RSS

புருசவண்டு


வண்டைத் தேடிய
புது மலர் நான்;
மொட்டவிழ்ந்தவுடன்
கட்டழகைப் பார்த்தவனே
விரல் கொண்டு கதை எழுதி
என் மேனி சுட்டவனே
இதழ்மீது படங்கீறி
உயிருக்குச் சாணை பிடித்தாயே
வெற்றுக் குடத்துள்ளும்
பால் தேடும் பசி உனக்கு
உறிஞ்சிவிட்ட தேனெல்லாம்
ஒரு நெடியில் தீர்த்ததுபோல்
புலருமுன்னே சென்றாயோ
புது மலரை நாடி.
வண்டே நீ வாழ்ந்துவிடு
போதை தலைக்கேறி
நாளெல்லாம் போதாகி
மாலை மடிகின்றேன்.
நீ கூதி மனை சென்று
குளித்துவிட்டு வந்தாலும்
நாளையும் மலந்த்திடுவேன்
என் புருச வண்டே..

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தலைவன் ஆற்றாமை.


காத்திருந்த கண்ணுக்குள்
பூத்திருந்த புது மலரே
நேற்று வந்த செய்தி ஒன்று
நெருப்பாகக் குத்துதடி
இடுப்பொடியத் தாலிகட்டி
இளம் சிவப்பில் பட்டுடுத்தி
சேர்ந்து படம்  பார்க்கச்
சிலநாளாய் ஆசையடி
கொல்லைப் புறம் வந்து
கொடுத்ததெல்லாம் நீ மறந்து
அல் வந்து எனையாழும்
செல்விருந்துத் தேவதையே
தொல்லை உனக்கென்று
தொலைதுர்ரம் சென்றாயோ
முல்லைக் கொடி நான் என்று
பாரி எந்தன் தேர் கேட்டாய்
கள்ழொழுகும் சிரிப்பில்
என் மெய் ஒழுக முத்தமிட்டு
மை ஒழுகும் கண்ணாளே
நீ மறைந்த மாயம் என்ன.
ஆத்தோரம் நீ நடந்து
அசலூர்க் காரனுடன்
சென்றுவிட்ட செய்தி கேட்டேன்
செத்தாலும் பதில் எழுது.
ஊராரின் பேச்சை
உமி அளவும் நம்பவில்லை
தேரோடு நிற்கின்றேன்
என் திருவிளக்கே வந்துவிடு.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

களவியல்.

















காதலெனும் கணவாய்வழி
இதயம் புகுந்த புதிய தேசம் நீ
பல்லவி இழந்த சரணங்களாய் நான்;
இரவைக் குழைத்து அப்பிவைத்த
உன் கூந்தல் வெளிச்ச இருட்டில்
நட்சத்திரங்களைத் தேடுகின்றேன்.
உறவாய் வந்த என் இரத்தத் தாமரையே
உன் வரவுகள் தந்த சிறகால்
உயரங்கள் சிறுமை கொண்டன.
நிலவைத் தொலைத்த வானம்
பூமியில் உன் முகம் கண்டு மகிழ்ந்தது.
பசலை பூத்த உன் பரிச மேனி
விதைத்த வளையல்கள்  வழிபார்த்து
கருக்கலுக்குள் வந்திடுவேன்
கண்மணியே காத்திரடி.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நிலைக்கண்ணாடி - 42 - புராணப்புரட்டு


"பெண்ணை - ஆடை கட்டிப் பார்த்தால் கலை; இல்லாமல் பார்த்தால் கவிதை; பிணமாகப் பார்த்தால் தத்துவம்." இது கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கூற்று. அவரே தொடர்ந்து கூறுகையில் "உலக அழகியே மடியில் கிடந்தாலும் இவளைவிட அழகி இல்லையா என்று மனம் அங்கலாய்க்கும். கிடைத்தற்கரிய பொருள் கிடைத்துவிட்டால் அதன் மதிப்பு குறைந்துவிடும்" என்கிறார். என்னைப் பொறுத்துவரையில் கிடைத்தற்கரிய பொருள் கிடைத்துவிட்டால் அதுவே எனது பிறப்பின்பயன் என்று கருதுவேன்.

கவி என்று ஒரு மதம் இருந்தால் அதற்குக் கண்ணதாசனையே நான் கடவுளாக வைத்திருப்பேன் என்று சொல்லும் அளவிற்கு அவர்மீது எனக்கு பக்தி அதிகம். அவரது ஒரு பாடலைப் பலவருடங்கள் கழித்து இன்று கேட்கும் சந்தர்ப்பம் வந்தது. "கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்; கடைத்தெருவில் விற்குதடா ஐயோ பாவம்! காசிருந்தால் வாங்கலாம் ஐயோ பாவம்!! .........பத்தினிகள் பெயரைவைத்துப் பரத்தையரை வளர்த்துவிடும் பாரத பூமி; இதை பாருங்கள் சாமி. அவள் பெயரோ அருந்ததி ஐம்பது ரூபாய்; இவள் பெயரோ அகலிகை அறுபதுரூபாய்..... இப்படி அந்தப் பாடல் போகிறது. இந்தப் பாடலுக்குத் திரு MGR அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால் பாரதிதாசன் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக "கோரிக்கை அற்றுக் கிடக்குதையா வேரில் பழுத்த பலா" என்று பெண்களைக் குறிப்பிட்டார். பாரதியார் மட்டும் பெண்களின் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்பவற்றை வேருடன் சாய்த்துப் பெண்களுக்கு இருக்கவேண்டிய குணங்கள் அறிவு துணிவு ஞானம் கல்வி என்று புதுமைப் பெண்ணாக ஒவ்வொரு பெண்களையும் விடுதலை பெறவேண்டும் என்று புரட்சியாகச் சிந்தித்தார். சிந்தித்தும் என்ன நடந்தது.
கவிஞர் வைரமுத்து ஒரு பாடலில் சொல்வதுபோல இங்கிலாந்துப் பெண்ணுக்கும் இந்திய ஆணுக்கும் காமம் அதிகம் என்று சொல்வதையே இந்திய ஆண் சமூகம் செய்துகாட்டி மகிழ்ந்தது என்பது வரலாற்று உண்மை. பாரதம் என்றதும் ஆங்லேயர் "காந்தி" சினிமாப் பார்த்துப் பலவற்றைப் புரிந்து கொண்டார்கள்.(இந்தியர்கள் வெட்கித் தலைகுனியவேண்டிய விடையம். காந்தி சினிமாவையும் ஆங்கிலேயர்கள்தான் எடுத்தார்கள்)  மிகுதியைக் "காமசூத்ரா" சினிமாப் பார்த்து விளங்கிக் கொண்டார்ள். பாரதத்தில் பரத்தையர்கள் எப்படி வந்தார்கள். முற்றும் திறந்த முனிவர்களே பாரதக் கதையில் மனைவிமாருடன்தான் வாழ்கின்றார்கள். அரசனின் அந்தப் புரத்தில்  இருந்து தட்டப்படும் பெண்கள் ஐயர் மாருத்குத் தானமாக வளங்கப்பட்டதாம். இவர்கள் கோவில்களை அண்டிய பகுதிகளில் ஐயர் மார்களாலும் கைவிடப்பட்டுத் தேவதாசிகள் என்ற முத்திரையுடன் வாழ்பவர்கள். சங்ககாலத்தில் இசையையும் கலையையும் வளர்த்த பாணர் குடும்பங்கள் மற்றவர்களின் இம்சைக்கும் இயைந்து போனார்கள். இவ்வாறு பெண்கள் வரலாற்றில்; கெடுதவர்கள் தப்பிக் கொண்டார்கள். கெடுக்கப்பட்டவர்கள் மாட்டிக் கொண்டார்கள்.
இது நிரபராதிகள் தண்டிக்கப்படும் ஒரு செயலாகவே காணப்படுகிறது. கீழே இப்படி என்றால் மேலே இருக்கும் பெண்கள் எப்படியோ?

இது பிரம்மாவின் கூற்று.  அகலிகையை மணக்க விரும்புவோர் மும்முறை உலகைச் சுற்றி வரவேண்டும். அதில் வெல்பவருக்கே அவள் மனைவியாக்கப்படுவாள்  என நிபந்தனை விதிக்கப்பட்டது. பல தேவர்களோடு இந்திரனும் கௌதம ரிசியும் கலந்து கொண்டார்கள். விதியின் பயனாய் கௌதமர் வென்று அகலிகைக்கும் அவருக்கும் திருமணம் நடந்தேறியது.போட்டியில் தோற்ற இந்திரனுக்கு அவளை ஒருமுறையேனும் அடையவேணடும் என்ற விருப்பம் மேலிட்டது. ஆசை தணியவில்லை அவனுக்கு.
இந்திரன் ஒருநாள் முனிவரது இடத்திற்குவந்து கோழிச்சேவல் கூவுவதுபோல் கூவ கொதமர் விடிந்துவிட்டது என்று நினைத்து நீராடி மலர் பிடுங்க ஆற்றங்கரை சென்று விட்டார். இந்திரன் சந்தர்ப்பம் பார்த்து அகலிகையை நெருங்குகிறான். அகலிகை பார்த்த மாத்திரத்திலேயே இவன் தன் கணவன் அல்ல எனப் புரிந்து கொண்டாலும் தன் அழகின் மீது இந்திரனுக்கு இருந்த தணிக்கமுடியாத ஆசையால் (இதுதான் உண்மை. மறைக்கப்பட்ட மறுபக்கம். ஆதாரம் இருக்கிறது)  அவனுக்கு(விதியின் பிரகாரம்) உடன்படுகின்றாள். வெளியே சென்றிருந்த கெளதமர் திரும்பி வருவதற்குள் அங்கிருந்து பூனை வடிவில் மறைய முற்பட்ட இந்திரன் முன்னே; நெற்றிக்கண்ணைத் திறந்து கொண்டு வந்த ஈசனைப் போல் தோன்றிய கெளதமர் இந்திரனுக்கும், அகலிகைக்கும் சாபம் கொடுக்கின்றார். இந்திரன் தன் ஆண்மையை இழக்குமாறும், அகலிகை உண்ண உணவின்றி, காற்றையே உணவாய்க் கொண்டு, புழுதியில் புரண்டு, எவர் கண்களுக்கும் தெரியாததோர் பிறவியாகத் தூசியிலும் தூசியாக ஒரு அணுவாக இங்கேயே நெடுங்காலம் கிடந்த பின்னர், தூயவனும், நன்னடத்தையின் நாயகனும் ஆன ராமன் வருவான். அப்போது உனக்குச் சாப விமோசனம் கிடைக்கும் என்று சொல்லிச் சென்றார்.
வில்லை ஒடிக்கச் சென்ற ராமன் விசுவாமித்திரருடன் சாபவிமோசனத்திற்காகக் காத்திருக்கும் இடம் சென்றான்.  ராமனும் அந்த ஆசிரமத்தின் உள்ளே பிரவேசித்ததும், அகலிகை தன் பழைய உருவை அடைந்தாள். ராமரை வணங்கி நின்ற அவளை அப்போது தன் மனோவலிமையால் அங்கே வந்து சேர்ந்த கெளதமரும் மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றார். ராமனும், லட்சுமணனும் விசுவாமித்திரருடன் மிதிலை நோக்கிச் செல்கின்றனர்.  தவ வலிமையால் அகலிகை சாபவிமோசனம் பெற்றதை விண்ணுலகில் இருந்து அறிந்த கொதமருக்கு தனது வீட்டு முற்றத்தில் இந்திரன் வந்து கோழிபோல் கூவியது மட்டும் தெரியாமல் போய்விட்டது ரிசிகளின் கேவலம்.  இது கதையா புரட்டா. பெண்களை அடிமைப்படுத்தும் அரக்கர் கூட்டமா புரியவில்லை.
அதுசரி கலியாணத்தில் அகலிகைதான் அம்மிக் கல்லாக இருக்கிறாள் என்று மணமகளை வெருட்டி அதில் வைத்து மெட்டி அணிவிக்கிறார்கள். கொதமர் அவள் தூசியிலும் துர்சியாக இருக்கவே சாபம் இட்டார். பார்க்கப்போனால் மாப்பிளை கனக்கக் குனியக்கூடாது என்பதற்காக சிறிது உயரமாகக் காலைவைப்பதற்கே அம்மிக்கல் பாவிக்கப்படுகிறது என்பதுவே உண்மைபோல்இருக்கிறது. வாழ்க மணமக்கள்.நப்பண்ணனார் இயற்றிய பரிபாடல் தொகுப்பின் பத்தாம் பாடல் அகலிகையின் கதை கூறுகிறது.
இந்தியா பரவாயில்லை. அமரிக்காவில் ஒரு நிமிடத்திற்கு 300 பேர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் படுகிறார்களாம். உண்மை தானா?

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காமன் தோட்டம்


அன்று அடை மழைகாலம். அலாsகாவைவிட அதிகமழை. உலகில் மிகவும் மழைவீழ்ச்சி கூடிய இடம் வருடத்தில் 500 அங்குல மழைவீழ்ச்சி அங்குதான்.  எனது துவிச்சக்கரவண்டியில் வேகமாகச் சென்று கொண்டிருந்தேன். வேகத்திற்கு காரணம் குடை இல்லாததுதான். வேல்ட் றைக்கோட்டுக்காக அல்ல. கிராமத்து மக்கள் மழைநீரை கடலினுள் செலுத்துவதற்காக வீதிகளை வெட்டி வாய்க்கால் செய்து கொண்டிருந்தார்கள். வீதியைப் போடும்படி அரசிடம் கேட்பார்கள். வெட்டும்போது யாரிடமும் கேட்கமாட்டார்கள் சைக்கிளில் வேகமாக வந்தவர்கள் வெட்டிய குழிகளுக்குள் விழுந்து எழுந்து சிரித்துவிட்டு மீசையில் மண்படவில்லை என்பதை ஞாபகம் ஊட்டிச் சென்றார்கள்.  முருங்கை மாதிரி வளர்ந்து இருக்கிறாயே தவிர உன்னால் ஒன்றும் இயலாது என்று தெருவில் நின்ற தன் புருசனைப்பார்த்து மனைவி திட்டுகிறாள்.திட்டுதலுக்கு இங்கு காரணம் எதுவும் இல்லை. புருசன் என்ற சுய மரியாதைதான். முருங்கை; முள்முருங்கை என்று இரண்டு உண்டு. அதில் எந்த முருங்கையைத் திட்டினாள் என்று எனக்குச் சந்தேகம். இந்தியாவில் முருங்கைக்காய் இப்போது கொடியில் காய்க்கிறது. புடலங்கயைப்போல. முருக்குப் பெருத்துத் தூணுக்கு உதவாது என்று சொன்ன வாத்தியாரும் துலாவடி முருங்கில் முதுகு தேய்த்ததை நான் பார்த்து இருக்கிறேன். திடீரென்று பக்கத்துவீட்டு அக்கா என்னை அழைக்கும் சத்தம் கேட்டது. அந்தக்காலத்து வாய்த் தொலைபேசி. 50 மீட்டருக்குள் கதைக்கலாம்.
ஓடிச்சென்று பார்த்தேன் மழை காலத்தில் எங்கள் கிராமத்தில் பனாட்டு சாப்பிடுவார்கள். எனக்கும் சாப்பிட பனாட்டுக் கிடைத்தது. அது மண்கும்பான் பானாட்டு என்று நினைக்கிறன். இடை இடையே மண் கடிபட்டது. அது யோசப்பின் பாபா கொடுத்த அல்வாவைவிட ருசியாக இருக்கும். "அத்தானுக்கு 2 சிகரட் வாங்கிவாடா. பிறகு துள்ளு பிராண்டி கிள்ளுபிராண் விளையாடுவம் என்றார் அக்கா. அவர் திருமணம் ஆனாலும் முந்தானை முடிச்சில் வரும் ஊர்வசிபோல் எங்களுடனேயே காலத்தைக் கழிப்பார். சிகரட்டை வாங்கி வரும்வழியில் நெருப்பு மூட்டாமலே 2 இழுவை இழுத்துப்பார்ப்பது என் வழக்கம். அத்தான் என்னடா நனைந்து இருக்கிறது என்றுகூட கேட்டிருக்கிறார்.
விளையாடத் தொடங்கியாச்சு. ஆறு ஏழு பேர் வட்டமாக உட்கார்ந்து கையை கவிட்டுவைத்து ஆரம்பமாகியது. அக்காதான் தலைவர். அவர் எங்கள் பிறங்கையில் நுள்ளி நுள்ளி "நுள்ளு பிராண்டி கிள்ளுப்பிராண்டி உங்கக்கா தலையில் என்னபூ என்று கேட்பார். நாங்கள் முருக்கம்பூ என்று சொல்லவேண்டும். பிறகும் முருங்கை மரம் காட்சிக்கு வருகிறது. அதே நேரம் "மறுபடியும் வேதாளம் முருங்கைமரம் ஏறியது என்று சிறிய வயதில் அம்புலிமாமா புத்தகத்தில் படித்த நினைவும் வருகிறது. வீட்டு முற்றத்தில் நிற்கும் முருங்கையில் இருந்து காகங்கள் கரைந்து கத்தும்போது என்னை அகத்திய முனிவர் பற்றிச் சிந்திக்க வைத்தது. அவரது கமண்டலத்தில் இருந்து காகத்தால் தட்டி விடப்பட்ட நீரே கங்கையாக ஓடிற்று என்று புராணம் கூறுகிறது. அகத்தியரைக் குறு முனிவர் என்று படித்தபோது யாரோ ஒருவர் அவரை உயரத்தில் நின்று பார்த்து இப்படிக் கூறினார்களோ என்றும் யோசித்து இருக்கிறன். எங்கள் கிராமத்திலும் ஒரு கட்டை மனிதர் அகத்தியர் உருவத்தில் இருந்தார். மிகவும்  புத்திசாலி. அவரை நாங்கள் பெரியவர் என்று அழைப்போம். எனக்கு மரங்களில் ஏறியிருந்து கதைபடிக்க ஆசை. அதனால் மு.வரதசாசரின் "நெஞ்சில் ஒரு முள்" கதையை முருங்கை மரத்திரத்தில் ஏறியிருந்து படித்துக்கொண்டு இருந்தன். திடீரெனக் கொப்பு முறிந்து நான் கிளுவை வேலியில் விழுந்து தொடை எல்லாம் முள்ளுக் குத்தி வேலிக்குப் பக்கதில் இருந்த கிணற்றுக்குள் விழுந்துவிட்டேன். நெஞ்சில் ஒரு முள் தொடையில் ஒரு முள்ளாக மாறியதை நான் இப்பவும் இரைமீட்கின்றேன். கால் கை தொடை எல்லாம் காயங்கள். காயப்பட்டுத் தண்ணீருக்குள் விழுந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
மறுவாரம் எங்கள் கிராமத்தில் ஒரு கலைவிழா நடக்க இருக்கிறது. அதில் "காமன் தோட்டம்" என்ற நாடகத்தில் நான் இந்திரனது மகனாக  நடிக்க இருக்கிறேன். அந்தக் கதையில்கூட எனக்கு முள்முருங்கை பற்றிய விளக்கத்திற்கான சிறிய பாத்திரம் தரப்பட்டீருந்தது. அதில் எங்கள் ஊர் பெரியவர் அகத்தியர் வேசம் போடுகிறார். கதை இதுதான்.
தென் பொதிகை மலையில் தவம் செய்துகொண்டிருக்கும் அகத்தியர் மிகவும் கட்டுப்பாடானவர். தமிழை வளர்ப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். சித்தர் வரிசையில்அவருக்குத் தனிமரியாதை உண்டு. பல மூலிகைகள் மூலம் ஆயுள்வேத மருத்துவத்திற்கு உதவி பண்ணியவர். இப்படிப்பட்ட அவரைக் கௌரவிக்க வேண்டும் என இந்திரன் பலநாட்களாகத் திட்டம் ஒன்று போட்டான். இந்திரனின் அழைப்பை ஏற்று அகத்தியமுனிவரும் இந்திரனது சபைக்குப்போகின்றார். அகத்தியரை வரவேற்பதற்காக இந்திரன் தனது நடன மங்கைகளான அப்சரா குழுவின் நடனத்தை ஏற்பாடு செய்திருந்தான். அதில் ரம்பை ஊர்வசி மேனகை என்பவர்கள் மிகவும் அழகானவர்களாக இருந்தார்கள்.

அகத்தியருக்குப் பக்கத்தில் இந்திரனது மகன் உட்கார்ந்து நடனத்தைக் களித்தான். இந்திரனின் மகன் என்றால்சொல்லவா வேண்டும். அழகில் சிறந்தவன். (அதனால்தான் என்னை இந்த நாடகத்திற்கு எடுத்தார்கள்) நடனமாடிக் கொண்டிருந்த ஊர்வசியைக் காமக்கண்கொண்டு பார்க்கத் தொடங்கினான். ஊர்வசியும் அவனது கணையில் விழுந்தவளாக அவனையே பார்த்துப் பார்த்துக் கண்களால் கதைபேசினாள். இதை அகத்தியர் பார்த்துவிட்டார். அகத்தியர் தனக்கு இழைக்கப்பட்ட மரியாதைக் குறைவாக இந்த நிகழ்வை எண்ணினார். இந்திரனுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இந்திரன் அகத்தியரைப் பார்த்து இவர்களுக்கு நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்.இந்திர லோகத்தைக் காப்பற்றுங்கள் என்றும் கட்டளை இட்டான். உடனே அகத்தியர் இந்திரனது மகனைப் பார்த்து "நீ பெண்களைக் காமக்கண்கொண்டு பார்ப்பதால் பூமியில் முள்முருங்கை மரமாகப் பிறக்கக் கடவாய் என்று சாபமிட்டார். ஊர்வசியைப் பார்த்து நீ பூமியில் ஒரு ஆடலரசியாகச் சென்று பிறந்து சாபவிமோசனத்தைத் தீர்த்துக்கொள் என்றார்.

அந்த ஊர்வசிதான் காவிரிப்பூம் பட்டினத்தில் மாதவியாகப் பிறந்து  நாட்டியப் பேரொளியாகத் திகழ்ந்தாள் என்று ஐதீகக் கதைகள் கூறுகிறன. சைவத் திருமணங்களில் அக்கினி எரித்து அருந்ததி காட்டித் திருமணம் நடைபெறும் பகுதியில் ஒரு முள் முருங்கை மரமும் நடுவார்கள். அதுதான் இந்திரனது மகனது பிறப்பு. அந்த முருங்கை மணமகனுக்கு "நீயும் அடுத்தவன் பொண்டாட்டியையோ பிற மாதர்களையோ பல யோனிபேதங்களையோ பார்த்தால் உனக்கும் மறுபிறப்பு முருங்கை மரம்தான்" என்பதை நினைவு கூரவும் ஆண்களை ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாகவுமே முள்முருங்கை நடப்படுகின்றது. அதனால்தான் முருங்கை மரத்தில் இருக்கும் முட்கள் பெண்களின் குறிகள் போல் அமைந்திருக்கின்றன. அதைப் பொத்திப் பிடிக்கும்போது கைகளில் சேதம் உண்டாகி இரத்தமும் வழிந்துவிடும். பல பெண்கள் தொடர்பு மணமகனுக்கு இப்படி அழிவைக்கொடுக்கும் என்ற தத்துவமே முருங்கைமரம்.
அந்த அடைமழைக் காலத்தில் தெருவில் நின்ற அக்கா முருக்கு பெருத்துத் தூணுக்கு உதவாது என்று திட்டியது என்னைத்தானோ என்று இப்ப யோசிக்கிறன். ஏனெனில் நான் நாடகத்தில் இந்திரனின் மகனாக நடத்தேன். அவரும் நாடகம் பார்த்தவர். மகனுக்கே இந்தத் தண்டனை என்றால் பூமியில் வந்து அகலிகையைக் கெடுத்துவிட்டுப்போன இந்திரனுக்கு என்ன தண்டனை என்று யாரிடம் நாம் கேட்பது.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நூல்வேலி



எங்கட ஊரில சில பெரிசுகள் ஒரு சொல்லை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாவிப்பார்கள். எங்கள் தாத்தா யாரைப்பார்த்தாலும் மகனே மகனே என்று அழைப்பார்  மகனே என்பது மான என்று மருவி அவரை மான சின்னையா என்று அழைத்தார்கள். இப்படி ஊரில கத்தல்; அசம்பாவிதம்; சைவம்; சின்னவன்; தாலியறுப்பு என்றெல்லாம் சிலருடைய பெயருக்கு முன்னுக்குத் தாங்களாகத் தேடிக்கொண்ட பட்டப்பெயர்கள் உண்டு. ஒருநாள் இப்படித்தான் டென்மார்க்கில் ஒரு திருமணவீட்டில் மணமக்களை வாழ்த்திப் பேசிக்கொண்டிருக்கும்போது வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்திருந்தார்கள். (ஒபாமா: மண்டேலா: ரகுமான்; வைரமுத்து என்று நினைத்து விடாதீர்கள். நம்ம சனம்தான் வந்தது) திடீரென மண்டபத்தில் நின்ற ஒருவர் தனது மனைவிக்கு "சிறி அண்ண பேசுகிறார்" என்றார். எனது பேச்சு முடிந்ததும் எனதருகில் வந்து "நீங்கள்தானே சிறி அண்ணா" என்றார். 30 வருடங்கள் களிந்துவிட்டது எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்றேன். அவர் சொன்னார் "நீங்கள் பேசுகின்றபோது பாவிக்கும் சொல்லில் இருந்து நீங்கள்தான் என்பதைப் புரிந்து கொண்டேன் என்றார். அந்தச் சொல் என்னவென்று கேட்டு மகிழ்ந்தேன். வாசகர்களுக்கு அது தணிக்கை செய்யப்பட்டுள்ளது. பிறகு எனக்கும் ஒரு பட்டம் வந்துவிடும் அல்லவா!  ஊரில் தாலியறுப்பு என்று அழைக்கப்படும் அந்த தாத்தா ஒரு தாலியையும் அறுக்கவில்லை ஏனென்றால் அவர் ஒருவருக்கும் தாலிகட்டவில்லை. பிரமச்சரிய விரதம்.
தாலி என்றவுடன் பத்திரிகைகளில் வரும் செய்திகள் மனத்திரையில் பதிவாகிறன. "தாலியை ஒற்றிய வாலிபர் பொலிசில் சரண்"  தாலியைத் திருடிய கணவன்" தாலியைக் கழற்றியெறிந்த தாரம்"  தாலியை விற்றுப் பிள்ளைகளைப் படிப்பித்த தாய். கையில்காசு கழுத்தில் தாலி"  "தாய் மகளுக்குக் கட்டியதாலி(இது ஒரு சினிமாவின் பெயர்). இதைவிட ஈழத்தில் போர்க் காலத்தில் சிங்கள ராணுவம் தமிழ்ப் பெண்களின் தாலிகளைக் களவாடித் தங்கள் கழுத்துக்களில் அணிந்து கொண்டார்கள். 2002 ம் ஆண்டு புலிகள் மண்டதீவு முகாம் அடித்து ஆயிரக்கணக்கில் ஆமிகளைக் கொண்றபோது சிலரது கழுத்துக்களில் தாலிக்கொடிகள் கிடந்ததைக் கண்டார்கள்.
தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை ஆபரணம்  ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது அதன் முக்கிய குறியீடு. குறியீடு இருந்து என்ன பலன். சிலர் குறிதவறியும் விடுகிறார்கள். குறியீடு இல்லாமலும் பல பெண்கள் குறிதவறாமல் வாழ்கிறார்கள். சிறை காக்கும் பாதுகாப்பைவிட நிறைகாக்கும் காப்பே கற்பு என்று வள்ளுவர் சொல்லி 2000 வருடங்கள் சென்றுவிட்டன. அதனால் உலகம் அதை மறந்துவிட்டதுபோலும். களவையும் கற்றுமற என்பது களவியலுக்குத்தான் சொல்லப்பட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.
தாலி – என்ற சொல்லின் பிரயோகம் அதன் வேர்ச்சொல் என்பன இன்றுவரை. இனங்காண முடியவில்லை. நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து அதாவது சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை போன்றவற்றில் அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததிற்கு எந்தவிதமான பதிவுகளும் இல்லை. கோவலன் கண்ணகி திருமணத்திலும் தாலிகட்டியதாக எந்தச் சம்பவமும் இடம்பெறவில்லை.
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954-ல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இதைத் தொடங்கி வைத்தவர் கண்ணதாசன் அவர்கள்தான். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் ம.பொ.சி அவர்கள் மட்டுமே. இருந்தும் அவரால் எந்த வரலாற்றுப் பதிவுகளையும் ஆதாரமாகக் காட்ட முடியவில்லை. கி.பி. 10-ம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டிலும் தமிழர் மத்தியிலும் தாலி என்ற சொல் வழக்கத்தில் இருந்தது கிடையாது’ – வரலாற்று ஆய்வறிஞர் அப்பாத்துரையார் அவர்கள் பழந்தமிழர்களிடத்தில் தாலிகட்டும்  வழக்கு இல்லவே இல்லை என்று கூறுகின்றார்.  திருவள்ளுவர் கூட ஒரு இடத்திலும் தாலிபற்றிக் கூறவில்லை. சொற்களுக்குப் பொருள்கூறும் தொல்காப்பியத்திலும் தாலிபற்றி எதுவும் கூறப்படவில்லை. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலிகட்டுதல் என்ற விடையமே பாடப்படவில்லை. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
கி.பி. 10ம் நூற்றாண்டிற்கு பிறகே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாக கொள்ளலாம்.காஞசி கைலாசநாதர் கோவில் தூண் கல்வெட்டு ஒன்றில் குந்தவை கொடையாகக் கொடுத்தது."ஆறு களஞ்சேய் குன்றி தாலிமணிவடம் என்று ஒரு குறிப்பு வருகின்றது.
தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும், எழுதவும் தொடங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின.பின்னர், 1968-ல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லா திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது. 11-ஆம் நூற்றாண்டில் கச்சியப்பரால் இயற்றப்பட்ட கந்தபுராணத்தில் தான் திருமணத்தின்போது தாலி கட்டப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
பழந்தமிழர் யார்? அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதைப் பற்றி நமக்கென்ன கவலை. அது இன்று அறிவுக்குப் பொருந்துமா? என்று கேட்டு, தாலி அடிமையின் சின்னம் என்றார் தந்தை பெரியார்.

பெண்ணிய பார்வையில் ஆண்கள் தாம் திருமணமானவர் என்பதை வெளிப்படுத்த எந்தவொரு குறியீடும் இல்லாமல் பெண்ணிடம் தாலி, குங்குமம், மெட்டி என்று குறியீடுகளைத் திணிப்பது ஒர் ஆணாதிக்கச் செயற்பாடாக தற்போது சில முற்போக்கு எண்ணமுடையவர்களினால் பார்க்கப்படுகிறது. இப்படி பல விடயங்கள் வரலாற்றில் உள்ளபோதும் அவற்றை எல்லாம் ஒரு அறிவுக்காக அறிந்து கொண்டு  நாம் இப்போ  நிகழ்கால நிகழ்வுக்கு வருவோம்.
தற்போது கல்யாணத்திற்கு தாலிக்கொடி செய்வதை ஒரு போராட்டம் என்றே கருதவேண்டும். காரணம் தாலி என்னும் வறட்டுக் கெளரவம்  படியேறிப்  படியேறி  தற்போது 50 பவுனில் வந்து நிற்கின்றது. இதைவிட சிலர் பேரப்பிள்ளையையும் கண்டபின், தமது பழைய தாலியை புதுப்பித்து 50 பவுணில் பெருப்பித்து கட்டுவதும் நடைபெறுகிறது.
சிலர் தமது மகளின் கல்யாணத்திற்குச் சிங்கப்பூர்  சென்று, மகளுக்கு உரிய நகை; தாலி வாங்குவதுடன் கணவன் தன் மனைவிக்கும் புதுத்தாலி வாங்கி வருகின்றார். 
தமிழ் நாட்டில் என்னதான் பணக்காரர்கள் என்றாலும் அவர்கள் மஞ்சள் கயிற்றில் தான் தாலி கட்டுவார்கள். அப்போதுதான் மூன்று முடிச்சு போடமுடியும்! பின்னர் தாலிப்பெருக்கம் என்ற கிரியைசெய்து பவுண் கொடியில் தாலியை மாற்றுவார்கள். ஆனால் ஈழத்தில் மட்டும் எப்படிப் பவுனில் தாலிக்கொடி கட்டும் வழக்கம் வந்ததோ தெரியவில்லை. இந்தத் தாலியக்கட்டின சண்டைப் பிரச்சனையால் எத்தனை தாலியைத்தான் கட்டுதுகள். சாமத்தியவீட்டுக்குப்போக ஒரு தாலி; ஆசுப்பத்திரிக்குப்போக ஒரு தாலி; திருமணவீட்டுக்குப்போக ஒரு தாலி என்று வித்தியாசமான மொத்தங்களில் சிலர் தாலி வைத்திருக்கிறார்கள். அவர்களைக் கேட்டால் "தாலி ஒரு சங்கிலியில் களற்றாமல் கழுத்துடனேயே கிடக்கிறது. கொடிதான் மாத்தி மாத்தி போடுகிறது என்று புருசனது உயிரையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் காப்பாற்றுபவர்கள்போல் ஒரு பில்டப். சிலருக்கு தாலிகட்டு அன்று எந்தக்கூறைச்சேலை உடுத்தது என்றே தெரிவதில்லை. இருப்பதெல்லாம் ஒருமுறை உடுத்த கூறைகள். தாலிகட்டுப் படத்தைப்பார்த்துத்தான் அதைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானம் வீடுகளில் வளர்ந்துவிட்டது.
முடங்கப் பாய் இல்லாவிட்டாலும் சடங்கை நிறுத்தாத சம்பிரதாயம் தமிழர் கலாச்சாரமாகிவிட்டது. பிற்பட்டகால கலாச்சாரத்தில் வியாபாரம் கொரவம் என்ற இருவேறுபட்ட வடிவங்கள் ஒன்றுடன் ஒன்று உறவாடித் தாலிகளுக்குப் பல பெயர்களைக் கொடுத்து வைத்திருக்கிறது. அவற்றின் பெயர்களைப் பாருங்கள். எது பொருந்தும் என்பது உங்கள் பெருந்தன்மையில் தங்கிநிற்கிறது.
1. பெருந்தாலி, 2. சிறுந்தாலி, 3. தொங்கு தாலி, 4. பொட்டுத் தாலி, 5. சங்குத் தாலி, 6. ரசத்தாலி, 7. தொப்புத் தாலி, 8. உருண்டைத் தாலி, 9. கருந்தாலி 10. ஜாகத்தாலி, 11. இருதாலி, 12. தாலிக்கட்டி 13. வைரத்தாலி 15. சங்கிலித்தாலி என புதிய வடிவங்களில் நீண்டு செல்கிறது.
கொம்புத்தாலி அல்லது தொங்கு தாலி (கொம்புத் தாலி நடுவில் இருக்க காசுகள் இருபக்கமும் இருக்கும்) என்பது தமிழ் சைவ கலாச்சாரத்தையும்பின்பற்றி அணிவது வழக்கமாகும்
கொம்புத் தாலிக்குப் பக்கத்தில் இரு பக்கமும் குறைந்தது ஒவ்வொரு பவுணில் காசுகள் போடுகிறார்கள். இதற்கு தடை என்று பெயர். ஏன் எதற்கு என்ற கேள்வி இல்லாமலே ஊரோடு ஒத்தோடுகின்றார்கள். ஒருவராவது ஏன் என்று கேட்டு ஓடவில்லை. அணியப்படும் காசுகுளில் ஒரு பக்கம் ராசாவும் மறுபக்கம் ராணியும் ஒருவரை ஒருவர் பார்த்துபடி இருக்கிறார்கள். அதுவும் ஆங்கில நாட்டு ராசா ராணி. இவர்களுக்கும் தமிழர் தாலிக்கும் என்ன சம்பந்தம். ஒருவேளை ஒருகாலத்தில் ஒன்றும் அறியாத தமிழர் இவர்களை ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் என்று கருதினார்களோ தெரியாது. அதுதான் போகட்டும். சாள்சு டயானா கதை தெரிந்த பின்னரும் ஏன் என்ற கேள்வியை எந்த மாப்பிளை மாரும் குருக்களிடமோ தங்கள் பெற்றோர்களிடமோ கேட்டது கிடையாது. சுவிசில் பல வருடங்களுக்கு முன்பு UBS வங்கியில் தமிழ்ச்சனம் ராசா ராணி காசுக்கு கியூவில் நின்றார்கள். அப்போது வங்கியில் வேலைபார்த்த வெள்ளைக்காரன் கேட்டான். "ஏன் இதைப் போடுகிறீர்கள். உங்கள் அப்பாவையும் அம்மாவையும் இந்தக் காசில் போட்டு தாலியில் கொழுவினால் என்ன" என்று. சில தமிழர்கள் அவனைப்பார்த்துச் சிரித்தார்கள். சில தமிழர்களுக்கு மொழி விளங்கவில்லை.
இந்த உத்தியைத் தனக்குச் சாதகமாகப் பாவித்து சிங்கப்பூர் நகைக்கடைக்காரர் ஒருவர் 18 கரட்டில் ராசா ராணி போட்டு காசு செய்து சுவிசுக்கு அவரது தரகர் மூலமாக 22 கரட் என்று கொடியுடன் சேர்த்து  அவித்துவிட்டார். இப்போது சிலரது காசுகள் கறுக்கிறதாம். இலங்கைத் தமிழர் உலகத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என்பது இதைத்தானோ?.
ஒரு திருமணத்திற்கு 4 கிராம் பவுணும் ஒரு மஞ்சள் கயிறுமே போதுமானது. தமிழ்நாட்டில் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு அரசாங்கத்தால் கொடுக்கப்படுகிறது. ஈழத் தமிழினமே கொஞ்சம் சிந்தியுங்கள். எங்கள் தொப்புழ் கொடி உறவுகள் என்பீர்கள். ஈழத்தில் யாராவது ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்கு தாலி கொடுத்திருக்கிறீர்களா? புலம் பெயர்ந்த தமிழ் பெண்ணினமே அடுக்கி வைத்திருக்கும் கூறைச் சேலைகளை பெட்டியுடன் இருந்து இத்துப் போவதற்கு இடையில் உங்கள் உறவுகளுக்கு ஈழத்திற்கு அனுப்பி வையுங்கள்.
தாலி பெண்ணிற்கு ஒரு வேலி என்பது ஆணாதிக்க சமுதாய சுலோகங்கள். வேலி நூலில் இருந்தாலும் தங்கத்தில் இருந்தாலும் அதற்கான புனிதத்துவத்தைப் பாதுகாத்துவாழும் பெண்களே போற்றுதலுக்கு உரியவர்கள்.
ஒரு பாடல் இருக்கிறது. "ஒத்த ரூபா தாறன் நீ ஓடப்பக்கம் வாவேன்........இதில் கடைசியில் பெண்ணுக்கான பாடல் வரிகளில் "மஞ்சள் கயிறு தந்தால் மாமா மடியில நான் வாறன்"  இதுதான் உண்மையான நூல்வேலி. தாலி என்பது கணவன் மனைவிக்கான அங்கீகாரமே தவிர ஒரு பெண்ணிற்கான விலங்கு என்று கருதுவது முட்டாள்தனமானது.
(இந்தக் கதை புலம்பெயர்ந்தத ஈழத்தமிழர்களை மையப்படுத்தியே எழுதப்பட்டது)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மனக்கணக்கு



அவன் ஒரு பாவப்பட்ட யென்மம். அவன் மட்டுமல்ல அவனைப்போன்ற ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அந்நிய தேசத்தில் மனைவி பிள்ளைகளை வசதியாக வாழவைப்பதற்காக இரும்புத் தொழிற்சாலைகளிலும்; கட்டிட வேலை நிறுவனத்திலும்; பாரிய கைத்தோழில் பேட்டைகளிலும் இரத்தத்தைப் பிழிந்து உழைக்கின்றார்கள். -20 பாகை குளிரிலும் ஒரு நிமிடம் கூடப் பிந்தாமல் வேலைக்குச் செல்ல வேண்டும். வேலை தொடங்கும் நேரம் காலை 7 மணி என்றால் 7 மணிக்கு முதலே நமது வரவுக் card  ஐ அடித்துவிடவேண்டும். 7 மணி ஒரு நிமிடத்திற்கு அடித்தால் card இல் 7.15 க்கு வேலை தொடங்கியதாகவே பதிவாகும். அந்தப் பிந்திய 15 நிமிடங்களுக்கும் சம்பளம் வழங்கப்படமாட்டாது. இப்படி 4 தொழிலாளர்கள் பிந்திவந்தால் ஒருமணித்தியாலத்திற்கான உழைப்பு கம்புனிக்கு வருமானம் ஆகிறது.சுருக்கமாகச் சொன்னால் ஒருகாலத்தில் வெள்ளைக்காரன் நமது நாட்டுக்கு வந்து எங்களைச் சுரண்டி வாழ்ந்தான். இப்போ நாங்கள் அவர்கள் நாட்டுக்குவந்து நாமாக அவர்களைச் சுரண்டவிட்டு வாழ்ந்து காலத்தை ஓட்டுகிறோம். ஐரோப்பிய நாடுகளில் சிரிப்பைப் பலவழிகளிலும் தொலைத்த தமிழர்களின் வேதனைகள் சொல்லில் அடங்காது. வெளியில்தான் வேதனை என்றால் சிலருக்கு வீட்டிலும் நரகவேதனைகளும் உண்டு.

அவனுக்கு காலை 7 மணியில் இருந்து மாலை 4 மணிவரை வேலை. எழும்பும்போது அலார்ம் அடிக்கும் கடிகாரத்தில் எரிச்சல். தானாகக் காப்பிவைத்துக் குடிக்கும்போது மனைவியில் எரிச்சல். வேகமாகக் கிளம்பும்போது முதலாளியில் எரிச்சல். மொத்தத்தில் இது ஒரு நரகம். சொர்க்கமும் பூமியில்தான் இருக்கிறது என்பதை இறக்கும் வரை உணரமுடியாத நிலை. அவனுக்கு 4 மணிக்கு வேலை முடிகிறது. வேலை நேரத்தில் கைத்தொலைபேசிகளை ஓவ் பண்ணிவைக்கவேண்டும் என்பது அவனது கம்பனியின் கட்டுப்பாடு. வேலை முடிந்து ஒரு காப்பியைக் குடித்துவிட்டு கைத்தொலைபேசியை ஓண் பண்ணினான் அவன். வீட்டில் இருந்து அவனது மனைவி 10 நிமிடத்திற்கிடையில் 23 தரம் கால்பண்ணியிருந்தாள். அவசரமாகத் தனது காரை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.
திருப்பி எடுப்பதற்கிடையில் மறுபடியும் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. "நான்தான் கதைக்கிறன். எப்ப வேலை முடிந்தது. ஏன் உடனே தெலைபேசியைப் போடவில்லை. 108 தரம் எடுத்து களைத்து சீ என்று போய்விட்டது. நான் தம்பியின் கலியாணத்திற்கு ஒரு சட்டை தைப்பிக்க தையல்காரவீட்டுக்குப் போகவேண்டும். (தையல் காரர் ஒரு ஆண். நன்றாக உடைகள் தைப்பார். அமத்தி அமத்தி அளவு எடுப்பதால் சிலருக்கு பிளவுசுகள் இறுக்கமாகவும் வந்துவிடும்.அதனால் அதிகமான பெண்கள் அளவு சட்டைகளைக் கொண்டு செல்வார்கள்) 5 மணிக்கு தையல்காரர் வேலைக்குப் போய்விடுவாராம். வாற வழியில இரவு மேசையில் எழுதிவைத்த சாமான்களையும் வாங்கி வாருங்க. இரவுக்குச் சமையலுக்கு ஒன்றும் இல்லை. மத்தியானம் ஒன்றும் சமைக்கவில்லை. நான் சூப்பு சூடாக்கிக் குடித்தனான். எனக்கு கொஞ்சம் உடமபு சரியில்லை. இரவு சாப்பாட்டிற்கு தம்பி வீட்ட வாறன் என்றவன்.(தம்பியையும் தனது மனைவியையும் ஒன்றாக அவன்தான் கூப்பிட்டவன்) அவனுக்கு எங்கேயாவது இறால் இருந்தால் பார்த்து வாங்குங்க. நாளைக்கு அம்மாவுடன் கதைக்கவேண்டும். ஒரு மலிவான தொலைபேசி அட்டையும் வேணும். காசு 1000 ரூபா கைமாத்துக் கேட்டவன் அதையும் வங்கியில் எடுத்து வாருங்க. பியரை கியரை; போத்தில கீத்தில வேண்டீராதேங்க. சொல்வதெல்லாம் விளங்குதா?" என்று தொலைபேசியை வைத்தாள். அவனுக்கு தலை சுற்றியது. வேலை முடிந்து நடைப்பிணமாக வெளியேறியவனுக்கு ஒருசிகரட் பத்தவேண்டும்போல் இருந்தது. காருக்க கீருக்க சிகரட் மணத்தால் நான் ரைக்சியிலதான் போகவேண்டிவரும் என்று அன்றொருநாள் தன் மனைவி சொன்னது நினைவு வந்தவனாக வெளியில் நின்று பத்தினான்.

மறுபடியும் தொலைபேசி. "எங்க நிக்கிறீங்க; இன்னும் 45 நிமிடங்கள்தான் இருக்கிறது. நான் ஆயத்தமாகிறன். இடையில தொலைபேசியை எடுக்காதீங்க" குளித்து றெடி ஆகவேணும் என்றாள். இவளவு சாமான்களையும் பார்ப்பதற்கே பலமணிநேரம் தேவை; அதிலும்  பல கடைகள் ஏறி இறங்கவேண்டும். கடைகளுக்குப் பக்கத்தில் கார் பாக் பண்ணுவதே கடினம். எல்லாவற்றையும் யோசித்துக்கொண்டு காரில் ஏறியவன் குளிர் தாங்கமுடியாமல் காரினுள் சூட்டைப்போட்டுவிட்டுப் பொறுத்திருந்தான்.

மறுபடியும் அவனுக்கு ஒரு தொலைபேசி; அமைதியான குரலில் சாந்தமே அதன் சொந்தமான பாணியில் தொலைபேசியில் முத்தமழைபொழிந்து டார்லிங் வேலை முடிஞ்சுதாஅ.. களைப்பாக இருக்கிறதாஅ.. அமைதியாக இருந்து முதலில் ஒரு காப்பி குடியுங்க.. காலையில் போடடுத்தந்த காப்பி முடிந்தால் கடையில் ஏதாவது நல்ல சூடாக குடியுங்கஅ; மதிய சாப்பாடு சாப்பிட்ட நீங்களா?..முதுகெல்லாம் நோகிறதாஅ... ஆறுதலாக வாருங்க ஒன்றும் அவசரம் இல்லை. ஒரு சிகரட் ஒன்றை பத்தி றிலாக்சாகுங்க குஞ்சு. தம்பியும் வீட்ட வாறன் என்று சொன்னவன். எனக்கும் உங்களுடன் கடைத்தெருவில் கைகோர்த்து நடக்கவேண்டும்போல் உள்ளது. நீங்கள் வந்தபின் இருவருமாகக் கடைக்குப்போவோம். உங்களுக்குப் பிடித்த கறிவகைகளையும் எனக்குப் பிடித்த காய்கறிகளையும் வாங்குவோம். நீண்ட நாட்காக நீங்கள் பியர் ஒன்றும் வாங்கவில்லை. உங்களுக்கு நான் இன்று வாங்கித் தருகிறேன். நீங்கள் வீட்டக்கு வந்ததும் சாப்பாட்டைப் போட்டுத் தந்துவிட்டு அந்த நேரத்தில் நான் குளித்து றெடியாகிவிடுவன். புருசன் வெளியில் நிற்கும்போது மனைவி தலை முழுகக்கூடாது என்று பாட்டி சொல்லித்தந்தவோ. கதவில் வந்து மணி அடிக்கத்தேவையில்லை. வழமைபோல் நான் வாசலிலேயே காத்திருப்பேன் என்று தொலைபேசியை வைத்தாள். உலகத்தில் இவ்வாறான மனைவிமார் இருப்பதால்தான் முழத்திற்கு முழம் பூக்கடைகள் இருப்பதை அவன் உணர்ந்தவனாகச் சிந்தனையில்இருந்து விடுபட்டான். சொர்க்கம் என்றால் இதுவல்லவோ என்று அங்கலாய்த்தான். இது தனது மனக்கணக்கிற்குள் வந்த வெறும் பிரமை என்பதை நினைத்துக் கவலைப்பட்டான். எதிர்பார்த்தது கிடைக்காததால் கிடைத்ததுடன் மாரடிக்கிறான்.

கார் சூடாகியது. அதைவிட அவன் சூடாக இருந்தான். எந்தக் கடைக்கு முதல் போவது என்ற யோசனை. ஏதோ ஒரு கடைக்குச் சென்றான் சாமான்களை வாங்கி காசு கொடுக்கும் தருவாயில் முன்னுக்கு நின்றவர் இழுத்த கிறடிற்காட்டில் ஏதோ கோளாறு. அதனால் 15 நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. ஒரு தமிழ் கடைக்குச் சென்றான். அங்கு அப்பதான் மரக்கறிவந்தது என்று வரும்வரை உண்ணாவிரதம்இருந்ததுபோல் சனக்கூட்டம். ஒருமாதிரி வெளியேறி வங்கிக்கு காசு எடுக்கச் சென்றான். நமது நாட்டு பாணுக்கு நிற்கும் கியூவைவிட பெரிதாக இருந்தது. காசு எடுக்காமல் சென்றால் மனைவியிடம் திட்டுவிழும் என்பதை உணர்ந்து வரிசையில் நின்றான். மணி 4.40 ஆகிவிட்டது. காசை எடுத்துத் திரும்பி காரை விட்ட இடத்தில் எடுக்கச் சென்றபோது காரின் ஒரு சில்லு கோட்டுக்கு வெளியில் நின்றுவிட்டது என்று சொல்லி அதற்கு 100 டொலர் தண்டப்பணத்துண்டு வைக்கப்பட்டிருந்தது. இவற்றை மனைவியிடம் காட்ட முடியாது. காட்டினால் "அது என் கவனக்குறைவு என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு வீடு செல்வோம் என்றால் மனைவியின் நச்சரிப்பாலும் 9 மணிநேர வேலை செய்ததாலும் உடம்பில் ஒரு பதட்டம் ஏற்பட்டது.

மனைவியிடம் இருந்து மீண்டும் தொலைபேசி. எரிச்சலான குரலில் என்ன செய்கிறயள் இவளவு நேரமும். உங்களைப் பார்த்துப் பார்த்து இருந்துவிட்டு நான் வாடகைக் கார் பிடித்துச் சென்றுகொண்டு இருக்கிறன். வீட்டக்குச் சென்று இறாலை தண்ணிருக்குள்போட்டுவிட்டு சமையலுக்கு ஆயத்தப்படுத்துங்க" என்று தொ.பேசியை வைத்தாள். அன்பிலாப் பெண்டிரை ஒரு இடத்தில் ஓளவையார் யமன் என்று சொல்லியிருப்பதை அவன் மீட்டுப் பார்த்தான்.
மறுபடியும் ஒரு தொலைபேசி. இவோ தான். "ஐயோ அப்பா அவசரத்தில் அளவுசட்டையை விட்டுவிட்டு வந்துவிட்டன். இவன் அளவெடுத்தால் இறுக்கமாகத் தைத்துவிடுவான். சாமான்கள் வாங்காவிட்டாலும் பரவாயில்லை. வீட்டுக்குப்போய் அளவுசட்டையை உடனே கொண்டு வாருங்க.

அவனால் இயலவில்லை. காரை வேகமாகச் செலுத்தினான். 60 இல் போகவேண்டிய இடத்தில் 90 இல் போனதால் பொலிசார் அவனை மறித்துவிட்டார்கள். 20 நிமிடம் சுணங்கிவிட்டது. நிலமையைச் சொல்லுவதற்கு தையல்காரர் வீட்டுக்குத் தொலைபேசி எடுத்தான். "உங்களைக் காணாததால் அவோவை நான் அளவு எடுத்தவுடன் கிளம்பிவிட்டா" என்று பதில் வந்தது.

"பத்தாவிற்கு ஏற்ற பதிவிரதை உண்டாகில் ..........................சற்றேனும் கூடி வாழலாம்; ஏறு மாறாக நடப்பாளேயாமாகில் கூறாமல் சந்நியாசம் கொள்.
அவன் நமக்கு ஒரு பாடமா அல்லது மனைவி அவனுக்கு ஒரு பாடமா?.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS