர்க்கு ஊறுவிளைக்கும் உணவு என்பது ஒவ்வாத உணவு ஆகும். ஒவ்வாத உணவாவது' சேரக் கூடாத காய்கறிகளை ஒன்று சேர்த்துச் சமைப்பதால் ஒவ்வாமை தோன்றும். அதாவது உணவு நஞ்சு. அத்தகைய உணவு உயிர்க்கு ஊறு விளைவிக்கும் என்பதைக் குறிப் பிட்டே, ஊறு பாடில்லை உயிர்க்கு என்று உரைக்கப்பட்டது.
உணவு உண்ணத் தொடங்கும் முன், முன்னர் உண்ட உணவு முற்ற செரித்துப் பின் பசி முற்றிய நிலையை அடைந்த பின்பே உணவுண்ண வேண்டும்58. என்று உணவு நெறி வகுக்கப்பட்டுள்ளது.
பல்லாண்டுகளுக்கு முன்பே வாழ்க்கைக்குரிய பக்குவங்களை வாழ்க்கை நெறியாக' மருத்துவ நெறியாக, உணவு நெறி உரைக்கப் பட்டிருப்பது உணர்தற் குரியது.
மருந்தே உணவு, உணவே மருந்து
பண்டைய தமிழிலக்கியங்கள் தமிழர் தம் உணவு முறைகளை எடுத்து விளக்குவதுடன் உணவை உண்பதிலும் உணவைப் பல வகையாகச் சமைத்து உண்பதிலும் முன்னோடியாக விளங்கி' நாகரித்தினாலும் பண்பாட்டினாலும் சிறந்து விளங்கியமையைத் தெரிவிக்கிறது.
உயிர் வாழ வேண்டுமானால் உணவு வேண்டும். உணவு இல்லாமல் உயிர் வாழ்தல் என்பது இயலாதது என்பதை உணர்ந்து'
"" உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்''59
என்று உரைத்தனர்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று தன்னிடமிருக்கும் உணவை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து அவர்களையும் வாழ்விக்கச் செய்யும் பண்பாட்டினைக் கொண்டிருந்தார்கள்.
தமிழர்களின் உணவுமுறைகள் நிலத்தின் அடிப்படையில் வெவ்வேறு வகையினவாக இருந்திருக்கின்றன. தொழில் அடிப் படையிலும், பருவத்துக்கு ஏற்றவாறும்' வயதுக்குத் தக்கவாறும் அமைந்து காணப்படுகிறது.
உணவின் அளவு
உணவு உண்பதில் அளவை மேற்கொண்டிருந்தனர். பெருந்தீனி தின்றால் நோயும்' சிறு தீனி தின்றால் வலுவிழந்து நோயும் வரக்கூடும் என்றறிந்து'
“உண்பது நாழி உடுப்பவை இரண்டே"60 என்னும் கொள்கையை வகுத்திருந்தனர். ஒவ்வொருவரும் நாழி என்னும் அளவு உணவு மட்டுமே உண்ண முடியும் அல்லது உண்ண வேண்டும் என்பதும் ஆடை வகையால் இரண்டு ஆடைகள் மேலாடை இடையாடை என உடுத்த வேண்டும் என்பதும் கற்றனர்.
உணவுநெறி உடலைப் பேணிப் பாதுக்காப்பது;வலிமை கொள்ளச் செய்வது; நோயைத் தவிர்ப்பது என்பதால், வாழ்க்கைக்கு உகந்தது. அந்நெறியின் மேன்மையை உயிராகக் கருதிப் பாதுகாத்தனர் என்பதற்குச் சான்றாக,
பசித்திருப்பது நன்மையைத் தரும். உணவு உண்டபின்பு வாயைக் கழுவ வேண்டும். நோயாளிக்கு உணவளித்தால் அது செரியாமையால் துன்பம் தரும்61 என்றெல்லாம் அறிவுறுத்தக் காண்கின்றோம்.
உடலில் தூய்மை
ஒவ்வொருவரும் உடலைத் தூய்மையாக வைத்துக் கொண் டிருந்தாலேயே பாதி அளவு நோயின் தாக்குதலிலிருந்து மீளலாம். உடலில் தூய்மையில்லாமல் நல்ல உணவை உட்கொண்டாலும் நோய் வரக் கூடும்.உணவுண்ணும் முன் நீராடி உணவுண்ண வேண்டும் என்னும் கருத்துடையவர்களாக இருந்தனர்.
உணவுண்ணும் முறை
வாழ்க்கை நியதிகளை உரைப்பதே ‘ஆசாரம்' எனப்பட்டது. அவ்வாறான நியதிகளைத் தொகுத்துரைக்கும் ஆசாரக் கோவை'
‘உணவு உண்ணும் போது கிழக்கு நோக்கி அமர்ந்து உணவுண்ண வேண்டும். நின்று கொண்டோ படுத்துக் கொண்டோ கட்டிலின் மேல் அமர்ந்து கொண்டோ உணவுண்ணக் கூடாது என்கிறது.
உணவு உண்ட பின் நடை
உணவு உண்ட பின்னர் ஒவ்வொருவரும் சிறிது தூரம் நடக்க வேண்டும். அவ்வாறு நடப்பது உண்ட உணவு செரிமானமாவதற்கு உதவும் எனக் கூறுவர். நோயாளி உணவு உண்டபின் சிறிது தூரம் நடக்க வேண்டுமென்று மருத்துவர் அறிவுறுத்துவர். அத்தகைய மருத்துவச் சிந்தனையும் உடல் நலனைப் பேணுகின்ற சிந்தனையும் பண்டைக் காலத் தமிழர்களிடையே மிகுந்து காணப்பட்டிருக்கிறது.
‘உணவு உண்ட பின்னர் நூறடி தூரம் உலவிவிட்டு வர வேண்டு மென்று மருத்துவ நூல் கூறுவதாகவும், அதற்கு ஏற்றவாறு உணவு மண்டபம் நூறடி நீள நடை மண்டபத்துடன் அமைக்கப் பட்டிருப்பதாகவும் சிந்தாமணி உரையாசிரியர் நச்சினார்க்கினியர் உரைக்கக் காணலாம்' .
உண்கலங்கள்
உணவு உண்பதற்காகப் பயன்படுத்தப்படும் உண்கலங்கள் உணவுக்கும் உணவுண்போர் உடலுக்கும் ஏற்றதாக அமைய வேண்டும் என்பது பொது விதி. அத்தகைய பொதுவிதியைக் கருத்திற் கொண்டு உண்கலங்களைப் பயன்படுத்துவதில் கருத்துடையவர்களாக இருந்தனர்.
உணவுண்ணும் உண்கலமாகப் பொன், வெள்ளி' வாழை இலை, தேக்கிலை' தாமரை இலை முதலியன பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.
"" செழுங்கோள் வாழை யகலிலைப் பகுக்கும்''
"" குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுதம் உண்க அடிகள் ஈங்கென''
வாழை இலையில் உணவு உண்டது தெரிகிறது. பொன், வெள்ளி, வாழை இலை' தேக்கிலை, தாமரை முதலியவற்றில் உணவுண்பது உடல் நலத்தைத் தரும் என்பது மருத்துவ நூலாரின் கருத்தாக இருக்கிறது.
உணவே மருந்து
தமிழ் மருத்துவ நூலான பதார்த்த குண சிந்தாமணி, தேரையர் வெண்பா போன்ற நூல்கள், ஒவ்வொரு பொருளிலும் அடங்கியுள்ள மருத்துவக் குணங்களை எடுத்துரைக்கின்றன. மரங்களிலிருந்து கிடைக்கின்ற பூ' காய், கனிகள்; செடி, கொடிகளிலிருந்து கிடைக்கின்ற பூ, காய் கனிகள்; குறுஞ்செடிகள் எனப்படும் மூலிகை வகைக் கீரைகள்; பதப்படுத்தி வைக்கப்படுகின்ற ஊறுகாய்' வற்றல் போன்றவை, விலங்கு இனமான பசு' எருமை, ஆடு' போன்றவைகளிடமிருந்து பெறப்படுகின்ற பாலிலிருந்து தயாரிக்கப்படுகின்ற தயிர், மோர்' வெண்ணெய், நெய் போன்றவை; சேகரிக்கப்படும் பொருள்களான மலைத்தேன்' கொசுத் தேன், கொம்புத் தேன்' குறிஞ்சித் தேன் ஆகியவை; விளைவிக்கப்படுகின்ற பொருள்களான நவதானியங்கள்' பருப்பு வகைகள்;தயாரிக்கும் பொருளான எண்ணெய் வகைகள்;இறைச்சி வகைகளான மாடு' ஆடு, பன்றி' உடும்பு, கோழி' நாரை, உள்ளான்' கொக்கு, காடை' மீன், கருவாடு போன்றவை; நீர் வகையான ஆறு, குளம், கிணறு' ஊற்று, சுனை' அருவிநீர் போன்றவை; நில வகையான குறிஞ்சி, முல்லை, மருதம்' நெய்தல்;ஆடை வகையான பருத்தி' தோல், ஆட்டு மயிர்' எலி மயிர், பட்டு' இலை , தழை ஆகியவை; வண்ண வகைகளான கருப்பு, வெள்ளை, மஞ்சள்' சிவப்பு, ஊதா' நீலம், பச்சை' ஆரஞ்சு, போன்றவை: வீடுகளின் வகை' பாய்வகை, படுக்கை வகை' இருக்கை வகை, பாத்திரங்களின் வகை போன்ற வகையினப் பொருள்கள் மருத்துவக் குணங்கள் கொண்டவை என்றும்' அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோயை நீக்கும் தன்மை கொண்டிருப்பதாகவும் கூறுகின்றன.
மேற்கண்ட பொருள்களின் மருத்துவக் குணங்களை அறிந்தும் அறியாமலும்' உண்ணவும் உடுக்கவும் இருக்கவும் பயன்படுத்தவும் தொடங்கினர்.
மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற வாழ்விடங்களாகத் தேர்ந் தெடுத்த பகுதிகளில் அல்லது நிலங்களிலிருந்து அந்தந்தப் பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு உண்டாகும் நோய்களுக்கு மருந்தாக அமைவது இயற்கை.
நானிலமும் நோய்களும்
நிலங்கள் நான்கு என்பது இலக்கிய மரபு. நிலத்தின் அடிப்படைக் கேற்ப உண்டாகும் நோய்களும் வேறுபடும் என மருத்துவ நூல்கள் கூறுகின்றன. குறிஞ்சி நிலமான மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு உண்டாகும் நோய்களும், நெய்தல் நிலமான கடற்கரைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு உண்டாகும் நோய்களும் வேறு வேறாகக் காணப்படுகின்றன. அதுபோலவே பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கு உண்டாகும் நோய்களும் வேறு வேறாக இருக்குமென்று குறிப்பிடப் படுகின்றன. அந்தந்த நிலங்களில் வாழும் மக்களுக்கு உண்டாகும் நோய்களுக்கு' அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கின்ற மருத்துவத் தாவரங்களே மருந்தாகும் என்பது மருத்துவ நூலோர் கண்ட உண்மையாகும்.
இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை இயற்றத் தெரிந்த தமிழ் மக்கள், வாழும் இயல்பினால் உண்டாகும் நோய்க்கு மருந்தாக, வாழும் பகுதிகளிலுள்ள தாவரங்களிலிருந்தே கண்டறிந்திருந்தனர் என்பதைத் தமிழ் மருத்துவ முறைகளிலிருந்து அறிய முடிகிறது.
எனவே' உணவே மருந்து என்பதற்கும், மருந்தே உணவு என்பதற்கும் பண்டைக் காலத் தமிழர்களின் வாழ்வையும்' தமிழ் மருத்துவத்தின் அடிப்படையையும் சான்றாகக் கூறலாம்.
உயிர் மருந்து
மருந்தாக அமையும் உணவே உடலுக்கு வலிமையைக் கொடுக்கும்; உடலின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமையும்; உடலின் உறுப்புகளுக்குப் பாதுகாப்பாக அமையும்; உடலை இயக்கும் ஆற்றலைக் கொடுக்கும்; உடல் நோயை நீக்குவதுடன் நோயற்று வாழ வகைப்படுத்தும் என்பவை அறிந்தே'
"" உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்''
என்ற புறநானூற்றுப் புலவன் புலப்படுத்துவதைக் காணலாம்.
மருந்தே உணவு
சங்க காலத்தமிழ் மக்கள் தங்கள் உணவு வகைகளாக மேற் கொண்டிருந்தவற்றை சங்க இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அவர்கள் உண்ட உணவுகள் நிலத்தின் அடிப்படையிலும்' தொழிலின் அடிப்படையிலும், வளத்தின் அடிப்படையிலும் அமைந்திருந்தன. அவ்வாறு அமைந்த உணவுகள் அவர்களின் உடலைப் பேணுகின்ற குணங்களைக் கொண்டிருந்தன.
மிளகு
மிளகு-அது தமிழ் நிலத்தின் மருந்து எனல் பொருந்தும். கடல் கடந்து சென்றும் தமிழ் நிலத்துப் பெருமையைக் கிரேக்க நாட்டிலும் நிலை நிறுத்திய பெருமை மிளகுக்கு உண்டு.
‘பகைவன் வீட்டிற்குச் சென்றாலும் பத்து மிளகொடு போ' என்பது பழமொழி. பகைவன் வீட்டில் நஞ்சு தரப்பட்டாலும் அது' கொண்டு செல்லும் பத்து மிளகினாலேயே குணமாகிவிடும் என்பதை உணர்த்தும். அவ்வாறான மிளகு, மருத்துவத்தின் மூலப்பொருளாக அமைவதோடு உணவாகவும் அமையும்.
"" கருங்கொடி மிளகின் காய்த்துணர் பசுங்கறி''
என்று மிளகின் கொடி கருமையாகவும் பசுங்காயாகவும் கொத்தாகவும் காணப்படுவதை உணவாக்கினர். தண்டிலும் வேரிலும் உணவைச் சேகரிக்கும் கிழங்கு வகையான இஞ்சி' மஞ்சள் உணவாகி மருந்தாகிறது.
"" இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்''
என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.
உப்பு
உப்பு எல்லா வளர்ச்சிக்கும் முதற்காரணமாய் இருக்கும். செந்நீர்' எலும்பு, வலிமை போன்றவற்றைத் தரும். பருத்தல் என்னும் பொருளில் உப்புதல் என்னுஞ் சொல்லில் உப்பு எனப் பெயர் பெற்றது என்பர். நெல்லின் அளவுக்கே உப்பும் விற்கப்பட்டது என்பதனால்' உப்பு எவ்வளவு உயர்ந்த பொருளாக மதிக்கப்பட்டது என்பது விளங்கும்.
"" நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்
சேரிவிலை மாறு கூறலின் மனைய''
என்று' பண்டமாற்றாக உப்பு விற்கப் பட்டதை அகநானூறு குறிக்கும்.
உப்பின் அளவு, இரத்தத்தின் வேகத்தைக் கூட்டவும் குறைக்கவும் செய்கிறது. நோயாளர்கள் உப்பைக் கட்டுப் படுத்தினால் நோயின் வேகம் குறையும் என்கிறது, மருத்துவம்.
இதனை'
"" உப்பு அமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்''71
என்றதனால்' காதலர்களிடையே தோன்றும் பொய்க் கோபமும்' உப்பும் அளவாக இருக்க வேண்டும் என்றும்' இவ்விரண்டும் அதிகரித்தால் காதலும் உணவும் கெடும் என்னும் கருத்தில் எடுத்துக் காட்டாக அமைந்து, உப்பின் பயன் உணர்த்தப்பட்டது.
புளி
புளி' தனக்குரிய சுவையெனும் குணத்தின் பெயரையே கொண்டிருக்கிறது. புளிப்பின் சுவையை மாற்றவல்லது காரமும் கரிப்பும். கரிப்பு என்னும் கார்ப்புச் சுவைக் குறியது உப்பு. புளிப்பும், கார்ப்பும் சமையலுக்குச் சுவையூட்டுவது. புளி' உப்பு ஆகிய இரண்டும் சித்த மருந்தில் சிறப்பாகக் கருதப் பெறும் பாகங்களாகும். வைத்தியம், வாதம்' யோகம் ஆகிய மூன்றும் இவற்றைக் குறிப்பிடும்.
உப்பையும் புளியையும் அறிந்தவனே ஞானி என்றும், சித்த னென்றும், வைத்தியனென்றும் கூறப்படுகிறது. இவற்றின் சிறப்பினை உணர்ந்தே சங்கத் தமிழ்மக்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்.
"" படும்புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர் போல"
என்னும் குறுந்தொகை, சூல் கொண்ட மகளிர் தங்களுக்கு நேரும் குமட்டல் தீர புளியைச் சுவைத்ததாகத் தெரிவிக்கிறது. புளி' உணவுப் பொருளாகப் பல நிலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"" வெண்புடையக் கொண்ட தூய்த்தலைப் பழவின்
இன்புளிக் கலந்து மாமோ ராகப்''
பயன்பட்டுள்ளது.
வேளைக் கீரையை ஏழ்மையின் காரணத்தால், புசிக்க உணவின்றி வறுமையில் வாடியோர் உண்டதாகக் குறிப்பர். வேளைக்கீரை' புளிப்புச் சுவை கொண்டது. வறுமையுற்றவர்க்கு ஏற்படுகின்ற தூக்கக் குறைவு, மலச்சிக்கல்' சோர்வு ஆகியவற்றிலிருந்து மீள வேளைக்கீரை பயன்பட்டது.
"" வேளை வெந்தை வல்சியாக.
என்று புறநானூறு குறிப்பிடும் வேளைக்கீரையால் புளிப்புச் சுவையையும்'
"" எயிற்றியர் அட்ட இன்புளி வெண்சோறு''75
என்னும் சிறுபாணாற்றுப்படை, சோறே புளிப்புச் சுவையாகப் படைத்தளிக்கப் படுவதையும் குறிப்பிடுகிறது. (தொடரும்)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காரைக்கால் அம்மையார் - ஒரு ஆன்மீகப்பார்வை

கணவனால் தெய்வமாகத் தொழப்பட்ட ஒரு மானிடப் பெண்ணின் உண்மை வரலாறு. 
புனிதவதி என்ற இயற்பெயர்கொண்ட ஒருவர் இறைவனால் அம்மையே என்று அழைக் கப்பட்டபின்னர் தான் பிறந்து வளர்ந்த ஊரின் பெயரை முதற்பெயராகக் கொண்டு வாழ்ந்தவர்தான்
காரைக்கால் அம்மையார். இவர் கி.பி. 300-500 ஆகிய காலப்பகுதியில் வாழ்ந்தவர் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர் இவர் ஆவார். இறைவனால் அம்மையே என்று அழைக்கப் பெற்ற பெருமை உடையவர். இவர் இயற்றிய பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (20 பாடல்கள்), இரட்டை மணிமாலை 20 பாடல்கள். தேவார காலத்துக்கு 200 ஆண்டுகள் முந்தி இயற்றப்பட்ட இவரது பதிக முறையைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

இறைனே, எனக்கு எது நலம் என்று உனக்கு நன்றாகத் தெரியும். அதை நீ எனக்கு உரிய காலத்தில் கொடுப்பாய் என்பதிலும் எனக்கு நம்பிக்கை உண்டு. இந்த மகிழ்வை நீ கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நான் உன்னிடம் கொண்டுள்ள அன்பு மாறாது. நீ எனக்கு எவ்வளவு துன்பம் கொடுத்தாலும் நான் உன்னை உள்ளத்தில இருத்திப் பூசிப்பதை நிறுத்தமாட்டேன் -இவ்வாறு எண்ணுவது தான் உண்மையான இறையன்பின் அடையாளம். இத்தகைய மனநிலை வாய்க்கப் பெற்ற அருளாளர்களுள் காரைக்கால் அம்மையார் முதன்மையானவர். இதுவே உலகப்பற்றை நீக்கியபின் ஒருவருக்கு மனத்தில் எழும் எண்ணங்களாகும். 

இறைவனுக்கு அவர் பல பெயரிட்டு வழங்குகிறார். அடிகள், அழகன், அந்தணன், அரன், ஆதிரையான், ஆள்வான், இறைவன், ஈசன், உத்தமன், எந்தை, எம்மான், ஒப்பினை இல்லவன், கண்ணுதலான், கறைமிடற்றான், குழகன், சங்கரன், நம்பன், பரமன், புண்ணியன், மாயன், வானோர் பெருமான், விமலன், வேதியன். ஆனால் சைவ சமயம் என்ற நெறிக்கு ஆதாரமான சிவன் என்ற சொல்லை இவரது பாடல்களில் எங்கும் காணக்கிடைத்திலது என்பது ஒரு ஐயத்தையும் ஏற்படுத்துகின்றது. பிற்பட்டகால சமய குரவர்கள் சிவனைப் பலபெயரிட்டு தமது பாடல்களில் பாடியிருப்பதற்கு கரைக்கால் அம்மையாரே காரணமாயிருந்தார். அதுபோல் ஆடற்பெருமானையே அவர் முழு முதலாகக் கருதி வழிபட்டாலும், தற்போது வழங்கும் நடராஜா என்ற பெயர் அவரால் எங்கும் பயன்படுத்தப்படவில்லை.

இப்பொழுது ஆடற்பெருமான் என்றால் நம் அனைவரின் நினைவுக்கு வருவது தில்லை எனப்படும் சிதம்பரம் தான். ஆனால் அம்மையாரது பாடல்களில் எந்த இடத்திலும் தில்லையைப் பற்றிய குறிப்பே காணப் படவில்லை. தேவார திருவாசகங்கள் போல பல தலங்களைப் பற்றியும் அவ்வவற்றில் உறையும் ஈசன் பற்றியும் குறிக்கப்படவில்லை. திருவாலங்காடு என்னும் இடம் மட்டுமே கூறப்படுகிறது. அது கூட, வேலூர் அருகில் தற்போது காணப்படும ஊர் தானா அல்லது காரைக்காலில் சுடுகாட்டை ஒட்டி ஆலமரங்கள் சூழ்ந்த ஒரு இடமா என்பது ஆய்விற்குரியது. தற்போது போல இறைவனைக் கோவிலில் சென்று தான் வழிபட வேண்டும் என்ற வழக்கம் அப்பொழுது இருந்ததாகத் தெரியவில்லை. கணபதி, முருகன் போன்ற பிற தெய்வங்களையும் அவர் குறிப்பிடவில்லை. உமையோடு கூடிய இறைவன் - மாதொரு பாகன் - மட்டுமே அவர் அறிந்தது.அதேபோல் நாயன்மார்கள் பாடிய ஆயிரக்கணக்கான பதிகங்களிலும் பிள்ளையார் முருகன் பற்றி எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. (இவை ஆய்வுக்கு உரியவை)

இன்றைக்கு சைவ சமயத்தின் முதன்மையான மந்திரமாகக் கருதப்படுவது நமசிவாய எனப்படும் திருவைந்தெழுத்து ஆகும் இது யசுர் வேதத்தின் மையப்பகுதியில் அமைந்த ரத்தினமாகவும் வேத சாரமாகவும் இன்று கருதப்படுகிறது. அம்மையாரின் பாடல்களில் சிவன் என்ற சொல் காணப்படாதது போல, அதை ஒட்டிப் பிறந்த நமசிவாய மந்திரமும் காணப்படவில்லை. 

அம்மையார் இறைவனின் பல திருவிளையாடல்களைக் குறிப்பிடுகிறார். முப்புரம் எரித்தது, கங்கையைத் தலையில் தாங்கியது, ராவணன் செருக்கடக்கியது, ஆலகால விடமுண்டு கண்டம் கறுத்தது, அர்ச்சுனனைச் சோதிக்கக் கிராதவேடம் பூண்டது, அடி முடி தேடிய மால் அயனுக்கு அறியமுடியாத சோதியாய் நின்றது, காலனையும் காமனையும் காய்ந்தது, கபாலம் ஏந்திப் பலி ஏற்றது, யானைத் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டது, சந்திரனைத் தலையில் சூடியது, சுடுகாட்டில் அனல் ஏந்திப் பேய்களுடன் அண்டம் அதிர நடனமாடியது என்று பல திருவிளையாடல்களைக் குறிப்பிடும் அவர் ஆலின் கீழிருந்து அறமுரைத்ததையும் தக்கனை மாய்த்ததையும் ஏனோ குறிப்பிடவில்லை. அவரால் அதிகம் பேசப்படுவது இடுகாட்டில் நடனமாடும் கோலம். அடுத்தபடியாக, பிட்சாடனக்கோலமும், உமையொரு பாகனாக விளங்குவதும் ஆகும்.

இறைவனை உள்ளபடி உணர்ந்தவர் யார் சுடுகாட்டுச் சாம்பல் பூசிய மேனியையும் எலும்பு மாலையையும் கொண்ட வெளித் தோற்றத்தைப் பார்த்துவிட்டுச் சிலர் ஆடற்பெருமானைப் பேய் எனக்கருதி இகழ்கின்றனர் என்று அம்மையார் கூறுகிறார். இது அம்மையாருக்கும் பொருந்தும். இவர் இறைவனின் ஆட்டத்தில் மெய்மறந்து தானும் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்த இவரது உற்றார் உறவினர்கள் இவரைப் பேய் பிடித்தவர் எனக் கருதியிருக்கக் கூடும். அதை இவர் ஒரு அவமதிப்பாகக் கருதாமல் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டார். தன்னைச் சஙகரனின் பேய்க்கணங்களில் ஒன்றாகக் கருதிக்கொண்டார். நம் போன்ற சராசரி மனிதர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. சுடுகாடு, பேய்கள் இவற்றின் வரணனை நமக்கே அச்சம் தருகிறது. அப்படி இருக்க அம்மையாருக்கு -மெல்லியளான ஒரு பெண்ணுக்கு- இதில் எப்படி நாட்டம் வந்தது அவர் கூறுகிறார்- பிறந்து மொழி பயின்ற காலத்திலேயே அவருக்குப் பெருமானிடத்தில் காதல் ஏற்பட்டுவிட்டது. கண்ட பின் அவருக்குக் காதல் ஏற்படவில்லை. பிரானின் திருவுருவத்தைக் காணாமலேயே அவருக்கு ஆளாகிவிட்டார். அந்தாதி பாடுகின்ற கால்த்தில் கூட அவர் இறைவனைக் கண்டதில்லை. ஒருவர் மேல் அன்பு ஏற்பட்டுவிட்டால் அவரது தோற்றமோ அவரது சூழ்நிலைகளோ அந்த அன்பைத் தடுக்கஇயலுமா
அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைப்பேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது

அம்மையாருக்கும் அரனுக்கும் இருந்த பிணைப்பு முற்பிறப்பின் தவப்பயனாய் ஏற்பட்டது. இனிவரும் ஏழேழு பிறவிகளுக்கும் தொடர இருப்பது. பிறப்பறுத்து ஈசனோடு இரண்டறக் கலத்தல் தான் அவரது குறிக்கோள். இப்பிறப்பில் அதைச் சாதிக்க முடியவில்லை என்றால் இனிவரும் பிறவிகளிலும் நெற்றிக் கண்ணனை மறவாத நெஞ்சுடையவராய்ப் பிறந்து அவருடைய ஆளாகவே வாழ வேண்டும் என்பதைப் பின்வரும் இரு பாடல்களிலும் விளக்குகிறார்.

யானே தவமுடையேன் என் நெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன்- யானேயக்
கைம்மா உரி போர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயினேன்

அவர்ககே எழு பிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கே அன்பாவதல்லால் - பவர்ச் சடைமேல்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்

இக்கருத்தைத்தான் பெரிய புராணத்தில் அம்மையார் வரலாற்றைப் பாடிய சேக்கிழார் பின்வருமாறு கூறுகிறார்

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும்போதுன் அடியின் கீழிருக்க என்றார்

காரைக்கால் அம்மையாருக்கு முற்பட்ட காலத்தில் ஆலயங்களில் உருவ வழிபாடு இருக்கவில்லை. காரைக்கால் அம்மையார்தான் அன்பு செலுத்துவதற்கு ஒரு உருவம் அவசியம் என்பதைக் கண்டுகாட்டி வாழ்ந்தார். அதன் பயனாகவே ஆலயங்களில் சிறுகச் சிறுக உருவங்கள் வைத்து வணங்கும் வழக்கம் உருவாகிற்று. பரமன் மீது பண்கனிந்த பாடல்களைப்பாடி ஒரு சிறந்த பெண் சைவத் துறவியாக இன்றும் சைவர்கள் மனத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் காரைக்கால் அம்மையாரேயாவார். இவரின் பெருமை கருதியே பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களில் ஒருவராக வைக்கப்பட்டுள்ளார்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆயகலைகள்


அனைத்து வாசகர்களுக்கும் என் இனிய தைப்பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்நாளில் இப்பதிவைச் சமர்ப்பிப்பதில் தமிழன் என்ற வகையில் நான் பெருமை கொள்கிறேன்

இலக்கியத்தில் கம்பருக்கும்; காளமேகப் புலவருக்கும் நாவில் தமிழ்வடிவாக நின்று கவிகொடுத்துக் காட்சியளித்தவள் கல்வித்தெய்வமாக விளங்கும் சரசுவதி என்பதை நாம் அறிவோம். அதன்காரணமாகவே கம்பர் அவர்கள் "சரசுவதி அந்தாதி" என்ற நூலை இயற்றி நன்றி செலுத்தினார்.

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாரா திடர். (கம்பர் சரசுவதி அந்தாதி)

இன்று கலியுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் விஞ்ஞான வளர்ச்சியின் இலவச இணைப்பான கணனியுகத்திற்குள் பிரவேசித்துவிட்டோம். தற்காலத்தில் விஞ்ஞானம் எத்தனையோ புதிய புதிய விஷயங்களை தந்து கொண்டிருக்கிறது. அத்தனையும் ஆச்சரியப்படுத்தும் விஷயங்களாக இருக்கின்றன. விஞ்ஞான வளர்ச்சியின் அத்தனை மரிமாணங்களும் உலக சமூகத்தை ஒரு பயந்த சூழ்நிலைக்குள் தள்ளி அது வளர்ச்சியடைந்து வருகின்றது. அவ்வாறு இருந்தும் அதைவிடப் பலவான விடையங்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே கண்டு காட்டிய பெருமை தமிழர்களின் வரலாற்று  உண்மைகளாக இன்றும் போற்றப்படுகின்றன என்பது மறைக்கமுடியாத உண்மைகளில் ஒன்று. ஆனால் அந்தக் காலத்தில் ஆயகலைகள் அறுபத்து நான்கும் தெரிந்திருந்தால் அத்தனையும் அறிந்த அறிவாளி இக்காலத்து விஞ்ஞானியைவிட மிகவும் அறிவுடையோன் என்று இந்து மத புராணங்களின் பதிவுகளில் இருந்து நாம் ஊகிக்க முடிகின்றது.

நான்கு வேதம், ஆறு சாத்திரம், பதினெண்புராணம், அறுபத்துநான்கு கலைகள், இவை ஆரியவழி வந்த இலக்கிய மரபெனினும், 'அறுபத்து நான்கு கலை' என்ற பெயர் தமிழாதலாலும், அறுபத்து நான்காக சொல்லப்பட்ட கலைகள் அத்தனையும் தமிழருக்கும் உரித்தானதாலும், தமிழ்க் கலைகள் ஆரிய கலைகட்குக் காலத்தால் முந்தியவையென்பதாலும் தமிழன் பெருமை கொள்கிறான். இக்கலைகள் அனைத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரியவை என்று குறிப்பிடப்படுவதால் பெண் அடிமைச் சமுதாயத்தை அன்றே பிடிங்கி எறிந்தவர்களாகவும் தமிழ் மரபினர் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.


1. அக்கரவிலக்கணம் எழுத்திலக்கணம்
2. இலிகிதம் எழுத்தாற்றல்
3. கணிதம் கணிதவியல்
4. வேதம் மறை நூல்
5. புராணம் தொன்மம்
6. வியாகரணம் இலக்கணவியல்
7. நீதி சாஸ்திரம் நய நூல்
8. ஜோதிடம் கணியக் கலை
9. தர்ம சாஸ்திரம் அறத்துப் பால்
10. யோக சாஸ்திரம் ஓகக் கலை
11. மந்திர சாஸ்திரம் மந்திரக் கலை
12. சகுன சாஸ்திரம் நிமித்தகக் கலை
13. சிற்ப சாஸ்திரம் கம்மியக் கலை
14.வைத்தியசாஸ்திரம் மருத்துவக் கலை
15. உருவ சாஸ்திரம் உறுப்பமைவு
16. இதிகாசம் மறவனப்பு
17. காவியம் வனப்பு
18. அலங்காரம் அணி இயல்
19. மதுர பாடனம் இனிதுமொழிதல்
20. நாடகம் நாடகக் கலை
21. நிருத்தம் ஆடற் கலை
22. சத்தப்பிரும்மம் ஒலிநுட்ப அறிவு
23. வீணை யாழ் இயல்
24. வேணு (புல்லாங்குழல்)குழலிசை
25. மிருதங்கம் (மத்தளம்)
26. தாளம் தாள இயல்
27. அத்திரப் பரிட்சை வில்லாற்றல்
28. கனகப் பரிட்சை (பொன் நோட்டம்)
29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம் )
30. கஜப் பரிட்சை (யானை எற்றம்)
31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்)
32. இரத்தினப் பரிட்சை மணி நோட்டம்
33. பூமிப் பரிட்சை மண்ணியல்
34. சங்கிராம விலக்கணம் போர்ப் பயிற்சி
35. மல்யுத்தம் கைகலப்பு
36. ஆகருடனம் (ஆகர்ஷணம்)கவர்ச்சியியல்
37. உச்சாடனம் ஓட்டுகை
38. வித்து வேடனம் (நட்பு பிரிக்கை)
39. மதன சாஸ்திரம் மதன கலை
40. மோகனம் மயக்குக் கலை
41. வசீகரணம் வசியக் கலை
42. இரசவாதம் இதளியக் கலை
43. காந்தருவ வாதம் (இன்னிசைப் பயிற்சி)
44. பைபீலவாதம் (பிறவுயிர்மொழி)
45. கவுத்துவ வாதம் மகிழுறுத்தம்
46. தாதுவாதம் ( நாடி சாஸ்திரம்)
47. காருடம் கலுழம்
48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது இழப்பறிகை)
49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்;மறைத்ததையறிதல்)
50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்--வான் செல்கை)
51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது--வான்புகுதல்)
53. அதிரிசியம் தன்னுறு கரத்தல்
54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55. மகேந்திர ஜாலம் பெருமாயம்
56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்--அழற் கட்டு)
57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)
58. வாயுஸ்தம்பம் வளிக் கட்டு
59. திட்டி ஸ்தம்பம் கண் கட்டு
60. வாக்கு ஸ்தம்பம் நாவுக் கட்டு
61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடக்கல்)
62. கன்னத்தம்பம் புதையற் கட்டு
63. கட்கத்தம்பம் வாட் கட்டு
64. அவத்தைப் பிரயோகம் சூனியம்

"உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" என்ற தொல்காப்பியரது சிந்தனையுடன் தமிழர் வாழ்வைத் தரணியில் வளர்ப்போமாக.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சகுனப்பிழை


அந்தக் காலத்தில் இப்போதைய தமிழ்நாட்டுத் திருமணங்களில் இருப்பதுபோல் சாந்திமுகூர்த்தம் என்ற சடங்குவரை மணமக்களைப் பிரித்து வைப்பதில்லை.சித்திரையில் புத்திரன் பிறந்தால் பார்ப்பானிய சமூகத்தை அடக்கியாளும் என்ற உண்மையை மாற்றுவதற்காகவே சித்திரையில் புத்திரன் பிறக்காமல் இருக்கப் பார்ப்பானியர்களால் சாந்திமுகூர்த்தம் கட்டாயப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது. சித்திரையில் பிறந்த இராமன் உலகை ஆண்டான் என்பது ஒரு வரலாறு. பார்ப்பானியயர்கள் தங்கள் தொழிலுக்கு சித்திரையில் பிறப்பவர்கள் ஆப்பு வைத்துவிடுவார்கள் என்பதற்காகவே பாமர மக்கள் சமுதாயத்தில் அதனைக் கட்டாயப்படுத்தினர்.

திருமணத்தின் அன்றே சாந்தி முகூர்த்தம். மணமகன் மஞ்சத்தில் காத்திருக்கிறான்; மணமகளின் தோழிமார் கையில் பால்செம்பைக் கொடுத்து மணமகளை மஞ்சத்து அறைக்குள் தள்ளிக் கதவைத் தாழிடச்சொல்லிவிட்டு மணமகளுக்குப்பதிலாகத் தாங்களே கூடுதலாக வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டு ஓடிவருகின்றார்கள். அறைக்குள் என்ன நடக்கும் என்று தோழிமார் குசுகுசுவென்று ஏதோ ஏதோ எல்லாம் கதைக்கிறார்கள். முளைத்து மூன்று இலை விடாவிட்டாலும் தழைத்து வளரவேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு. தூரத்தில் இருந்த ஒரு பாட்டியும் இவர்களுடன் வந்து குந்திக்கொணடார். பாட்டி வந்தது இவர்களுக்குச் சங்கடமாகியது. "உங்களுக்கு ஒரு விசயம் சொல்லுவம் என்றுதான் இங்குவந்தனான்" என்று பாட்டி ஆரம்பித்தா. பாட்டியும் விடுப்புக் கதைக்கவந்துவிட்டா என்று நினைத்து தோழியருக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. பாட்டி கூறினார். இருவரும் மச்சானும் மச்சாளும் தானடி. ஆரம்பகாலத்தில் மஞ்சத்தான்; மஞ்சத்தாள் என்ற சொற்கள்தான் காலப்போக்கில் மச்சான் மச்சாள் என்று ஆகிவிட்டது. முன்பு ஆயுள்மத்திரமனை என்பதுதான் இப்ப "ஆசுப்பத்திரி" என்று நாமள் சொல்லுவதுபோல என்று பல உதாரணங்களும் கூறினார் பாட்டி. மஞ்சத்திற்குள் சென்று மணமகள் முதலாவதாக தனது கணவனின் காலில் விழுந்து வணங்கவேண்டும். அது ஒரு மரியாதைக்குரிய வணக்கம்தான். பிறகு மணமகன் மணமகளது காலில் விழுந்து வணங்கவேண்டும். அதாவது மணமகன் இவளவுகாலமும் கட்டிக்காத்த எனது மரியாதையையும்; குடும்பக் கொரவத்தையும் உனது காலடியில் காணிக்கை ஆக்குகிறேன். அதற்கு இழுக்குவராமல் நீ ஒழுக்கமுள்ளவளாக; குலமகளாக இருந்து என்னைச் சமூகத்தில் தலைகுனியாமல் நடக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே பெண்ணின் காலில் விழுந்து மணமகன் வணங்குகிறார். கேட்டுக்கொண்டிருந்த தோழிகள் வணக்கத்திற்கு அப்புறம் அப்புறம் என்று ஆர்வமாகினார்கள். பாட்டி " என்னடி அப்புறம் அப்புறம் என்று கேட்டுக்கொண்டு.... விளக்கு அணைத்தாச்சு ஒன்றும் தெரியுதில்லை போய் தூங்குங்கடி" என்றுவிட்டுப் பாட்டி அவ்விடத்தைவிட்டு அகன்றுவிட்டார். பாட்டி என்றால் கொக்கா!

அதே கிராமத்தில்தான் ஒருநாள் பிற்பகல்;  தெருவில் சென்ற பெண்கள் எல்லாம் தங்கள் முந்தானைகளைச் சரிசெய்து நடந்துகொண்டு இருந்தனர். அழுகின்ற குழந்தைகளைத் தாய்மார்கள் தாலாட்டுப்பாடித் தூங்கவைக்கின்றனர். நெல்லுக்குச் சூடு மிதிப்பவர்கள் தங்கள் மாட்டுக்குக் கேட்கக்கூடிய அளவிலேயே சத்தம் இடுகின்றனர். தண்ணிபோட்டு தள்ளாடுபவர்கள் ஓங்காளித்து அதை எடுத்துவிட்டுத் தம்மைச் சரிசெய்கின்ற பாணியில் மற்றவர்களைப்பார்த்து ஒரு செயற்கைப் புன்முறுவல். பாடசாலை மாணவர்கள் தங்கள் மரியாதையின் நிமித்தம் வேலிஓரங்களால் வீடு சென்றுகொண்டிருந்தார்கள். குளாய் அடியில் தண்ணீர்பிடிக்கும் பெண்கள் வம்புக் கதைகள் இன்றி ஒழுங்கின்படி வரிசையில் நின்று தண்ணீரைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். ஊர்ப் பெரிசுகள் தங்களுக்குத் தெரிந்த செய்திகளை மட்டும் சந்தியில் நின்று ஒவ்வொரு நூல்நிலையம்போல் காட்சியளித்தனர். இப்படி அடங்கிப்போயிருந்த கிராமத்தில் அவன்தான் அன்றைய கதாநாயகன். அவன் பெயர் பத்திரன். இவனைக்கண்டுதான் எல்லோரும் இயற்கை வடிவாகினர். 

தூரத்தில் ஒரு குதிரை வண்டில். அதன் மணிகள் அவனது பெருமையைச் சொல்வதுபோல் பல காததுர்ரம் ஒலிக்கும் சத்தம் கேட்கிறது. அறத்தின்வழி பொருளைத்தேடி வீடுபேற்றுக்கான பல முயற்சிகளைத் தான்பிறந்த கிராமத்திற்காகச் செய்துகொண்ருப்பவன். திறமையுடன் வீரமும் அவனுக்கு இறைவனால் வழங்கப்பட்டிருந்ததுது. பத்திரன் சொல்லுவதையே வேதமாகக் கருதும் கிராமத்து மக்கள் அவனைத் தங்கள் கிராமத்திற்குக் கடவுளின் கொடை என்று கருதி வாழ்ந்தனர். அதனால்தான் அக்கிராமத்து மக்கள் அவனுக்கென்று ஒரு தனிமரியைதை வைத்திருந்தனர். மானம் பெரிது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்லும் அளவிற்குப் பத்திரன் தன்மானமுடையவன். தன்னிலை தாளாமையும் அந்நிலை தாழ்ந்தக்கால் உயிர் விடுதலுமே அவனது வாழ்வின் தத்துவமாக இருந்தது. வாழ்க்கையில் தவறு என்பதே செய்யாத பத்திரன் ஒருவரும்கும் அஞ்சாத முரட்டுக்காளை. அவன் அந்தக் கிராமத்தில் வாழ்வதே தங்களின் பாதுகாப்பு என்று அனைவரும் கருதினர். இளந்தாரிக் கல்லைத் தூக்கித் தன் வீரத்தைக்காட்டி அந்தக்கிராமத்து ஒரு பெண்ணை அண்மையில்தான் மணந்துகொண்டவன். அவனது குதிரைவண்டில் சத்தும் கேட்டும்போதெல்லாம் கிராமத்து மக்கள் அவனுக்காகத் தங்கள் மரியாதையைச் செய்யத் தவறுவதில்லை. 

காலம் சிலருக்குச் சில பதில்களைத் தயாரிப்பதற்காகக் காலத்தை எடுத்துவிடுகிறது. காலம் சிலவேளை விதியின்பால் கொண்ட பற்றுதலால் புதிய விதிகளை உருவாக்குகின்றது. காலம் பதில் சொல்லும் என்பவர்கள்கூட அதற்காகக் காத்திருந்து முழுமை பெறாமலு இறந்தவர்களும் உண்டு. சகுனம் என்பது விதியின் எச்சரிக்கைதான். பத்திரனுக்கு இவற்றில் ஒன்றுகூட அனுசரணையாக இருக்கவில்லை. துர்ரத்தில் ஒரு உயரமான உருவம் நடந்துவந்துகொண்டு இருக்கிறது. கிராமமே இவனா அவன் என்று மூக்கில்விரல்வைத்து நிற்கிறது. கம்பீரமாகக் கண்ணியமாகக் காட்சியளித்தவன் வீடுநடை போட்டவன்! ஓரு வேலியின் ஓரமாக ஒதுக்குப் புறத்தால் தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாத அளவிற்கு அடங்கி ஒடுங்கிப்போய்ச் சென்றுகொண்டிருந்தான். அனைத்துக் கிராம மக்களின் முகங்களிலும் போத்துக்கீசர் நாட்டிற்குள் வந்ததுபோல் பிதுங்கியவிழிகள். ஒருவரையொருவர் பயத்துடன் பார்த்துப் பேசக்கூடப் பயந்து ஒதுங்கிச் சென்றனர். பத்திரனுக்கு என்ன நடந்தது; பத்திரனுக்கு என்ன நடந்தது என்றே எல்லோரது கேள்விகளும் கிராமத்தில் ஏலம் விடப்பட்டதுபோல் எதிரொலிக்கத் தொடங்கியது. 

ஊர்ப் பெரிசு ஒருவர். இவர்தான் அந்தக் கிராமத்தின் திறந்தவெளி நூல்நிலையம். தங்களைத் தாங்களே பெரிசுகள் என்று பட்டம் சூட்டிக்கொண்ட சிலர் அந்த ஊர்ப் பெரிசிடம் பத்திரன் பற்றி விளக்கம் கேட்டனர். பெரிசுக்கு அது நகைச் சுவையாக இருந்தது. மற்றப் பேரிசுகளுக்கு அவர் சிரித்தது நக்கலாக இருச்தது. 

ஊர்ப் பெரிசு கூறியது "பத்திரன் மனைவியின் காலில் விழுந்து வணங்கியதற்கு அவனது மனைவி தலைசாய்க்கவில்லை அதுதான் பத்திரனது இந்த நிலைக்குக் காரணம்" என்று அசிங்கமான ஒரு விடையத்தை மிகவும் அழகாகக்கூறி முடித்தார். அவரது விளக்கத்திற்கு மேலும் வலுச் சேர்ப்பதற்காகக் திருவள்ளுவரையும் அழைத்திருந்தார். விளங்காதவர்கள்கூட இக்காலத்துச் சில தமிழர்களைப்போத் தலயாட்டினர். 

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை
இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை.(குறள்)


எவளவுதான் வீரனாகவும் ஏறுபோல் கம்பீரமாக நடந்தவனாக இருந்தாலும் புகழுக்குரிய இல்வாழ்க்கை (நல்ல பெண்களால்) அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.

இந்த விளக்கத்தைக் கேட்ட எல்லோரும் பத்திரனுக்காக அனுதாபப்பட்டார்கள். பெண்களின் ஒழுக்கம் தமது கிராமத்திற்கு முக்கியம் என்பதை உணர்ந்தார்கள். ஊர்ப் பெரிசிடம் பாடம் கற்க ஆரம்பித்தார்கள்.

இந்தக்காலத்தில் கணவன் மனைவியின்காலில் விழுந்து வணங்குவதில்லை அதனால்நான் சிலபெண்கள் உயரமானவேலிகளையும் பாய்ந்து விடுகின்றார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.(ஒரு உண்மைக் கதையை உருவகப்படுத்தியிருக்கிறேன்)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS