RSS

Showing posts with label travel. Show all posts
Showing posts with label travel. Show all posts

வலவன் ஏவா வானூர்தி.



0 R
பறத்தமிழன்; பனங்கொட்டை இது சிங்களவன் தமிழரை இயல்பாகச் சொல்லும் வார்த்தைகள். விடுவானா தமிழன் "மோட்டுச் சிங்களவன்" இது தமிழர் சிங்களவனைப் பார்த்துக் கூறும் வார்த்தை. சிங்களவன் மோடனாக நடித்ததை நம்பி முட்டாள் ஆகியவன் இலங்கைத் தமிழன். பட்டங்கள் சூட்டுவதைத் சிலர் தமது பரம்பரைப் பொக்கிசமாக நினைத்த நினைவுகளுடன் அகதியாக நாட்டைவிட்டு வெளியேறினார்கள். விமானத்தில் ஏறி மானத்தைப் பறக்கவிட்ட பெரும்பான்மைத் தமிழர்கள்தான். இன்று உலக அரங்கில் தாங்கள்தான் பிரபஞ்சத்தின் நடுப்புள்ளியில் இருந்து வந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்து ஆளுக்காள் கருத்து முரண்பட்டு பலதரப்பட்ட முகமூடிகளை அணிந்தவர்களும் தமிழர்கள்தான். முகமூடிகளைக் கழற்ற மனமின்றி முகமூடிகளையே முகமாக்கிக் கொண்டவர்களும் பெரும்பாலான தமிழர்கள்தான்.
இரண்டு பேர் சந்தித்தால் ஆங்கிலத்தில் கதைத்து இருபதுபேர் சந்தித்தால் சங்கம் அமைத்தவர்களும் தமிழர்கள் தான். ஐரோப்பாவில் 10 தமிழ் கோவில் இருந்தால் அங்கு 9 சண்டைகள் நடந்திருக்கும். 11வது கோவில் அமைப்பது 10வது கோவிலில்வரும் சண்டையைப் பொறுத்து இருக்கிறது. 

ஈழத்துமிழரின் எதிர்கால வெளிநாட்டு வாழ்க்சைச் சூழல் இப்படி இருக்கப்போகிறது என்று தெரியாத ஒரு காலகட்டத்தில்தான் இலங்கை மத்தியவங்கியில் வேலைசெய்துவிட்டு நானும் 2 வருடம் வெளிநாட்டில் உழைப்புடன் படிப்பையும் பார்க்கலாம் என்று சுவிசில் வந்து இறங்கி 29வது தமிழர் என்ற சிறப்பப் பெயரைப் பெற்றேன்.  1983ம் ஆண்டு தைமாதம் 14ம் திகதி சுவிசின் தலைநகரத்தில் தமிழர் பொங்கல்விழா ஒன்று வைத்தார்கள். நானும் சென்றிருந்தேன். கவிஞர் கண்ணதாசன் கூறியதுபோல "கடல்கடந்தான் தமிழன் கற்பூரதீபம் கண்டான் இறைவன்" என்றதுபோல் கடவுளுக்கு படைத்து கற்பூரதீபம் காட்டி புக்கையும் சாப்பிடத் தந்தார்கள் சாப்பிட்டேன். பிரசாதம் சாப்பிட்டவர்கள் உண்டியலில் காசுபோடவேண்டும் என்று ஒரு அறிவித்தலும் பிரசாதம் பரிமாறியபின் சபைநடுவில் வைக்கப்பட்டது. அப்போதுதான் அந்த அகதிமுகாமில் பலநாட்டு மக்கள் இருப்பதைப் பார்த்தேன். ஒவ்வொரு நாட்டுக்காரருக்கு ஒவ்வொரு பட்டப்பெயர் சூட்டி அழைத்தார்கள்.

சீனா வியட்னாம் தாய்லாந்து போன்ற மக்களை "சப்பட்டை" என்று அழைத்தார்கள். ஆபிரிக்காக் கண்டத்து அனைத்து மக்களையும் "கானா" காரன் என்று அழைத்தார்கள். ஈரான் ஈராக் போன்ற இடத்தில் இருந்து வந்தவர்களை "எண்ணைக்காரன்" என்று அழைத்தார்கள். ஆனால் தமிழர்களைப் பார்த்து சுவிற்சலாந்து மக்கள் "கப்புசீனோ" என்று அழைப்பது அப்போது பலருக்குத் தெரியாமல் இருந்தது. 
நான் லண்டன் செல்லும் விமானத்திற்குள் இருக்கின்றேன். டென்மார்க்கில் இருந்து விமானம் புறப்பட்டது. பிரயாணிகளாக அகதித்தமிழன் கொடுத்த பட்டத்தை உடையவர்களே காணப்பட்டார்கள். செக்கின் முடித்து பிரயாணிகள் தங்கள் விமானத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள். நானும் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டேன். அந்த அறையே நடுங்குவதுபோல் ஒரு மனிதன் வந்தான். மிகவும் பயந்துவிட்டேன். இவன் எனக்குப் பக்கத்தில் இருக்கக்கூடாது என்று கடவுளை வேண்டிக்கொண்டேன்.கடவுளும் எனக்கு "யாம் இருக்கப் பயம் ஏன்" என்பதுபோல் வேறு இடத்தில் அவனை விமானத்துள் உட்காரவைத்தார்.
ryanair என்ற விமானம் மேலெழுந்து சென்ற சற்று நிமிடத்தில் பக்கத்தில் இருப்பவரைத் திரும்பிப் பார்த்தேன். அவரது பற்கள் மிகவும் அழகாக இருந்தன.  அவர் ஒரு "கானா" காரன். மிகவும் ரசித்து ரசித்து வேப்பம் குச்சியால் பல் துலக்கிக்கொண்டு இருந்தார். நான் அவரை ஒரு புகைப்படம் வேப்பம் குச்சியுடன் எடுத்துவிடவேண்டும் என்பதற்காக அவருடன் கதைத்தேன். அவரது பெயர் முகமட். சோமலியாவில் இருந்துவந்து டென்மார்க்கில் குடியேறி தனது உறவினரைப் பார்க்க லண்டன் செல்கிறார். தரையிறங்கும் அறிவித்துல் தரப்பட்டதும் முகிலுக்குமேல் வெளிச்சத்தில் பறந்து முகிலுக்குக் கிழே வந்ததும் உலகம் இருண்டுவிட்டதுபோல் பனிப்புகார் தென்பட்டது. முகமட் என்னைப்பார்த்து "ஏன் மேலே வெளிச்சமாகவும் கீழே இருளாகவும் இருக்கிறது தெரியுமா என்று கேட்டார். ஒருவிடையத்திற்கு பிழையான பதில் சொல்லும்போது நமக்கு இரண்டுவிடையங்கள் தெரியாது என்பதை நாம் காட்டிக்கொடுக்கிறோம். அதனால் தெரியாது என்று கூறிவிட்டேன். முகமட் "மேலே இறைவனும் கீழே சாத்தானும் இருப்பதால் இந்த நிலை" என்று பதிலளித்தார். முகிலுக்குக் கீழேவந்த விமானம் தரையில் ஓடத்தொடங்கியதும் ஓட்டுனர் இல்லாத விமானமா என்று கேட்கத் தோன்றியது. மிகவும் மெதுவாகத் தரையில் இறக்கினார் விமானி. பயத்தில் இருந்த சில பிரயாணிகள் தங்கள் கைகளைத்தட்டிப் பயத்தைப் போக்கிக்கொண்டனர். 
அப்போதான் எனக்குச் சங்ககாலப் புறநானூற்றுச் செய்யுள் ஒன்று (புறநானூறு பாடல் 27. பாடியவர் உறையூர் முதுகண்ணன் சாத்துனார்) ஞாபகம் வந்தது. "புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானூர்தி எய்துப என்ப!. எந்தை சேட்சென்னி; நலங்கிள்ளி" இந்த வரிகளின் கருத்து என்னவென்றால் நளங்கிள்ளி என்ற அரசனுக்கு அதாவது வலவன் என்னும் ஓட்டுபவன் இல்லாமலே வானில் பறந்திடும் விமானத்தில் செல்லும் வாய்புகள் கிடைத்தவர்களுக்கு வாழ்வின் உயர்வு அந்த வானத்தின் உயர்வுபோல் வந்துவிடும் என்பதாகும்.
2000 ஆண்டுகளுக்கு முதலே இவ்வாறான விமானி இல்லாத விமானம் பறந்ததா? இல்லாவிட்டால் புலவரின் கற்பனையில் ஓட்டுனர் இல்லாதவிமானம் பிரயாணிகளை ஏற்றிச் சென்றது எப்படி. அப்துல்கலாமின் கனவுகளுக்கு இந்தப் புலவர்தான் முன்னோடியா? இன்னும் பிரயாணிகளை ஏற்றிச்செல்ல ஓட்டுனர் இல்லாத விமானங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. சிந்தனையில் இருந்த என்னைத் தட்டி முகமட் உங்களுக்கும் ஒரு வேப்பம் குச்சி தரவா என்று கேட்டார். நாங்கள் சிறியவயதில் இருந்தே கோபால் பற்பொடியைத்தான் தீட்டியதுபோக திண்டது மிச்சம் என்று சொல்லப் பார்த்தேன். ஆனால் ஒரு சிரிப்புடன் விடைபெற்றுவிட்டேன். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கோவையில் ஒரு யாகசாலை.


பேராசிரியர் மணிவண்ணன்


கடலளவு ஆனாலும் மயங்க மாட்டேன், அது கையளவு ஆனாலும் கலங்க மாட்டேன். பாராட்டை கண்டு (பெருமையில்) மறக்கவும் வேண்டாம், கேளிக்கை விமர்சனங்களை கேட்டு தங்களை (கோபத்தால்) இழக்கவும் வேண்டாம். கங்கைக்கு பேதமில்லை, தன்னில் மூழ்குவன் பாவி ஆனாலும் பேதமின்றி அவனைத் தன் இருகரத்தால் அணைத்து பாவத்தைப் போக்குவதால்தான் கங்கை ஜீவ நதி, புண்ணிய புனித நதி என்று அழைகப்படுன்கிறது"  இது எனது "ஆத்மலயம்" நூலுக்காக ஒரு வாசகியின் மடல். 


இந்த நூல் வெளியீட்டிற்காகவும்; அதற்குக்கிடைக்கும் மெடலை வாங்குவதற்காகவுமே நான் பயணித்துக்கொண்டு இருக்கின்றேன். பயணத்தின்போதெல்லாம் சச்சீன் அடிக்கும் சதங்கள்போல் தகிதா பதிப்பகம் அடித்த சதங்களில் ஒன்றுதான் உங்கள் "ஆத்மலயம்" என்று மணிவண்ணன் எனக்கு அடிக்கடி கூறுவதுதான் என் நினைவிற்கு வருகின்றது.






தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலியில் திரு. திருமதி பாபா இருவரும் முகநூல் நண்பர்களாகி எனக்கு அலுவா கொடுப்பதற்காகத் தங்கள் இல்லத்திற்கு அழைத்திருந்தார்கள். விருந்தோம்பல் பண்பை அவர்களிடம் நான் பார்த்தேன். திருவள்ளுவர்கூட திருநெல்வேலி மக்களைப் பார்த்துத்தான் விருந்தோம்பல் என்ற அதிகாரத்தை ஆக்கினாரோ என்று எண்ணத் தோன்றியது.                                                                                                             அவர்களுக்கு இரண்டு புதல்வர்கள்.  புதல்வர்கள் இருவரும் எனது அறையிலேயே தூங்கி தங்கள் அன்பைப் பரிமாறிக்கொண்டார்கள். அவர்களது குசினிக்குள்சென்று நானே அலுவா எடுத்துச் சாப்பிடும் அளவிற்கு குடும்ப உறவினராகி விட்டேன்.  திரு பாபா அவர்கள் பார்ப்பதற்கு ஒரு கவர்ச்சி வில்லனின் தோற்றம். ஆனால் விபரம் தெரிந்த, நான் சந்தித்த நல்ல மனிதர்களில் அவரும் ஒருவர்.  திருவள்ளுவர் சிலையை அவருடன் சென்று பார்த்ததில் எனக்கு மிக மகிழ்ச்சி.  திருமதி பாபா அவர்கள் தனது பல்கலைக்கழகத்திற்கு என்னை அழைத்துச் சென்று தனது பேராசிரியர்களுடன் உரையாட ஏற்பாடு செய்தது மட்டுமன்றி "ஞானவாணி" என்ற வானொலிக்காகவும் என்னைப் பேட்டிகாண வைத்தார்.  இத்தனைக்கும் நான் அவர்களுக்குச் செய்தது வெறும் "நன்றி" என்ற வார்த்தை மட்டும் தான். எனது பயணத்தின் "கிளைமாக்ச்" க்காக நான் கோவை பயணமாகும் பேரூந்து நிலையம்வரை குடும்பத்துடன் அனைவரும் வந்து குதூகலமாக என்னை அனுப்பிவைத்தனர். இராமர் காட்டிற்குப் போகும்போது அவரை வழியனுப்பி வைத்தவர்களே மிகவும் கலங்கினார்கள் என்ற ஒரு வரியை எங்கேயோ வாசித்த ஞாபகம் அவர்களது முகங்களைப் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்டது. 



வண்டி கோவையை நோக்கிப் புறப்பட்டது. சொந்தக்களைத் தொலைத்த ஒரு அகதிபோல் குளிரூட்டப்பட்ட சொகுசு வண்டிக்குள் இருந்தேன். தொலைதூரத்தில் இருந்து எனக்கு ஓர் தொலைபேசி அழைப்பு வந்தது. "என்னங்க! எங்கு இருக்கிறீர்கள்; எனக்குப்பிடித்த மெட்டிச் சத்தத்திற்கு சொந்தக்காரி அவதான். எல்லாவற்றிற்கும் பதில் கூறினேன். சத்தம்போட்டு எதையும் சொல்ல முடியவில்லை. அப்போது வானத்தைப் பார்த்தேன். முகிலுக்குள் மறைந்திருந்த முழுநிலவு தன் முகத்தை முழுதாகக் காட்டியது. என் மனைவியின் முகம் இந்த நிலவுக்குள் நிழலாக இருந்தது. என் வளர்ச்சிக்காகவே என்றும் என்பின் நிற்பவர்.  பிரிவுத்துயர் ஆற்றமுடியாத முல்லைநிலத்துத் தலைவி போல் தொலைபேசிக்குள் தன் உணர்வுகளைத் தூதாக்கினாள். 

இறுதியாக "என்னங்க! யன்னலுக்குப் பக்கத்தில் இருந்தால் அடிக்கடி திறக்கவேண்டாம்; வைரஸ் பிடித்து விடும்" என்று கூறி தொலைபேசியை முடித்தார்.  நான் புறநாநூற்றில் பதில் சொல்லி என் நெடுநெல்வாடையின் அகநாநூறு ஆகிவிட்டேன்.  வண்டியின் யன்னல் பக்கத்தில் "கரம் சிரம் புரம் நீட்டாதீர்கள்"என்று எழுதப்பட்டிருந்தது. இது டி. ராயேந்தரின் தம்பி அடுக்கு மொழியில் எழுதினாரோ என்று நினைத்துக் கொண்டேன். இதில் புறம் என்பதற்குப் பதிலாக புரம் என்று போட்டிருந்தார்கள். 

ஓட்டுனருக்குப் பின்பக்கத்தில் இரண்டு பெண்கள் இருந்தார்கள். வளைவுகளில் எல்லாம் வண்டியின் அமைதியான ஓட்டத்திற்கு இந்தப் பெண்களைப் பார்த்த சாரதியின் பகுத்தறிவே காரணமாக இருக்கலாம். வண்டிக்குள் ஆடுகளம் என்ற படம் சின்னத்திரையில் ஓடிக்கொண்டிருந்தது. வண்டி தரிப்புகளில் நின்று கிளம்பும்போதெல்லாம் படமும் ஒவ்வோருமுறையும் எழுத்தோட்டத்தில்இருந்து ஆரம்பித்தது. பிரயாணிகளில் ஒருவர் பொறுமை இழந்தவராக "என்ன படம் ஓட்டுகிறீர்கள்" என்று கொஞ்சம் கடுப்பாகக் கேட்டார். "அது தொழில் நுட்பக்கோளாறு" என்று ஒரு விமானியின் பாணியில் சாரதி பதில் சொன்னார். பக்கத்தில் இருந்தவருக்கு நான் தொலைபேசி கதைப்பது தொல்லையாக இருந்தது என்பதைத் தன் செய்கைகள் மூலம் எனக்குவிளங்கவைத்தார். மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு. "ஐயா நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள்? உங்களை வரவேற்கக் கோவை காந்திபுர பேரூந்துத் தரிப்பிற்கு காலையில் வருகிறேன். நான் மணிவண்ணன் சாரின் மாணவன்; எனதுபெயர் வைரs" என்று குறிப்பிட்டார். நான் பிரயாணம் செய்த வண்டிக்குள்ளேயே ஒரு நல்ல வைரs தொற்றிக்கொண்டதை உணர்ந்தேன். பேராசிரியர் மணிவண்ணனைச் சந்திக்கப்போகிறேன் என்ற இயமக் கனவுகளுடன் இருந்த என்னை இதமாகவந்து ஒருத்தி அணைத்தாள். வெளிச்சத்தில் தன்னைக் காட்டிக்கொள்ளத் தயங்கிய அந்த நித்திராதேவி காலை 5.30 மணியளவில் என்னைவிட்டுச் சென்றுவிட்டாள். வண்டி காந்திபுரத்தை அடைந்ததும் எல்லோரும் இறங்கினார்கள். எனக்குப் பக்கத்தில் இருந்தவரை ஓட்டுனர் எழுப்பி இறக்கிவிட்டார். சுற்றுமுற்றும் பார்த்தார் சுற்றத்தார் எவரையும் காணவில்லை. tower பிரச்சனையால் தொலைபேசிகதைத்தது விளங்கவில்லை. பலமைல்கள் தள்ளிவந்து இறங்கிவட்டதாக என்னிடம் தெரிவித்தார். எனக்கு சிரிப்பு வந்தது. சிரித்தால் அவர் கடுப்பாகிவிடுவார் என்று அடக்கிவாசித்துவிட்டு நகர்ந்துவிட்டேன். 

என்முன்னால் ஒரு டீ கடை. அதில் ரூபாவுக்கு இரண்டு என்று வாழைப்பழக்குலையில் எழுதியிருந்தார்கள். இங்கு தான் செந்தில் பழம் வாங்கி கவுண்டமணிக்குக் கொடுத்தாரோ என்று நினைத்துவிட்டுத் தேனீர் ஒன்றை அருந்திவிட்டு vairas இன் வருகைக்காகக் காத்திருந்தேன். பல ஆட்டோ ஓட்டுனர்கள் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் செல்வதுபோல் வந்து வந்து பேட்டி எடுத்தார்கள்.

 பல மீட்டர்களுக்கு அப்பால் என்னை வரவேற்க வந்த கவிஞர் vairas என்னைக்கண்டு மகிழ்ச்சிபொங்க புன்முறுவல்பூத்த முகத்தடன் கட்டித்தழுவி வரவேற்றார். கோவையில் முதல் சந்தித்த தமிழர் கவிஞர் vairas அவகள்தான். அமைதியான பேச்சு; ஆழமான கருத்துக்கள்; வட்டமான கண்கள்; கூர்மையான பார்வை. கவிஞர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்களோ என்ற ஒரு கேள்வியுடன் மணிவண்ணன் ஒழுங்கு செய்திருந்த விடுதியை அடைந்தோம். அழகிய உல்லாச விடுதியில் எனக்கென்று ஒரு குளிரூட்டப்பட்ட சொகுசு அறையை ஒழுங்கு செய்திருந்தார்கள். கவிஞர் vairas அவர்கள் மாலைவரை என்னுடன் தங்கியிருந்தார். தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவர்கள் ஆற்றும் தொண்டு என்னை மிகவும் ஆச்சரியப்படவைத்தது. அன்று மாலை மணிவண்ணன்  அவர்கள் என்னைவந்து சந்திப்பதற்கிடையில் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காப்பி; காலை உணவு; மதிய உணவு; உபசரிப்பு; போன்ற விருந்தோம்பல்களில் ஏதாவது குறை இருக்கின்றதா? எல்லாம் தங்கள் மனத்திற்குச் சௌகரியமாக இருக்கின்றதா என்பதைக் கேட்டுக்கொண்டே இருந்தார். அவர் வரும்வரை நான் துர்ங்காமலே இருக்கின்றேன். வானொலியில் பக்கத்து அறையில் "நான் உங்கள் வீட்டுப் பிள்ளை" என்ற பாடல் பெரிதாகக் கேட்டுக்கொண்டு இருந்தது. (தொடரும்)

கவிஞர் vairas

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

3.ஒரு விமானப் பயணம்


அன்று இத்தாலி ரோம் நகர விமான நிலையம் என்றுமில்லாதவாறு களைகட்டி இருந்தது. அதற்குக் காரணம் சிறிலங்கா சென்ற பாப்பரசர் தன் பட்டாளங்கள் புடைசூழ நாடு திரும்புவதுதான். நாடுதிரும்பும்போதும் பாப்பரசர் மண்ணைவணங்கி மக்களைப் பார்ப்பது வழக்கம். இதைப் பார்த்துத்தான் மத்தியகிழக்கில் இருந்து நாடுதிரும்பிய மகிந்தா கட்டுநாயக்கா மண்ணை முத்தமிட்டாரோ என்றும் சிலர் நையாண்டி மேளம் அடிக்கின்றார்கள் அதை விடுவம்.ஒரு கதையை சொல்ல வருவம் என்றால் ஒரே தடங்கலாக இருக்கிறது. சொல்லும் வழியில் வந்த சில சொற்கள் என்னை சிந்திக்க வைக்கின்றன. கட்டுநாயக்கா என்றதும் ஒரு ஞாபகம் வருகிறது. இந்த விமான நிலையம் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்குவந்தால் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் என்றும்,  சுதந்திரக்கட்சி ஆட்சிக்கு வந்தால் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் என்றும் மாறி மாறி பெயர் மாற்றப்படும். இதைப்பார்த்த தமிழ் தெரிந்த ஒரு வெள்ளைக்காரன் கட்டுநாயக்கா, பண்டாரநாயக்காவுக்கு என்ன முறை என்று ஒருவரை கேட்டானாம.  பதில் சொல்லாத இலங்கையரைப்பார்த்து ஒரு சிரிப்புடன் வெள்ளைக்காரன் ''விடிய விடிய இராமர்கதை விடிந்தால் சீதை ராமனுக்கு குஞ்சியாத்தை என்றுவிட்டு சில்லறை விலையில் வாங்கிய சிறிய சவப்பெட்டி (சிகரட்) ஒன்றை பற்றவைத்துக்கொண்டு இடத்தைவிட்டு நகர்ந்தான். இந்த ரோம் நகரத்து விமானநிலையத்தில்தான் ஒரு அழகான பெண் தமிழ் முகத்துக்கு ஆங்கிலச் சாயம்பூசிய உடையுடன் செக்கின் முடிந்து விமானத்திற்காகக்க காத்திருந்தாள். கலங்கிய கண், களைத்துப்போன முகம், சுடுகாட்டில் இருந்து வீடுதிருமபும்போது இருக்கின்ற மனநிலை மாதிரி உணர்வுகள், கிட்டத்தட்ட அவள் உயிருடன் இருக்கின்றாள் என்பதற்குச் சாட்சியாக காதிற்குள் ''இயர்fபோன்'' வைத்து சோகப்பாடல்களைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டிருந்தாள். ஒரு காலத்தில் இப்படி காதிற்குள் வைத்திருந்தால் செவிட்டு மெசின் என்று நினைத்தவர்கள்கூட இந்த உலகத்தில் இன்றும் இருக்கிறார்கள். நான் ஏன் ஆங்கிலச் சொற்களை எல்லாம் தமிழில் எழுதுகிறேன் என்றால் ஒரு சுவாரஷ்யத்திற்காகத்தான். ஆனால் வாசிப்பவர்கள் இவர் ஆங்கிலத்தில் அரைவேக்காடாக்கும் என்று நினைப்பதும் என் செவி அலைவரிசைக்குள்ளும் விழுகிறது.  அந்தப் பெண்ணின் பெயர் வாநதி. நதி என்றதும் கங்கையுடன் சில கற்பனைக் காட்சிகளை உருவாக்கி விடாதீர்கள்.

வானதி தன்னுடன் பிரயாணம் செய்பவர்களை ஒருமுறை நோட்டம் விட்டுப்பார்த்தாள். கூட்டத்திகுள் காவி உடை அணிந்த ஒருதுறவியும், கவுண் அணிந்த ஒரு போதகரும் இருந்தார்கள். மற்றைய பிரயாணிகளைவிட வித்தியாசமான உடையில் இருந்ததால் வானதியின் கண்கள் சற்று நேரம் இவர்களில் நிலைத்தது.மற்றவர்கள் பேசும் பாஷைகள் அவளுக்குப் புரியவேயில்லை. பத்துக்கட்டளைகளை வேண்டுவதற்கு மலைக்குச் சென்ற மோசேஸ் திரும்பி வரும்போது கடவுள் சாபத்தால் ஒருவர் பேசும்மொழி மற்றவருக்கு விளங்கக்கூடாது என்பதைக் கண்ட நினைப்புத்தான் வானதிக்கும் வந்தது. துறவி பிரேமானந்தாவின் கதையைப் பத்திரிகையில் படித்திருந்த வானதி காவித்துறவிக்குப் பக்கத்தில் தனக்கு இருக்கை கிடைக்கக்கூடாது என்பதை இன்னொரு காவித்துறவியான சாயிபாபாவிடம் பிரார்த்திக்குவிட்டு பேசாமல் இருந்துவிட்டாள். போதகரைப் பார்த்ததும் வானதி தான் சிறியவயதாக இருந்தபோது தினகரன் பத்திரிகையின் பின்பக்கத்தில் வந்த ஒரு தலைப்புச் செய்தியை வாசித்தது நினைப்பிற்கு வந்தது. அதாவது ''பாதிரியார் வீட்டில் பாவை பாழ்படுத்தப்பட்டாள், பாதிரியார் தலைமறைவு, போலீசார் வலை'' இதுதான் அந்தச் செய்தி. உள்ளுக்குப் படித்துப் பார்க்கும்போதுதான் விளக்கம் வேறுமாதிரி இருக்கும். ''பாதிரியார், வீட்டில் இல்லாத சமயம்,ஒருபெண்ணைக் கடத்திவந்து அவரது வீட்டை உடைத்து உள்ளே சென்று அவளைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக பின்னர் போலிசாரின் விசாரணையில் தெரியவந்தது'' என்று செய்தி இருக்கும். பத்திரிகை என்றால் பத்துவிடையத்தைத் திரித்து எழுதுவதுதான் என்பது பலரது அவிப்பிராயம். சில பத்திரிகைகள் ஒரு விடையத்தைப் பத்தாக்கியும் எழுதுவார்கள். நான் ''சுவிஸ்தமிழர்'' என்ற பத்திரிகை நடாத்தும்போது உள்ளதை உள்ளபடி போட்டன். நள்ளிரவு 12 மணிக்கு ஒரு தொலைபேசி வந்தது. ''இப்படி எல்லாம் நியூஸ போட்டா உன்னை போடவேண்டி இருக்கும்'' என்று. எனக்கு ஆயுள் கெட்டி என்பதால் பத்திரிகை அன்றுடன் வெளிவரவில்லை. அது போகட்டும்!

வானதி அந்த வெள்ளைக்கார போதகருடன்  நம்நாட்டைச் சேர்ந்த ஒருவர் சரளமாக இத்தாலிப் பாஷையில் உரையாடிக்கொண்டிருப்பதைக் ண்டாள்.  அவர் ஒரு தமிழர். பல காலங்களுக்குமுதல் இத்தாலிக்கு அகதியாகவந்து சேர்ந்தவர். அவரதுபெயர் சிவலிங்கம். இவரது கதையைச் சொன்னால் தயாரிப்பாளர் சேரன் போன்றவர்கள் திரைப்படமே எடுத்துவிடுவார்கள். இருந்தாலும் சுருக்கமாகச் சொல்கிறன். சிவலிங்கம் பாடசாலைப் படிப்பு முடித்து கிராமத்தில் தகப்பனுடன் புகையிலைத் தோட்டம் செய்த காலம். அதாவது ''போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று சிறிலங்கா ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜயவர்த்தனா தமிழருக்கு எதிரான துவேஷத்தை அரங்கேற்றியகாலம். சிவலிங்கத்திற்கு முன்வீட்டுப் பெட்டையில் ஒரு கண். அடைந்தால் மகாதேவி எல்லது மரணம் என்ற முனைப்புடன் திரிந்தவர். தன் நண்பனைவிட்டு காதல் கடிதம் எழுதி, அதைக்  கொடுக்கப் பயந்து பயந்து சட்டைப் பைக்குள் கொண்டுதிரிந்தவர். அவரது தாயார் சலவைத் தொழிலாளிக்கு ஊத்தை உடைகளைக் கொடுக்கும்போது இவரது சட்டையும் (ஷேர்ட்) சலவைத்தொழிலாளி வீட்டுக்குச் சென்றுவிட்டது. தனக்குவரும் உடுப்புக்களில் இருக்கும் பைகளுக்குள் காசுகீசு இருக்கும் என்று சலவைத்தொழிலாளி பார்க்கும்போது சிவலிங்கத்தின் காதல் கடிதம் சிக்கியது. வாசிக்கத்தெரியாத தொழிலாளி அந்தக் கடிதத்தைக் கொண்டுவந்து சிவலிங்கத்தின் தகப்பனிடம் கொடுத்து விசுவாசமாக நடந்துகொண்டார்.

இதைப்பார்த்த சிவலிங்கத்தின் தகப்பனார் சிவலிங்கத்தை உடனடியாக ஒரு ஏயென்சியைப்பிடித்து இத்தாலிக்கு அனுப்பி அந்தக் காதலை காவியமாக்கி மகிழ்ந்தார். இத்தாலிக்குவந்த சிவலிங்கம் வேலைதேடிச் சென்றபோதுதான் பக்கத்தில் இருக்கும் போதகரைச் சந்தித்தார். இரக்க குணமுள்ள இந்தப் போதகர் சிவலிங்கத்தைத் தன்வீட்டில் வேலைக்கு அமர்த்தினார். சிவலிங்கத்திற்கு போதகருக்குச் சமைப்பதும் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதும் தொழிலாக இருந்தது. இத்தாலிச் சாப்பாடுகள் எல்லாவற்றையும் யாழ்ப்பாணப் பாணியில் சிவலிங்கம் சமைக்கத்தொடங்கினார். ஒருநாள் சோடா மூடியால் தேங்காய் துருவிப் பிழிந்து ஸ்ப்பக்கற்றிக்கு சோஸ் செய்து போதகருக்கு சமைத்துக்கொடுத்தார். போதகருக்கு மிகவும் பிடித்திருந்ததால் சிவலிங்கத்தைத் தன்னுடன் வைத்திருக்கப்போவதாக முடிவெடுத்து நிரந்தர விசாவும் வாங்கிக் கொடுத்தார். நன்றிக்கடனுக்கு சிவலிங்கம் போதகரின் மதத்திற்கு மாறினார். பின்னர் போதகர் சிவலிங்கத்திற்கு ஒரு தமிழ்ப்பெண்ணை பார்சலில் வரவழைத்து திருமணமும் செய்துவைத்தார்.

அறிஞர் அண்ணாத்துரை சொன்ன வசனம் சிவலிங்கத்திற்கு நினைப்பு வந்தது. ''நீ எந்த நாட்டில் இருக்கின்றாயோ அந்த நாட்டிற்கு விசுவாசமாக இரு'' என்பதுதான். இத்தாலி நாட்டுடன் இரண்டறக்கலந்த சிவலிங்கம் தனக்குப் பிறந்த மகளுக்கு லசான்யா என்று பெயரைவைத்து மகிழ்ந்தார். போதகர் மதசம்பந்தமான கூட்டங்களுக்குப் போகும்போதெல்லாம் சிவலிங்கத்தை அழைத்துச்செல்வது வழக்கம். அந்தவகையில்தான் இன்று சிவலிங்கம் போதகருடன் சுவீடன் நாட்டிற்குப் பயணம் செல்கின்றார். சொல்ல மறந்துவிட்டன் இப்போ சிவலிங்கத்திற்குப் பெயர் ஈசாக். ஈசாக் என்பது ஆபிரகாம் சாராள் தம்பதிகளின் மகன். இறைநம்பிக்கை உள்ளவன். விமானம் புறப்படத்தயாரானது. பிரயாணிகள் விமானத்தில் ஏற ஆயத்தமானார்கள். வரிசையில் நின்ற ஈசாக் வானதியையும் இது தமிழாக இருக்குமோ என்ற ஐயத்துடன் நடந்து நடந்து இடைக்கிடை பார்த்தார். ஈசாக் பார்ப்பதைக் கண்ணுற்ற வானதி யாழ்ப்பாணத்தில் தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றவர்கள் வணக்கம் போடுவதற்குமுதல் எழுந்து நடந்து நடந்து பார்ப்பதை நினைத்துக்கொண்டாள்.

பாபாவின் அருளால் வானதிக்கு கத்தோலிக்கப் போதகரின் அருகில் இடம் கிடைத்தது. விமானத்திற்குள் வானதி, பக்கத்தில் போதகர், அதற்குப் பக்கத்தில் ஈசாக். விமானம் கிளம்பியது. செவிட்டு மெசின்களைப்போட்டு விமானத்தில் பாடல் கேட்க இயலாது என்பதால் வானதி அதை நிறுத்திவிட்டு தன் கடந்தகாலத்தை நினைக்கலானாள். அவன் பெயர்தான் கந்தசாமி (விக்ரம் என்று நினைத்துவிடாதீர்கள்) இருவரும் ஒன்றாகக் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். காதல் வசப்பட்ட வானதி கந்தசாமிக்கு ஒரு கண்டஷன் போட்டாள். அப்போ வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தமிழீழமே எங்கள் தாரக மந்திரம் என்று அமிர்தலிங்கம் ஐயா அவர்கள் முழங்கியகாலம். வானதி கந்தசாமி காதல் இதயப் பரிமாற்றத்துடன் நிபந்தனைகளுக்கு மத்தியில் வளர்ந்தது. நிபந்தனை என்னவென்றால் ''தமிழ் ஈழத்தில்தான் நமது திருமணம்'' என்பதே வானதியின் நிர்ப்பந்தம். அதற்கு கந்தசாமியும் ஒத்துக்கொண்டு தள்ளியிருந்து காதலை ரசித்து பட்டமும் வாங்கி வெளியேறினர்.

வானதிக்கு வெளிநாட்டுத் தூதுவராலயங்களில் வேலை செய்வதற்கான தகுதி கிடைத்தது. கந்தாசாமி இராணுவக் கெடுபிடியால் நாட்டைவிட்டு மாறி இத்தாலிக்கு வந்து சேர்ந்தார். காதலில் களவியல் காணாத கந்தசாமி வானதியை முடிவைமாற்றி திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளம்படி பல்லைக் காட்டிக்கொண்டு இருந்தார். வானதியின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. இறுதியாகக் கந்தசாமியிடம் இருந்து வானதிக்கு வந்த தகவல் ''அன்பான வானதி, இயக்கத்தில் உள்ளவர்களே திருமணம் செய்யும்போது நாமும் திருமணம் செய்யலாம் என்று நான் கருதுகின்றேன்'' என்று எழுதியிருந்தார். போராட்டத்தில் பாதிப்புற்ற மக்களுக்காக நான் என்வாழ்வை அர்ப்பணித்து அதில் பணியாற்றுகின்றேன். தொந்தரவு செய்யாதீர்கள் என்று பதில் வந்ததைக்கண்ட கந்தசாமி தன் மாமன் பெண்ணை அழைத்து திருமணம் செய்து கொண்டார். கந்தசாமிக்கு சர்க்கரை வியாதி ஆரம்பித்தது. இரண்டு சிறுநீரகங்களும் பழுதுடைந்துவிட்டது. சுவீடன் நாட்டில் வாழ்ந்துவரும் தன் வானதிக்கு இதை கந்தசாமி தெரியப்படுத்தினார். 30 வருடங்களுக்குமுன் வானதி தன் இதையத்தைக் கொடுத்தவள் இன்று கந்தசாமிக்கு தன் சிறுநீரகத்தையும் கொடுத்துவிட்டுச் சென்றுகொண்டிருக்கிறாள். வானதி தன் உழைப்பில் ஈழத்தில் இருக்கும் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் தனிப்பட்ட முறையில் தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்து தன்னை ஒரு மெழுகுவர்த்தி ஆக்கி வாழ்கின்றாள். ஐரோப்பாவில் வாழும் தமிழ்ப்பெண்கள் கல்லும், கம்பியும், போத்திலோடும் கட்டிய சேலைகளை ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் புதிது புதிதாக வாங்குவதை விடுத்து குறைந்த அளவிலாவது தமிழர்களுக்கு உதவிசெய்ய முன்வரமாட்டார்களா என்று நினைத்துச் சிரிக்கின்றாள். வானதி ஒரு ஆயுதம் ஏந்தாத சமூகநலப் போராளி. தியாகத்தின் தீபம், அன்னை திரேசாவின் அசல் வாரிசு. வானதி- கந்தசாமி கதைகளில் கனக்க சென்டிமன்டுகள் இருக்கு. வாசகர்கள் வணக்கம் போடமுதல் எழுந்துவிடுவார்கள் என்பதால் விடையத்தை வெளிக்காட்டவில்லை. வெளிநாட்டில் இருக்கும் 6 இலட்சம் தமிழரும் முன்வந்து போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நேரடியாக உதவி செய்தலே இன்றைய தேவை என்பது வானதியின் கருத்து.

பக்கத்தில் இருந்த பாதிரியார் ஆங்கில நாவல் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தால். அதைப்பார்த்த ஒரு வியட்னாம் காரன் தனது நண்பர்களுக்கு ''பாதிரியார் விமானம் கிழுந்துவிடும் என்ற பயத்தில் ''பைபிள்'' என்று நினைத்து வேறு ஒரு புத்தகத்தை தூக்கிவைத்துக்கொண்டு இருக்கிறார்'' என்றான். பலகை கிளிந்ததுபோல் சிரிப்பொலி வானதிக்கும் கேட்டது. (பெயர்களும், இடங்களும் கற்பபை. சம்பவம் உண்மை)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS