RSS

"கோச்சி வரும் கவனம்"


எனது சிங்கப்பூர் Bus பிரயாணக்கதையை வாசித்த ஒரு வாசகி; உங்களுடன் நானும் அந்தவண்டியில் ஒருமுறை பிரயாணம் செய்தால் என்ன என்று தோணுகிறது என்றார்.நீங்கள் வருவதென்றால் பரவாயில்லை இடைளில் bag ஐ வைக்காமல் இருந்தால் எனக்கு சந்தோசம் என்றேன்.அதற்கு அவள் "கையை இடையில் வையுங்கள்" என்றாள். கையை உங்களுக்கு இடையில்வைப்பதா அல்லது உங்கள் இடையில் வைப்பதா என்று என்று கேட்டதற்கு அவள் நாணிக் கோணி கேள்விக்குறிபோல் தன்னை வளைத்து பூமியைப் பார்த்தாள். என்னை தழுவியிருந்துவள் (நித்திராதேவி)தானாக விலக கண்டகாட்சிகள் ஒரு கனவு என்பதை உணர்ந்து சிரித்துவிட்டேன்.தொல்லை கொடுப்பதற்கென்றே மனிதன் சில சாமான்களைத் தன்னுடன் வைத்திருப்பதில் தொலைபேசி ஒரு முக்கியபொருளாகிறது. செத்தான் கிரகாம்பெல். கைபேசியில் மனைவி படம் இருக்காது; மையெழுதும் சினிமா கன்னியரின் மார்புப்படம் வைத்து சுகம் காண்போர் ஏராளம். நான் அப்படி ஒன்றும் வைக்கவில்லை என்றோரு கவலை எனக்கு உண்டு.  எனக்கு அப்படி படங்கள் எப்படி வைக்கிறதென்று தெரியாத கவலை அதைவிட உண்டு.  வணக்கம் கங்கை சார் என்றொரு தொலைபேசி. என்ன புதினங்கள் என்றார். நல்ல மழை பெய்கிறது என்றேன். எங்கள் ஊரில் என்ன கெட்டமழையா பெய்கிறது என்று பார்த்திபன் வீட்டு தெருவில் குடியிருப்பதுபோல் கேட்டார்.  இவர்தான் குடிக்க பச்சைதண்ணி தாருங்கள் என்று கேட்பதற்குப் பதிலாக green water தாருங்கள் என்று ஆங்கிலத்தில் ஒரு வைத்தியசாலையில் வருத்தமாக இருந்தபோது கேட்டவர்.  


ஐரோப்பாவிற்கு வந்தநேரம் மலேரியா தொற்று நோயுள்ள நாட்டில் இருந்து வந்திருப்பதாகக் கருதி ஈழத்தமிழ் அகதிகளுக்கு மலேரியாத் தடுப்பூசி போட்டார்கள்.  எனக்கும் ஒன்று இலவசமாகக் கிடைத்தது. வெள்ளைக்காரப் பெண்ணின் கைவிரல் பட்டதால் ஊசி குத்தியநோ எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. "இவளது கைவிரல் படுமாக இருந்தால் அலவாங்கால் குத்தினால் கூட வலிக்காது" என்று பக்கத்தில் இருந்தவர் சலசலத்தார். இது பழைய கதை. இதைவிட்டுவிட்டு புதிதாக ஏதும் யோசிப்பம் என்றால் அதுவும் என் மரமண்டைக்கு ஏறுதில்லை.   ஒரு பாடசாலையில் இன்று பொது அறிவு கேள்விகளுக்கு என்னை நடுவராக அழைத்திருந்தார்கள். என்னை வீட்டில் நடுவிலான் என்றுதான் அம்மா செல்லமாக அழைப்பா. அதனாலோ என்னவோ என்னை நடுவராக அமர்த்துவதில் எனக்கு ஒரு சந்தோசம். பாடசாலையில் போட்டி தொடங்கிவிட்டது. போட்டியின் பிரகாரம் "இலங்கையில் இருக்கும் மூன்று மலைகளின் பெயர்கள் சொல்லுங்கள்" என்று முதலாவது வந்த போட்டியாளரைக் கேட்டேன். போட்டியாளர் "திருகோணமலை. கீரிமலை. சுதுமலை" என்று கூற சபையோரும் அவை சரி என்பதுபோல் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இரண்டாவது கேள்வி "இராவணன் என்றதும் உங்களுக்கு முதவில் என்ன தோன்றுகிறது" என்று கேட்டேன். பதில் விக்ரம் நல்ல நடிகர் என்று தோன்றுகிறது என்றார்கள். இதற்கும் சபையோர் கைதட்டினார்கள். முன்பு எல்லாம் ஒருவரைப் பார்த்து "நீ விக்ரம் போல் இருக்கிறாய்" என்றால் சந்தோசப்படுவார்கள். தெய்வத்திருமகன் படம் வந்தபின்னர் அப்படி சொல்லமுடியாமல் உள்ளது. பாடசாலையின் பக்கத்தில் ஒரு புகையிரதப் பாதை இருப்பதால் அடிக்கடி அந்த இரைச்சல் போட்டிகளை நடாத்து முடியாமல் தடைசெய்து கொண்டிருந்தது. 

புகையிரதம் என்றதும் எனக்கு ஊர் ஞாபகங்கள் தாலாட்டத் தொடங்கின. 1914ம் ஆண்டு சிறிலங்காவிற்கு புகையிரதப்பாதை போடப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு "யாழ்தேவி" என்று பெயரிடப்பட்ட புகையிரதம் ஓடத்தொடங்கியது.  வெள்ளைக்காரன் வராவிட்டால் அதுவும் வந்திருக்காது. அப்பொழுது புகையிரதம் ஓடுவதைப் பார்ப்புதற்கு தண்டவாளப் பாதைகளுக்கு அருகாமையில் ஊரேதிரண்டு நிற்குமாம். நிற்பவர்கள் எல்லோரும் வெள்ளைக்காரனிடம் ஒரு மந்திரசக்தி இருப்பதாகப் பேசிக்கொள்வார்களாம். வெள்ளையன் வராவிட்டால் "நாம் இப்போ கோவணத்துடன்தான் நின்றிருப்போம்" என்று பேசிய புத்திசீவிகளும் அதனுள் நின்றனர்.  வேடிக்கை பார்ப்பதற்கு மக்கள் திரண்டார்களே தவிர பிரயாணம் செய்வதற்கு ஒருவரும் அக்காலத்தில் பயத்தின் காரணமாக முன்வரவில்லை. புகையிரதத்தை தமிழரும் சிங்களவரும் "கோச்சி" என்றே அழைத்தார்கள். இது "கோச்" என்ற ஆங்கில அடிச்சொல் என்று தெரியாமலே கதைக்கத் தொடங்கிவிட்டார்கள். 

அக்காலத்தில் தாய்மாரைப் பிள்ளைகள் ஆச்சி என்பதை மொழிவழக்கில் கோச்சி என்றும் தகப்பனை கொப்பர் (கொப்பன்) என்றும் அழைப்பது வழக்கம். ஆரம்ப காலங்களில் புகையிரதப் பாதை ஊடறுத்துச் செல்லும் தெருக்களுக்கு தடுப்பு கிடையாது. "கோச்சி வரும் கவனம்" என்று அறிவித்தல் பலகை மட்டும் பெரிதாக மாட்டப்பட்டிருக்கும். இதைக் கவனிக்காமல் சென்று கைலாயம (மோட்சம்) போனவர்களும் உண்டு. கோச்சி வரும் கவனம் என்பதற்குக் கீழ் "கொப்பரும் வருவாரோ" என்று இன்னொரு வசனத்தையும் தமிழர்கள் எழுதி வேடிக்கை பார்ப்பார்கள். கோச்சியில் ஏறுவதற்கு ஒரு தமிழர்களும் விருப்பப்படாத காலத்தில் வெள்ளைக்காரன் அதற்கென்று ஒவ்வோரு நகரங்களிலும் பல முகவர்களை நியமித்திருந்தான். அந்த முகவர்களின் தொழிலின் பெயர் "கோச்சிக்கு ஆள் கூட்டும் வேலை" . இவர்கள் கோச்சிக்கு ஆள் கூட்டத் தொடங்கிறதும் வெள்ளைக்காரனின் பிழைப்பு ஒகோ என்று ஓடத் தொடங்கிறது. இதனால் பல கோச்சிகளும்(ஆச்சிகளும்)  கோச்சியில் பிரயாணம் செய்யத் தொடங்கினர். 

அந்தக்காலத்து(1914) கதாநாயகர்கள் ஆச்சி கோச்சியில் போவதைப்பார்த்து "ஆச்சி கோச்சியில் மதவாச்சிக்குப்போய் பிள்ளைக்கு போச்சி வாங்கிவந்து வீட்டு மேசை லாச்சிக்குள் வைக்க; லாச்சிக்குள் இருந்த பூச்சி ஆச்சியின் பாச்சியில் கடித்தது" என்று சிலேடை கதைப்பார்கள்.  குழந்தைகளுக்கு சோறை சோச்சி என்றும்; மீனை மீச்சி என்றும் சொல்லிக் கொடுப்பதுபோல் பாலை பாச்சி என்று சொல்லிக் கொடுத்தார்கள்.  பாச்சி(பால்) என்ற பொருள் தனத்திக்கு ஆகிவந்திருப்பதால் அது இப்பெயரைப் பெறுகிறது.  இது ஒரு பொருளேதவிரக் கெட்டவார்த்தை இல்லை என்று தமிழ் இலக்கணம் விடை தருகிறது.  வெள்ளைக்காரன் இலங்கையை விட்டுப் போகும்போது 900 மைல் தண்டவாளங்களை நாடு பூராகவும் அமைத்திருந்தான். இன்றைய மகிந்தா வரை இன்னும் ஒரு அடிகூட தண்டவாளம் போடவில்லை என்பது இலங்கை வரலாற்று பெருமை.  இந்தப் புகையிரதத்தில்தான் டயானாவும் சாள்சும் கொழும்பில் இருந்து அநுராதபுரம்வரை சென்றார்கள். புகையிரதம் ஓடும்போது சடக் சடக் என்று சில்லு தண்டவாளத்தில் ஓடும் சத்தம் பிரயாணிகளுக்கக் கேட்கும். இதைக் கேட்ட டயானா சாள்சிடம் ஒரு கேள்வி கேட்டார். "நமது நாட்டில் ஓடும் புகையிரதங்களுக்கு சில்லு வட்டமாக இருக்கும்; இங்கு ஏன் சில்லு சதுரமாக இருக்கிறது" என்று. சாள்சுக்கு தலை சுற்றியது. 

பாடசாலையைக் கடந்து புகையிரதம் சென்றுவிட்டது. சத்தம் குறைந்துவிட்டது.  அடுத்த போட்டியாளரை நான் அழைத்து ஒரு கடிக் கேள்வி கேட்டேன். "பெண்ணுக்கும்; விரலுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன். வந்தவன் என்னைப்போல் ஒரு விபரமான பொடியன். ஆங்கிலத்தில் பெண்ணை Figure என்று அழைப்பார்கள்; விரலை Finger என்று அழைப்பார்கள்; அதனால் "n" தான் வித்தியாசம் என்றான். சபையோர்கள் இதற்கும் விளங்கியதுபோல் கைதட்டியார்கள். அடுத்த கேள்வி; முத்தத்திற்கும் சத்தத்திற்கும் என்ன வித்தியாசம் என்றேன். அவன் தமிழ் முத்தமா ஆங்கில முத்தமா என்று திருப்பி என்னை ஒரு கேள்வி கேட்டான். .............

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

9.என்னைத்தவிர நீ வேறு என்னத்தைக் கிழித்தாய்'


 என் வீட்டுச்சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த பிரபாகரன் போட்ட கலண்டரில் கடைசித்தாளைக் கிழிக்கும்போது கலண்டர் என்னைப்பார்த்துக்கேட்டது ''என்னைத்தவிர நீ வேறு என்னத்தைக் கிளித்தாய்'' என்று. அசந்து உட்காந்து விட்டன். மனிசியும் ஒரே நான் படிச்சு கிளிச்சதைப்பற்றிக் கதைக்கிறது. காலை வேலைக்கும் நேரமாகிவிட்டது. ஐரோப்பாவில் அவரவர் அலாரம் அடிக்க எழுந்து வேலைக்குப் போகவேண்டியதுதான். ஒரு அலாரம் அடியுடன் எழும்பிவிட வேண்டும். அல்லாவிட்டால் மனிசி புறுபுறுக்கும் என்று ஒரு மரியாதை. மற்றவர்களை எழுப்பப்படாது என்பது சட்டம் அல்ல; சம்பிரதாயம். காலைக்கடன் முடிக்க எனக்கு மூலஸ்தானத்தில் 30 நிமிடங்கள் தேவை. காப்பிக்குள் பச்சைப்பாலைவிட்டு கலக்ககி மூச்சுவிடாமல் குடித்துவிட்டு 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் இருந்தாலும் நிற்கும் பஸ்சை பிடிப்பதற்காக ஓடுவது எனக்கு பழகிவிட்டது. வெள்ளைகளும் அப்படித்தான். லிவ்ற் இருந்தாலும் படிகளில் ஏறிச்செல்வவது வெள்ளைகளின் குணம். ஓட்டுனர் இல்லாத புகையிரதத்தில் ஏறி நானும் தொழிலுக்குச் செல்கின்றேன். தனியார் நிறுவனம் ஒன்றில் விமான ரிக்கட்டுகள் புக்பண்ணிக்கொடுப்பது எனது தொழில்.
காலையில் முதலாவது தொலைபேசி. ''அண்ணே நான் செந்திலின் வைப் (wife) மட்ராசில் நின்று கதைக்கிறன். உங்களிடம்தான் நாங்கள் எடுத்தநாங்கள். இப்பதான் மேல்வரவத்துர்ரால் வருகிறம். எங்கபோய் ரிக்கட் றீக்கொண்டிசன் பண்ணுறது என்று இவர் கேட்கச்சொன்னவர்'' என்றார். அது றீக்கொண்டிசன் இல்லை அம்மா; றீகண்Fபோம் என்று நான் சொன்னாலும் அம்மாவின் காலைக்கழுவி குடித்துவிட்டு வருபவர்களுக்கு விளங்கவாபோகிறது என்றுவிட்டு மட்ராஸ் முகவரியைக் கொடுத்து தப்பிவிட்டன். 2வது தொலைபேசி ''அண்ணே நாங்க சிறிலங்காவுக்கு உங்களிட்த்தான் எடுத்து வந்தநாங்கள் எங்கள் லக்கேஜ் ஐ காணவில்லை என்ன செய்கிறது''. இப்படி பல கேள்விகள் வரும். மூட நம்பிக்கைகளுக்கும் விஞ்ஞானத்திற்கும் இடையில் தமிழன் அகப்பட்டுத் தவிக்கும் தவிப்பு சொல்லி அடங்காது. பல வெளிநாட்டுத்தமிழர் வேட்டியைக்களற்றிவிட்டு களிசான் போட்டது கட்டுநாயக்கா எயர்போட்டில்தான். எனக்குத்தெரிந்ததமிழ் ஆசிரியர் ஒருவர் டுபாய் வரைக்கும் Zசிப் இழுக்காமல் வந்ததாகக் கனடாவில் வைத்துக்கூறினார்.

மீண்டும் ஒரு தொலைபேசி. ''கலோ அமரிக்கா போய் கனடா போகவேணும்; தட்டிப் பார்த்து சொல்கிறயளோ? அவர் பிரயாண  ரிக்கட்டுக்கு என்னவிலை என்பதையே இப்படிக்கேட்கிறார். இருக்கிறது எத்தனைபேர் போகவேண்டும் என்று கேட்டேன். ''நான் மட்டும்தான் ஐயா போகிறன். இப்ப வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகள் தாய் தகப்பனுக்கு 25ஆவது கல்யாணநாள், 60வது பிறந்தநாள் என்று ''செப்பறேட்'' பாட்டி எல்லோ வைக்கினயாம் அதற்குத்தான் போகிறன்'' என்றார். ''செப்பறேட்'' இல்லை ஐயா, சேBரைஸ் பாட்டி என்று நான் சொல்லிவிட்டு உங்கள் பெயரை கடவுச்சீட்டில் உள்ளதுபோல் சொல்லுங்கள் என்றேன். ''இவளவு ஆங்கிலம் படித்தநீங்கள் சிந்தாமணி முருகலிங்கம் என்று எழுதத் தெரியாதா''  என்று கேட்டார். பல விளக்கங்கள் சொல்லி அவரை சமாளித்து அவர் பெயர் சொல்லத் தொடங்ககினார் ''S I N ......அப்பா இஞ்சவாரும் இவங்கள் பாஸ்போடடில இருக்கிற பெயரை அப்படியே உச்சரிக்கச் சொல்கிறார்கள் கண்தெரியுதில்லை ஒருக்கா சொல்லிவிடு'.... மனைவிக்கு விளங்கினாலும் விட்டுக்கொடுக்காத தன்மை. ''இதற்குத்தான் கண்ணாடியை போடுங்க என்று சொல்கிறது'' என்றுவிட்டு பெயரை உச்சரித்தார். தொலைபேசியை வைக்கும்போது; நீங்க கங்கைமகன்தானே குரல் கணீரென்று விளங்குகிறது என்று எனக்கும் ஒரு தாழிப்பு.

சுவிஸ்விமான நிலையத்தில் அமரிக்கா செல்பவர்களுக்கு செக்கின் போவதற்குமுன் பாதுகாப்பு பரிசீலனை ஒன்று நடைபெறும். அதில் கொண்டுபோகும் பொருட்கள் பொதிகள் சம்பந்தமான கேள்விகள் கேட்கப்படும். 2 பெரிய மோப்பம் பிடிக்கும் நாய்களும் பக்கத்தில் நிற்கும். முருகலிங்கத்தின் முறை வந்தது. இந்த உடுப்புப் பெட்டியை அடுக்கியவர்யார்? பதில் நான்தான். ''இரவில் இந்தப்பெட்டி எங்கு இருந்தது'' பதில் என் அறையில். ''உங்களுக்குத் தெரியாமல் யாராவது இந்தப்பெட்டிக்குள் ஏதேனும் பொருட்களை வைத்தார்களா?''  பதில் இல்லை என்று சொல்லியிருக்கலாம்; ஆனால் முருகலிங்கத்திற்கு கோபம் வந்துவிட்டது. எனக்குத்தெரியாமல் பொருட்களை வைத்தால் எனக்கு எப்படித் தெரியும் என்று பதிலளித்தார். அதனால் முருகலிங்கத்தின் பெட்டி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அனுமதி வழங்கப்பட்டது. முருகலிங்கத்ததிற்குப் பயம் இல்லை ஆனால் ஒரு பதட்டம். Bபோடிங் முடிந்து ஏறுவதற்குக் காத்திருந்தார். மனைவிக்கு தொலைபேசி எடுத்து நான் வந்துசேர்ந்துவிட்டன் என்றார். மனைவி ''அதற்கிடையிலா'', இல்லையப்பா மு.லிங்கத்திற்கு கொதி. சரி நான் ஏறப்பிளேனில் ஏறப்போறன். இறங்கி அடிக்கிறன் என்றுவிட்டு அமைதியடைந்தார்.

கனடாசென்று செப்பறேட் பாட்டி முடிந்து ரொறங்ரோ விமானநிலையத்தில் இருந்து நியூயோர்க் ''லகாரர்டியா'' விமானநிலையத்திற்கு மு.லிங்கம் வந்துகொணண்டு இருக்கின்றார். பின்னர் சுவிஸ் பிளேன் எடுக்கவேண்டும் இது அவரது பிரயாண அட்டவணை. ஆகாயம் மேலே பாதாளம் கீழே ஆனந்த உலகம் நடுவினிலே என்பது முருகலிங்கத்தின் அந்த நேரச் சூழல். இறங்குவதற்கு 20 நிமிடங்கள் இருக்கின்றன என்பது விமானியின் அறிவிப்பு. தப்பிவிட்டோம் என்பதுபோல் ஒருவரை ஒருவர் பார்த்து ஒரு சிறிய சிறிய சிரிப்பு. திடீரென ஒரு அறிவித்தல். ''விமானத்தின் இயந்திரத்திற்குள் பறவை அகப்பட்டதால் நாங்கள் ஆபத்தான நிலையில் இருக்கின்றோம். உங்கள் தொலைபேசிகளைப் பாவித்து வேண்டியவர்களுடன்கதையுங்கள் என்று அறிவிக்கப்பட்டது. பதட்டத்துடன் பயமும் மு.லிங்கத்தைப்பிடித்துக்கொண்டது. வீட்டிற்கு தொலைலபேசி எடுத்தார். அது பிசியாக இருந்தது. மகளுக்கு எடுத்தார் பிசி. மகனுக்கு எடுத்தார் பிசி. வியர்வையில் தொலைபேசி ஈரமாகிவிட்டது. மீண்டும் ஒரு அறிவித்தல் ''கடைசியாக ஒரு முயற்சி Hகட்சன் ஆற்றில் விமானத்தை இறக்க முயற்சிக்கின்றோம்'' இவரது தொலைபேசி அடித்தது. மனைவி இலக்கத்தைப்பார்த்து தொடர்பு கொண்டார். ''அம்மா நான் சாகப்போகின்றேன் பிளேனுக்குள் பறவை புகுந்து ஆத்தில இறக்கப்போகிறார்களாம். ஒரு பேப்பரும் பேனையும் உடன எடு'' என்று பணித்தார். மனைவியும் எடுத்துவிட்டன் சொல்லுங்க. ''துரை 10 தரவேண்டும், சுந்தரன் 14 தரவேண்டும், பரமன் 25 தரவேண்டும்....இப்படி 2 இலட்சம் சுவிஸ் நாணயங்கள் வருமதியிருப்பதாகக் கூறினார். மனைவி அழுது அழுது ஒன்றும் ஆகாது பயப்படாமல் இருங்கள் என்று ஆறுதல் சொன்னார். அதைவிட நீங்கள் ஆட்களுக்கு கொடுக்குமதியும் இருக்கெல்லே என்றார். மனைவி கண்Fபோம் பண்ணிவிட்டா! யாராவது வந்து கேட்டால் அவர் ஒன்றும் சொல்லவில்லை என்று சொல்லுங்கோ. இரண்டு இதயங்களும் துடித்தன. மரணவாயில் அகப்பட்டவனால் எப்படி பேசமுடியும். தொலைபேசியும் துண்டிப்பிற்கு உள்ளாகியது.

சுவிசில் மு.லிங்கத்தின் வீட்டைச்சுற்றி உறவுகள் குவிந்தனர். செத்தவீடே நடைபெறுகின்றது. அவர் செத்தா நாமளும் கடன்ககாசை திருப்பிக்கொடுக்கத் தேவையில்லைத்தானே என்று துரை, சுந்தரன் போன்றோர் ஒருபக்கமாக நின்று கதைக்கிறார்கள். ஆத்தில பிளேனை இறக்க இயலுமா என்று ஒரு அரட்டை அரங்கம் வேறு. 4 இடத்தில் இருந்து உறவினர்கள் காப்பியும் கொண்டுவந்துவிட்டார்கள். வீடடை நோக்கி ஓடிவந்த மு.லிங்கத்தின்தம்பி அண்ணன் தப்பிவிட்டார், ஆற்றில் விமானம் இறக்கப்பட்டு பிரயாணிகள் மீட்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள், CNN இல் இப்போ லைவ் இல் காட்டுகின்றார்கள். மரணவீடு திரை விலகி காட்சிகள் மாறுகின்றன். வந்தவர்களில் சிலர் ஆத்தில இறக்கியவன் ஒரு சுவிஸ்காரனாமடாப்பா; உண்மைதான் அவரது பூர்வீகம் சுவிஸ்தான். அதனால்தான் அவரது பெயர் Sullberger என்று வருகிறது. அவரது படத்தையும் நீங்கள் பார்க்கலலாம்.
காட்சியும் முடிந்து திரையும்விலகி கூட்டமும் கலைந்தது. ஆபீசில் எனக்கு ஒரு வெளிநாட்டுத் தொலைபேசி அமரிக்காவில் ''லகார்டியா'' விமான நிலையத்தில இருந்து வருகிறது. ''எல்லோரும் காப்பாற்றப்பட்டுவிட்டனர். உங்கள் பிரயாணிமட்டும் மாரடைப்பால் இறந்துவிட்டார்'' என்று. எனது தொழில் அதிபருக்கு அதைத் தெரியப்படுத்தினேன். இந்தத் தகவலை நீங்கள்தான் மு.லிங்கத்தினரின் வீட்டாருக்குத் தெரியப்படுத்திவிடுங்கள் என்று சொல்கின்றார். இன்னும் கொஞ்சநேரம் அவர்கள் சந்தோஷமாக இருக்கட்டும் என்று நான் சொல்லவில்லை. வெளியில்; கங்கைமகனின் ஆபீசில் ரிக்கட் எடுத்தால் எங்காவது கொண்டுபோய்ச் செருகிவிட்டு விடுவார்கள், அல்லது தண்ணீருக்குள் இறக்கிவிடுவார்கள் என்று பலர் கதைப்பது என் காதுககளுக்குள் பலத்த சத்தமாகக் கேட்கிறது.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

8.மனைவிக்கு முத்தம் !


எறும்பு ஊரும் கோட்டிலும், பாம்பு ஊரும் தடயத்திலும் பல சொற்கள் என்னால் இன்னும் வாசிக்கப்படாமல் இருக்கின்றன

வாழக்கை விதி என்ற கோட்டில்தான் பயணம் செய்கின்றது. கோடுகள் ஒன்றுடன் ஒன்று முட்டுகின்றபோது மனித சந்திப்புகள் இடம்பெறுகின்றன. வாழ்த்துக்கள்.

இந்தத் தியறியின்படி நானும் திருமணம் செய்துவிட்டேன். வேலைக்களைப்பு, நாய்களின் சிறுநீர்கள் சுவிஸ் தெருக்களில் குச்சுக்குச்சாகக் கிடந்தன. அவளவுக்கு உறைபனி வெப்பநிலை. மூச்சில் வரும் நீராவியை மீசைகள் snow வாக கருக்கட்டியிருந்தன. இரவுவேலை முடித்து அதிகாலையில் வீடு சென்று படுத்துவிட்டேன். ஒரு கிலோ பாண்வாங்க 25 கிலோ உடுப்பு அணியும் வின்ரர் காலம்.

வீட்டில் ஒரு முழு ரிக்கட்டும், இரண்டு Hகாவ் ரிக்கட்டுகளும் சனிக்கிழமை அதிகாலையில் எழுந்து ஆரவாரம்.  பெரியவனும் சின்னவனும் ஏதோ கதைக்கிறார்கள்; அது எனக்கு கேட்கிறது. உன்னிடம் இருக்கும் துப்பாக்கியில் 6 மருந்து இருக்கிறது என்று பெரியவன் சொல்கிறான். முதலில் அப்பாவை சுடு என்றான். சின்னவன் டிசூம் என்று சுட்டான், பின்னர் அம்மாவை சுடு என்றான் சின்னவன் டிசூம் என்று சுட்டான். பின்னர் பெரியவன் தன்னை சுடு என்றான்; சின்னவன் டிசூஉம்.பெரிதாகச் சத்தம் போட்டு சுட்டான். ஏன் என்னைச் சுடுமபோது பெரிதாகச் சத்தம் போட்டாய் என்றான் தம்பியை  ''நான் உன்னை சுடும்போது ''சைலன்சர்'' போடாமல் இழுத்தேன்'' என்றான் தம்பி.
பெரியவன் அப்பாவையும், அம்மாவையும், என்னையும் சுட்டு 3 மருந்து போய்விட்டது. இப்போ உன்னிடம் எத்தனை மருந்து இருக்கிறது என்று கேட்டான். தம்பி 3 என்றான். பெரியவன் அப்போ ஆறிலிருந்து மூன்று போனால் 3 என்று பெரியவன் தம்பிக்கு கழித்தல் கணக்கு சொல்லிக் கொடுப்பது புரிந்தது. இதற்கிடையில் மனைவி தொலைபேசியில் ஒரு உரையாடல். இடையிடையே ''நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன'' கற்பூரவாசனை தெரியாததுகளுக்குச் சொல்லியும் திருத்த இயலாது என்பதும் காதில் கேட்டது. இடையிடையெ சிரிப்பு. யாருடன் ஊரையாடல் நடைபெறுகின்றது என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் முயற்சிக்கவும் இல்லை. கடைசியில் ''நித்திரை கொள்பவனை எழுப்பலாம், நித்திரைபோல் கிடப்பவனை எழுப்பமுடியாது என்று கதை முடிக்கப்பட்டது.

மீண்டும் கணக்குப்பாடம். இப்பவும் கழித்தல் கணக்குத்தான். பெரியவன் ''உன்னிடம் இப்போ 3 மருந்து இருக்கிறது. நீ இனி உன்சைச்சுடு என்றான். சின்னவன் முடியாது, என்னை நான் சுடமாட்டன் என்றான். பெரியவன் என்னை சுட்டனீதானே உன்னையும் சுடு  என்றான்.  இல்லை, மாட்டன் மாட்டன் என்றான் தம்பி. கணக்குபாட்ம் நின்றது. இருவருக்கும் உள்வீட்டுக்குள் சண்டை. மனைவி வந்தார். பிள்ளையள் அப்பா நித்திரையாகக் கிடக்கிறார் அங்காலே போய்விளையாடுங்கள் என்று புருசன் மேலுள்ள கருணையைக் காட்டிகார். நானும் அப்படித்தான் நினைத்தன். மறுகணம் என் அறையில் கிடந்த தையல்மெசினில் மனிசி சட்டை தைக்கத் தொடங்கினார். மீண்டும் தொலைபேசி என் அறைக்குள்தான். மனைவி எடுத்தார்.'' ஓம் ஓம் அவர் இப்பதான் வேலையால்வந்து நல்ல நித்திரை, எழுப்பினால் ஏசுவார், பிறகு எடுங்கள் என்று வைத்துவிட்டு தையல் தொடர்கிறது. கற்புள்ள தையல்மெசின். ஆண்களின் கைகள் இன்னும் படவில்லை. பட்டிருந்தால் எப்பவோ செத்திருக்கும்.


தூக்கத்திலும் சிலரது கதைகள் என்னை விட்டபாடில்லை. ''நான் நினைத்தன் மச்சான் வைரமுத்து ''எலிசபத்து ரைலர் மகளா? என்று பாடல் எழுதியது எலிசபத் ராணியின் ரெய்லர் அதாவது தையல்காரனின் மகளாக்கும் என்று, இப்பதான் விளங்கியது எலிசபெத்ரைலர் என்ற நடிகையின் மகளா? என்று எழுதியது. மற்றவன் ''உனக்கு என்ன தெரியும் தெருவில் விளம்பரத்திற்கு இலவசமாகக் கொடுத்த allways ஐயே என்ன சாமான் என்று தெரியாமல் வாங்கிவந்தனீதானே'' நான் கன்ரீனில் நுளையும்போது இவை என் காதில் கேட்டவை.

என்னைக்கண்டு ஒருவர் ஓடிவந்தார் ''அண்ணேண நீங்கதானே இந்த முகநூலில் நிலைக்கண்ணாடி எழுதி பெயர்வாங்கிறனீங்க, இந்த பாரிசில் நடக்கும் தமிழர் அடாவடித்தனங்களையும் எழுததலாம் தானே'' என்றார். சரி நீங்கள் என்னத்தைக் கருதுகிறீர்கள் என்று அமைதியாகக் கேட்டேன். ''இல்லை அண்ணே! பாரிசில் லாச்சப்பல் என்ற தமிழர் வியாபார ஏரியாவில்; தமிழர்களைத் தமிழர்கள் வெட்டுகிறார்கள், கொலை செய்கிறார்கள், தமிழர் கடைகளுக்குள் தமிழர்கள் சென்று கொள்ளை அடிக்கிறார்கள், வீடுகளுக்குள் சென்று பெண்களைக் கற்பழிக்கிறார்கள், கடைகளை இழுத்துப் பூட்டிவிட்டு முதலாளிமார் பயத்தில் ஓடுகின்றார்கள், 14 வயதுப் பெண்ணைப் பலவந்தப்படுத்தி வல்லுறவு கொண்டபின் கொல்கிறார்கள், லாச்சப்பலில் பெண்கள் கடைத்தெருவிற்கு வரமுடியாமல் இருக்கின்றது, நாகரிகத்திற்குப் பெயர்போன பாரிஸ் தெருக்களில் தமிழர் அநாகரிகமான நடந்து கொள்கின்றார்கள், இதைத் தெரியாமல் தமிழர்கள் உலகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றார்கள் என்று சிலர் சொல்கிறார்கள், இவற்றை எழுதலாம் தானே அண்ணே'' என்றார். தம்பி நான் உயிருடன் இருந்து இரண்டு நிலைக்கண்ணாடி எழுதுவது உமக்கு விருப்பம் இல்லையோ  ஆளை விடுங்க சாமி என்றுவிட்டு  நகர்ந்துவிட்டன்.


வீட்டின் அமைதி என்னைத் தூங்கவிடவில்லை எழுந்துவிட்டேன். வீடு நிசப்தமாக இருந்தது. ஒருவரையும் காணவில்லை. எங்கள் அறிவிப்புப் பலகையில் அதுதான் சாப்பாட்டு மேசை. அதில் ஒரு துண்டு இருந்தது. வாசித்துப் பார்த்தேன். ''நாங்கள் கடைகளுக்குச் செல்கின்றோம், மதியம் வெளியில்தான் சாப்பிடுவோம், நீங்கள் எங்களைத் தேடினாலும் என்பதற்காக உங்கள் தொலைபேசியையும் கொண்டு செல்கின்றோம், சின்னவனுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்குவதற்காக உங்கள் கிறடிற்காட்டையும் கொண்டு செல்கின்றோம், மதியம் ஏதாவது பார்த்து சாப்பிடவும். இப்படிக்கு உங்கள் மனைவி பிள்ளைகள் என்று போட்டிருக்கும் என்று நீங்கள் நினைப்பதுபோல் நானும் நினைத்தேன். ஒன்றும் போடவில்லை
.
குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தேன், ஒருமுட்டை, 2 கரட், பாதி பூசனிக்காய், கொஞ்ச லீக்ஸ். யாராவது எனக்குத் தெரியாமல் முயல்வளர்க்கிறார்களோ என்று யோசித்தன். வெளியில் பார்த்தேன் காரையும் காணவில்லை. இப்போதுதான் நான்உண்மையில் அகதித்தமிழன் என்பதை மறுபடியும் உணர்கிறன். மீண்டும் வெளியில் சின்னவனின் ஆரவாரம் கேட்கிறது. விளையாட்டுப்பொருள் அவனுக்குக் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் வருகிறான். மீண்டும் வெளியில் எட்டிப் பார்க்கின்றேன். மனைவிக்கு ஒருவன் முத்தம் கொடுத்துக்கொண்டு நின்றான். என் மனைவிக்கு அல்ல தன் மனைவிக்கு.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

7.''யானையைக்கட்டித் தீனி போட என்னால் முடியாது !


உலக வரைபடத்தில் நான் பிறந்த இடத்தைப் பார்க்கவேண்டுமாக இருந்தால் உலக வரைபடத்தை உலகளவு பெருப்பித்துப் பார்த்தால்தான் தெரிந்துகொள்ளலாம். அவளவு சிறியது. நாகரிகத்தை எட்டிப்பார்க்கும் நாகரிகம் எட்டாத ஒரு கிராமம். படித்தவர்கள் வாழும்பூமி என்பது எனது கிராமத்திற்கு மற்றவர்களால் இடப்பட்ட ஒரு சிறப்புப் பெயர். முடி வெட்டும் கடையில் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு பழையனவற்றை ''ஆட்டோக்கிராவ'' பாணியில் சிந்தித்துக்கொண்டிருந்தேன். தமிழர்கள் ஒருவரும் வெள்ளைக்காரன் கடைகளில் போய் முடி வெட்டுவதில்லை. வந்த புதிதில் வெள்ளைக்காரன் கடையில் தமிழர் ஒருவர் தலையைக் கொடுக்க தலையில் இருந்த பேனைப்பார்த்த வெள்ளைக்காறிச்சி ''so many animals'' என்று நல்ல பாம்பைத் தலையில் பார்த்தவள்போல் மிரண்டுவிட்டாள். பின்னர் சுவிற்சர்லாந்தின் சமூகசேவைப்பகுதியின் சுகாதாரத்திணைக்களம் தமிழர் எல்லோருக்கும் பேன் பத்தறுவதற்கான ஷம்போ இலவசமாகக் கொடுத்து அதைப் போக்காட்டினார்கள்; இதுநடந்து 30 வருடங்களாகிவிட்டது.  அதற்குப்பின்னர் தமிழர் ஒருவர் கடை திறக்கும்வரை நண்பர்களுக்கு நண்பர்கள் வெட்டத்தொடங்கி இப்பதான் ஓய்வாக இருக்கிறார்கள். கடையினுள் பிரவேசித்தவர்களின்படி நான் இப்போ ஒன்பதாவது ஆளாக இருக்கின்றேன். எனக்கு சிரச்சேதம் செய்ய எப்படியும் இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கிறது. அந்தக் கடையின் பெயர் டயானா சலூன்.

சலூனுக்குள் சரியான கட்டுப்பாடு பாருங்கோ! ''கடையினுள் கைத்தொலைபேசிப் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளது'' என்று நான்கு மொழியில் நான்கு இடத்தில் போடப்பட்டுள்ளது. ''அரசியல் பேசாதே'' என்று கொட்டை எழுத்தில் தமிழில் மட்டும் எழுதப்பட்டுள்ளது. இதைப்பார்க்கும் வெளிநாட்டவன் இதுதான் கடையின் பெயராக்கும் என்று நினைக்கும் அளவுக்கு அது இருந்தது. நல்ல பாடல்கள் வீடியோவில் தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருக்கிறது. நான் கைத்தொலைபேசியை நிற்பாட்டிவிட்டு ஏதாவது வாசிக்க இருக்கிறதா என்று பார்த்தேன். முடிவெட்டவந்த சிலர் தங்களுக்கான இலக்கத்தை எடுத்தபின் வெளியிலும் போய் நின்றார்கள். அவர்கள் அரசியல்பேசுவது எனக்குக் கேட்டது. பக்கத்தில் இருந்தவர் கொஞ்சம் கவலையாக வந்திருப்பவராக எனக்குப்பட்டது. என்னண்ணே விசயம் என்று கேட்டேன். இல்லைத்தம்பி எங்களுக்குள் ஒரு செத்தவீடு. இப்பதான் எல்லோருக்கும் தகவல் அனுப்பிப்போட்டு வருகிறன். யார் யார் வருவினம் என்று 5 நாட்கள் பார்த்துவிட்டு, முக்கியமான ஆட்கள் வந்தவுடன் எடுப்பம் என்று இருக்கிறம் என்றார். எனக்கு அவர் சொன்னவை நான் கதையெழுதி FB யில் அனுப்பிவிட்டு முக்கியமான ஆட்களைப் பார்த்துக்கொண்டு இருப்பதை நினைவு படுத்தியது.

முடிவெட்டுவதற்குமுன் கடையினுள் வைக்கப்பட்டுள்ள மாதிரித் தலைகளைப் பார்த்தேன். கிளிங்டனின் தலை முதலில் என் கண்ணில் பட்டது. அவரது தலை வெட்டு நன்றாகத்தான் இருக்கிறது. கரக்டர் சரியில்லையே என்று யோசித்தபோது கிளிங்டனைப்பற்றி அவரது மனைவி பத்திரிகை ஆசிரியரின் கேள்கிக்குப் பதில் சொல்லும்போது ''யானையைக்கட்டித் தீனி போட என்னால் முடியாது என்று சொன்னது நினைப்பு வந்தது. அதே பத்திரிகை அந்தப் பேட்டியின் கீழ் ''கில்லாரி கிளிங்டன் பெண்வாசனைகளுக்காக ஏங்கும்  பெண்களின் கனவுக்கன்னி'' என்று முடித்திருந்தது நினைவுக்கு வந்தது. அமரிக்காவில் நியூயோர்க் நகரத்தில் மன்hகாட்டன் என்ற இடத்தில் பெண்களுக்கு பெண்கள் ஆங்கில முத்தம் கொடுப்பதை நான் பார்த்திருக்கின்றேன். அடுத்து ஜோர்ச் புஸ் இன் தலையும் மொடலுக்காக அவரது மனையியுடன் சேர்த்தமாதிரி இருந்தது. புஸ்சின் மனைவி ஒரு ஸ்பெயின் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பெண்மணி. புஸ்சுடன் கடைத்தெருவிற்குப் போகும்போது தூரத்தில் தனது பழைய காதலனைக் கண்டாராம். புஸ்சிற்கு அவரைக்காட்டி ''இவர் ஒரு சலவைத் தொழிலாளி என்று அறிமுகம் செய்து வைத்தார். புஸ்சிற்கு ஒரு நக்கல் சிரிப்பு. உடனே புஸ் சொன்னாராம்; அவரை நீ கட்டியிருந்தால் இப்போ கட்டாடி பொண்டாட்டியாக இருந்திருப்பாய் என்று. அதற்கு புஸ்சின் மனைவி  ''நான் அவரைக் கட்டியிருந்தால் அவர்தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருப்பார்'' என்று சொன்னார்.  புஷ்க்கு அசடு வழிந்ததையும் நான் நினைக்கின்றேன்.

டயானா சலூனின் ஒரு மூலையில் அழகிய ஒரு அலுமாரி, அதனுள் பிரபலங்களின் கதைப்புத்தகங்கள் வாடிக்கையாளர் பாவனைக்காக என்று வைக்கப்பட்டிருந்தது. நான் எடுத்த புத்தகத்தைத் தட்டிப்பார்த்தேன். ''கடிகள்'' என்ற கேள்விபதில் பக்கம் என் கண்ணுக்குத்தென்பட்டது. ''தமிழன் எப்போது தலைநிமிர்ந்து நிற்கின்றான்'' என்ற கேள்விக்கு ''ஷவரில் குளிக்கும்போது'' என்று விடையிருந்ததைப்பார்த்தேன். உடனே எனக்கு வீட்டுநினைப்புத்தான். இன்று குளிக்கச் செல்லும்போது; நானும் குளிக்கவேண்டும் சுடுதண்ணியை குறைவா பாவியுங்க, கண்ணாடியில் ஒட்டுப்பொட்டுகள் இருக்கிறது கவனம், சூடுபோகக் குளிக்காமல் ஊத்தைபோக மட்டும் குளியுங்க, தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கோயிடுங்க, டவல் அது இது என்று கூப்பிடாதேங்க, தொட்டிக்குள் கிடக்கும் என் உடுப்புளை அலம்பி பிழிந்துவிட்டு குளியுங்க, கெதியா வாங்க என்று ஒரு மின்சாரத்தின் நச்சரிப்பு. இதற்கு நான் குளிக்காமலே இருந்திருக்கலாம் என்று நினைத்துவிட்டு மற்றைய பக்கங்களைத் தட்டிப்பார்த்தேன். அதனுள் 8ம் இடத்தில் இருந்தவர் தொழிலாளியைப் பார்த்து ''ஏன்தம்பி மொடலுக்கு ஆங்கிலேயர்களின் படங்களையும், காந்தி, புறூஷ்லி போன்றவர்களின் படங்களையும் வைத்திருக்கின்றீர்கள், ஒரு எம்ஜிஆர், சிவாஜி, ரசனிகாந், சத்தியராசா போன்றவர்களின் மொடல்களையும் வைக்கலாம்தானே'' என்றார். தொழிலாளி ''நாங்கள் டோப் வைத்தவர்களுக்கு தலைமயிர் வெட்டுவதில்லை'' என்று வேலை பிசியில் சிரிக்காமல் சொன்னார்.

9ம் இடத்தில் இருந்தனான் இப்போ 4ம் இடத்திற்கு வந்துவிட்டேன். குடி போதையில் ஒருவர் உள்நுழைந்தார். தம்பி எனக்கு காந்திமொடல் போடணும் என்றார். தொழிலாளி வசந்தமாளிகை பாவித்தவர்கள் உள்ளே வரக்கூடாது என்று திட்டி அவரை வெளியேற்றினார். ஒரு பக்கத்து மேற்சுவரில் ''நாம் தமிழர், நமதுமொழி தமிழ், நமதுநாடு தமிழீழம்'' என்ற வாசகமும் ஒட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் ஏதோ ஒருவகையில் பொழுது போக்கக்கூடிய விடையங்கள் அங்கே இருந்தன. இலவசக் காப்பிக்காக ஒரு மூலையில் ஒரு காப்பி மெசினும் இருந்தது. நான் அடுத்து கவிஞர் வைரமுத்துவின் புத்தகம் ஒன்றைத் தட்டிப்பார்த்தேன். நான்கண்ட கனவுகள் என்ற தலைப்பில் அவர்கண்ட கனவுகளை எழுதியிருந்தார். காந்தியின் கண்ணாடி, திருவள்ளுவரின் எழுத்தாணி, டயானாவின் தொடை, stop stop   வீடியோவில் ஒரு அருமையான பாடல்வரிகள் ''மடல்வாழைத் தொடை இருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க படைத்தவனின் திறமை எல்லாம் பெருமை பெற்ற அழகி என்பேன்'' என்ற கவிஞர் வாலியின் வர்ணனையைக் கேட்டேன். டயானாவின் ஆடைகள் நியூயோர்க்கில் ஏலம் விடப்பட்டன. கட்டிய ஆடைக்குக் கொட்டிய பணத்தினால் ரொனியின்(இறுதி காதலன்)மனம்கவர்ந்த டயானா, காதலனுடனேயே கல்லறை சென்றுவிட்டார். பாவம் என்று யோசித்தேன்.

எனக்குப் பக்கத்தில இருந்தவர் தம்பி ''நீர் என்னத்தால் பல்லு விளக்கிறனீர்'' என்று கேட்டார். ஏன் பக்கத்தில இருக்கமுடியாமல் இருக்கிறதா என்று கேட்டேன். சீ சீ அப்படி இல்லை என்றார். நான் ஊரில் இருக்கும்போது உமிக்கரி பாவித்தேன். வெளிநாட்டிற்கு வந்தபின் பற்பசை பாவிக்கிறன் என்று சொன்னேன். அதற்கில்லைத்தம்மி, ''ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி்'' என்று சொல்கிறார்களே; நாலும் இரண்டும் என்றால்;  சொல்லு பல்லு இல்லாவிட்டாலும் உறுதியாகுமோ என்பதுதான் என் கேள்வி என்றார். அது அப்படி இல்லை ஐயா, நான்கு என்றால் ''நாலடியார், இரண்டு என்றால் ''திருக்குறள்''  இதைத்தான் நாலும், இரண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள் என்றேன். சின்னவயதில் படித்தது மறந்துவிட்டது என ''மீசையில் மண் முட்டவில்லை'' என்று தாளம் போட்டார். எனது முறை வந்துவிட்டது. பல வருடங்களாக நான் வாடிக்கையாளன் என்பதால் மொடல் சொல்லவில்லை. டயானா சலூன் எனக்கு ஒரு கலைக்கூடமாகத் தென்பட்டது. ஒவ்வொரு சலூன்களிலும் கலையம்சம் இருக்கின்றது அதனால்தான் அறிஞர் அண்ணாத்துரையின் சிலையில் உள்ள கை சென்னையில் ஒரு சிகை அலங்கரிப்பு நிலையத்தைக் காட்டி நிற்கின்றது என்று யாரோ எழுதியவரிகள் எனக்கு ஞாபகம் வந்தது. வந்தவேலை முடிந்தது, வீட்டுக்கு வண்டிலைக் கட்டுகின்றேன். பாத்றூமில் அம்மன் நீராடியிருக்கும் சுடுதண்ணி இருக்காது என்ற நினைப்புடன் நிறுத்தப்பட்டிருந்த கைத்தொலைபேசியை ஓண்பண்ணுகிறன். 48 மிஸ்கால் வந்துகிடந்தது. யாராக இருக்கும் என்று நானா சொல்லவேண்டும். உங்களுக்குத் தெரியாதா என்ன?




Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

6.மொக்கை இல்லாத ரம்பம் (பல்லு இல்லாத வாள்)


என் உயிரிலும் மேலான உடன்பிறப்புக்களுக்கு வணக்கம். நான்தான் சொல்கின்றேன். கருணாநிதி எங்கடா இங்கவந்தவர் என்று நினைத்துவிடாதீர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வணக்கம் சொல்லும் முறையை நான் பார்த்திருக்கின்றேன். எம்ஜிஆர் அவர்கள் என் இரத்தத்தின் இரத்தங்களே என்று தனது மேடைப்பேச்சைத் தொடங்குவார். யாரையாவது தொலைபேசியிலோ, நேரடியாகவோ சந்திக்கநேர்ந்தால் அவர் வணக்கம் ஆண்டவரே என்று சகல கடவுள்களையும் அடக்கக்கூடியதான பொதுச்சொல்லால் வரவேற்பார்.  அதாவது உங்களை இன்று சந்திக்கவைத்த ஆண்டவனுக்கு நன்றி என்பதுபோல். சுகம் விசாரிக்கும்போது பொதுவாக நலமா என்று கேட்கமாட்டார். உங்கள் உடலும் உள்ளமும் நலம்தானா என்று கேட்பார். கிருபானந்த வாரியார் யாரையாவது சந்திக்க நேர்ந்தால் வணக்கம் ஐயனே என்று முருகனுக்கு நன்றி சொல்வார். தேவர் (வெள்ளிக்கிழமை விரதம் என்ற படத்திற்கு பாம்புகளை பழக்கி பெயர் எடுத்த பெருமைக்குரியவர்) அவர்கள் ஒருவரைச் சந்திக்கும்போது வணக்கம் முருகா என்று சொல்லுவார். நடிகர் பிரபு அவர்கள் யாரையாவது படப்பிடிப்பின்போது சந்தித்தால் அவரது உடம்பிற்கு தகுந்தாற்போல ''சாப்பிட்டாச்சா'' என்று கேட்பாராம். இதெல்லாம் கதைக்கு தேவையா என்று நீங்கள் குசுகுசுப்பதால் விடையத்திற்கு வருகின்றேன் ஆண்டவரே

சிங்கப்பூருக்கு ஒருமுறை சென்றிருந்தனான் கமலகாசன் நடித்த படத்தை மனத்தில் கொண்டு அங்குபோய் இறங்கிவிட்டன். விமான நிலையத்திலேயே hotel ஒன்றைப் பதிவுசெய்து வாடகைக் காரில் தங்குமிடத்தை அடைந்துவிட்டன். இந்த இடம்தான் சிங்கப்பூரின் centre point. ஒருவரும் தமிழ் கதைப்பதாகத் தெரியவில்லை. காரை; காடி என்று சொல்கிறார்கள், வார்த்தைகளின் கடைசியில் லா லா என்று கதைப்பது எனக்கு புதிதாக இருந்தது. விருப்பமாகவும் இருந்தது. விடுதியில் இருந்தவருடன் தமிழில் கதைத்தன். அவர் நன்றாகத் தமிழ் பேசும் அன்பர். என் தமிழைப்பார்த்து நீங்கள் மலையாளம் பேசுகிறீர்கள் என்று சொன்னார். இலங்கைத் தமிழ்தான் ஒறிஜினல் என்று இறுமாப்புடன் இருந்த எனக்கு பல சாட்டை அடிகள் கிடைத்தன. சிங்கப்பூர் போகிறன் என்று சொன்னதும் உடைந்த நகைகளை எல்லாம் ஒட்டிக்கொண்டுவரும்படி பிரபஞ்சத்தின் நடுப்புள்ளி தாங்கள்தான் என்று நினைக்கும் யாழ்ப்பாணத்து தமிழ் உறவுகள் தந்துவிட்ட நகைகள் என்னிடம் இருந்தது. அதனால் நான் சிராங்கூன்தெருவுக்கு போகவேண்டி இருந்தது. சிராங்கூன் தெரு என்பது .இலக்கியத் தமிழில் பொற்கொல்லர் தெரு. எனக்கு பயமாகவும் இருந்தது. ஏனென்றால் நான் கோவலன் பொற்கொல்லர் தெருவில் கொலைசெய்யப்பட்டதை நினைத்துவிட்டன். விபரம் தெரிந்தவனுக்கு வேதனைகள் அதிகம். ஒருவாறு விடுதியில் வேலைசெய்த தமிழரின் உதவிகொண்டு சிராங்கூன் தெருவுக்குப் போவதற்கான பஸ்சில் ஏறிவிட்டன்.

பஸ் ஓட்டுனர் ஒரு மலையாளி. கதைப்பதெல்லாம் சிரிப்பதுபோலவே இருந்தது. அவரிடம் விபரம் ஒன்றும் கேட்கமுடியாது என்று அவரது பார்வையில் இருந்து புரிந்துகொண்டன். பஸ்சிற்குள் சுற்றுமுற்றும் பார்த்தேன் இரண்டு இடங்கள் Free யாக இருந்தது. ஒருதமிழ்பெண்ணுக்குப் பக்கத்தில் ஒரு இடம். ஒரு சைனா பெண்ணுக்குப் பக்கத்தில் ஓரு இடம். நான் முகம் செந்தழிப்பாக இருந்த தமிழ்ப் பெண்ணுக்குப் பக்கத்தில் ஒரு மரியாதை கொடுத்து உட்கார்ந்துவிட்டன். அவவும் அங்கும் இங்கும் தெருக்களின் பெயரைப்பார்ப்பதும், ஓட்டுனரைப்பார்ப்பதுமாக ஒரு டென்சனில் இருந்தார். அந்த டென்சன் என்னுடனும் அவரைக் கதைக்கத் தூண்டியிருக்க வேண்டும். என் மூஞ்சியில் தமிழ் என்று ஒட்டியிருப்பதை அவர் நன்றாக உணர்ந்து கொண்டவர்போல் பேச ஆரம்பித்தார். ''நான் சிராங்கூன் தெருவுக்குப் போகிறன், அந்த இடம் வந்ததும்'எனக்கு தெரியப்படுத்துங்கள் என்று வேண்டிக்கொண்டார். ஒன்றும் பிரச்சனை இல்லை நானும் அந்த இடத்திற்குத்தான் போகின்றேன் அமைதியாக இருங்கள் என்று சொன்னேன். ஆனால் அந்த அம்மா என்னை மலையாளி என்று சொல்லாதது எனக்கு சந்தோஷம். இருவருக்கும் இடையில் பரஸ்பரம் கதை தொடங்கியது. அம்மாவுக்கு பென்சன் ஆகும் வயது. எனக்கு அந்த வயதிற்கு இன்னும் 20 வருடங்கள் இருந்தன.

கையில் ஒரு இராமாயணப் புத்தகத்தை வைத்திருந்தார். கதைப்புக்கதம் படிக்கும் பழக்கம் உண்டா என்று கேட்டேன். ஆம் என்று சொன்னவர் ''இருந்தாலும் இராமாயணத்தில் இராமர் சீதையைக் தீக்குளிக்க வைத்தது ஆண் அடிமைச்சமுதாயம் அக்காலத்திலேயே இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது'' என்று சொன்னார். தவிர ''இராமர் வாலியை மறைந்திருந்து கொலை செய்ததும் எனக்குப் பிடிக்கவில்லை'' என்று சொன்னார்'' இலக்குமணன் கீறிய கோட்டை தம் தமிழர்கள் இராமன் கீறியதாக நினைத்து வாழ்கிறார்கள், அவர்களுக்கு இராமாயணம் பற்றி தெளிவுபடுத்த வேண்டும்''  என்றும் சொன்னார். ''இராமரும் சீதையும் காட்டுக்குச் செல்லும் போது அவர்களைவிட அவர்களது உறவினர்களே மிகவும் கவலைப்பட்டதாகவும் சொன்னார். எனக்கு மலேசியாவின் அவர்களது மொழி வழக்கில்  பக்கத்தில் இருந்த அம்மா ஒரு ''மொக்கை இல்லாத ரம்பம் (பல்லு இல்லாத வாள்)மணிக்கணக்கில் அறுக்கிறது'' என்று சொல்லத் தோன்றியது. பஸ் ஓட்டுனரின் மனைவியின் தொலைபேசி ஒன்று அவருக்கு வந்ததால் பஸ்சை மிகவும் வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தார். என்னதான் அவ சொன்னாவோ தெரியவில்லை. பிறகுதான் தெரிந்தது மனைவியின் தங்கை வீட்டுக்கு விடுமுறையில் வந்திருப்பதாகத் தகவல் வந்தது என்று.

பஸ் றொச்சோ வீதிக்கு வந்துவிட்டது. அது கடந்தால் கபலக்றோட். இதை உச்சரிக்கத்தெரியாத இந்திய தொழிலாளர்கள் புடலங்காய்வீதி என்று சொல்வார்கள் என்று சொல்லி அந்த அம்மா சிரித்தார். நீங்கள் பிறந்தஇடம் சிங்கப்பூர்தானா என்று கேட்டேன். தனது தாய்நாடு மலேசியா என்று பதிலளித்தார். எனக்கு அப்போது மலேசியாவில் ஒருவரையும் தெரியாது. உங்கள் ஊர் எது என்று பதிலுக்கு அவரும்கேட்டார். நான் இலங்கையில் யாழ்ப்பாணத் தமிழன் என்றேன். உதட்டுக்குள் அந்த அம்மாவுக்கு ''ஓ நீங்க இடியப்பமா'' என்ற ஒருசிரிப்பு. இது எனக்கு சிங்களவன் தமிழனைப்பார்த்து ''பனங்கொட்டை'' என்று சொல்வதை நினைப்பூட்டியது. இவளவு அன்னியோன்னியமாக நான் மரியாதையுடன் கதைத்தும் அந்த அம்மா எனக்கும் தனக்கும் இடையில் வைத்த மெல்லிய hand bag ஐ இதுவரையில் எடுக்கவில்லை. தன்னைச்சுற்றி பாதுகாப்பிற்கு ஐந்தாறு ஆமிக்காரர்கள் நிற்பதுபோலவே அந்த hand bag ஐ அவர் கருதிக் கொள்கின்றார் என்பதும் இப்போதும் தன் கணவன்பெயரைத் தன்வாயால் சொல்லக்கூடாது என்ற கலாச்சாரத்தில் வாழ்கிறார் என்பது எனக்கு விளங்கியது.

அன்று வியாளக்கிழமை; தான் ஒரு ஆசிரியை என்றும், மலேசியாவில் பள்ளிமுடித்து அவரச அலுவலாக உடையும் மாற்றாமல் வந்துவிட்டதாகக்கூறினார். ஒரு விடுதியில் தங்கவேண்டும் என்றும் சொன்னார். ஆசிரியர் என்கின்றறிர்கள் ''பற்றிக'' உடையில் இருக்கின்றீர்கள் என்று கேட்டேன். ''மலேசியாவில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் அரச சேவையில் உள்ளவர்கள் 2007 ஆம் ஆண்டிற்குப்பின் கட்டாயமாக ''பற்றிக்'' உடை அணியவேண்டும் என்பது அரச கட்டளை என்று சொன்னார். நான் காரணம் கேட்டதற்கு, பற்றிக் தொழிலை முன்னேற்றுவதற்காகவும், மலேசியாவில் ''கிளாந்தன்'' என்னும் இடத்தில் இருக்கும் ''பற்றிக்'' தொழிற்சாலையை நட்டத்தில் போகாமல் பாதுகாப்பதற்காகவும் இந்த ஏற்பாடு என்று குறிப்பிட்டார். ஆனால் நிரந்தர உடை இருப்பவர்களாகிய போலீஸ், டாக்டர், தாதிமார் ஆகியோர் அணியத்தேவையில்லை என்றும் குறிப்பிட்டார். பஸ் தரிப்பிடத்தை அடைந்தது. அம்மாவும் மறக்காமல் தன் hand bag ஐ எடுத்துக்கொண்டு இறங்கினார். இரவு என்ன சாப்பிடப் போகிறறிர்கள் என்று கேட்டார். நானும் ஒரு styleஆக ''நாசிக்கொறிங்'' என்று சொன்னேன். அதற்கும் வைரமுத்துவின் சகோதரிபோல் ஒரு உதட்டைச் சுழித்த சிரிப்பு. என்ன வென்று கேட்டேன். ''நாசிக்கொறிங்'' என்றால் தமிழில் சோற்றுப்பிரட்டல் என்று சொல்லி சிரித்தார். இதைத்தானா வெள்ளைக்காரர்கள் ஐரொப்பாவில் ''ஏசியன் ஸ்பெஷல்'' என்று முள்ளுக்கரண்டியால் சாப்பிடுகிறார்கள் என்று எனக்கும் சிரிப்பு வந்தது. நான் பக்கத்துத் தெருவில் உள்ள 7th story hotel இல் ஒட்டுவதற்காகக் கொண்டுசென்ற நகைகளுக்கான பாதுகாப்பிற்காகத் தங்கினேன்.

பூட்டிய அறைக்கதவின் கீழ்ப்புறுமாகப் பல விளம்பரத் துண்டுப்பிரசுரங்கள் என் அறையின் தரையில் வந்து வந்து விழுந்ததை உணர்ந்தவனாக அசந்து தூங்கிவிட்டன். நள்ளிரவு 12 மணியிருக்கும் என் அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. தூக்கத்தில திறந்து பார்த்தேன் அந்த அம்மா நின்றுகொண்டிருந்தார். வாடிக்கையாளர் வருகை இடாப்பில் தன் உறவினரைத் தேடுகையில் என்பெயரைக் கண்டதாகவும், அதனால் என்னைப்பார்க்க வந்ததாகவும் குறிப்பிட்டார். வாருங்கள்  உட்காருங்கள் என்று நான் சொல்லவிரும்பவில்லை. ஏனென்றால் எனக்கு hand bag நினைப்பு வந்தது. ''தம்பி இங்கு இப்படித்தான் அறைகளுக்குள் கண்ட கண்ட சிவப்புலைற் ஏரியா துண்டுகள் எல்லாம் வந்து விழும். அதுகளை பார்த்து கெட்ட பழக்கங்கள் வரப்பார்க்கும், கவனமாக இருங்க தம்பி என்றுவிட்டுப் போனார்கள். எனக்கு ஒரு மலேசியத்தாயின் மடியில் உறங்குவதுபோல் சந்தோஷமாக நித்திரை வந்தது.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

5.பாரதியார் ஆசுப்பத்திரியில் பிறந்தார் !


எனக்கு ஒக்ஸ்வெர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்று அதனை ஆங்கிலத்தில் எழுதத் தெரியாத காலத்தில் இருந்தே ஒரு ஆசை. சக மாணவர்கள் என்னைப்பார்த்துச் சிரிப்பார்கள். எங்கள் கிராமத்திற்கு ஒருகாலத்தில் மதம் பரப்பும் பாதிரியார்தான் எனக்கு இந்த ஆசையை தூண்டி விட்டவர். அவருடைய போதனைகளையும் விரும்பிச் சென்று கேட்பன். அவர்தான் எனக்கு யேசுநாதர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்றும் சொல்லித்தந்தவர். இதைக் கருத்தில்கொண்டு; பாடசாலையில் பாரதியார் எங்குபிறந்தார் என்று ரீச்சர் கேள்வி கேட்க, நான் ஆசுப்பத்திரியில் என்று சொல்லிப்போட்டன். இதுதான் அந்த சக மாணவர்களின் சிரிப்பிற்கு காரணம். ஆங்கிலச் ரீச்சர் what is your name என்று ஒருவரைப்பார்த்துக் கேட்க that is a தவராஜா என்று பதில் சொன்னவரும் என்னைப்பார்த்துச் சிரிக்கின்றார். அப்போது நாங்கள் 5ம் தரம் படிக்கிறம்.

 கடைசியில் எனக்கு oxford பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் அங்குபடித்தவர்களிடம் படிக்கும்வாய்ப்பு எனக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. இங்குதான் இலங்கையின் பிரதமராக இருந்து தன் மனைவி சிறிமாவோ வால் புத்தபிக்குவை விட்டுப் போட்டுத்தள்ளப்பட்ட பண்டாரநாயக்காவும் படித்தார். அங்குதான் அடங்காத்தமிழன் சுந்தரலிங்கமும் படித்தார். சுந்தரலிங்கம் ஒரு கணிதமேதை. எலிசபெத் மகாராணியாருக்கு கணிதபாடம் சொல்லிக்கொடுத்த பெருமை அவரையேசாரும். மகாராணியாரின் 60வது பிறந்ததின விழாவிற்கு சுந்தரலிங்கம் தனிப்பட்ட அழைப்பின்பெயரில் சென்றிருந்தார். மகாராணியாரை வாழ்த்துவுதற்காக மேடைக்குச் சென்றபோது எல்லோருக்கும் கையுறையுடன் கைகுலுக்கி நன்றி தெரிவித்த மகாராணியார் சுந்தரலிங்கத்தைக் கண்டதும் கையுறையைக் கழட்டிவிட்டு சுந்தரலிங்கத்திற்குக் கைகுலுக்கினார். சபையோர்கள் அதிர்ந்துவிட்டனர். மகாராணியார் ''இவர்தான் என் குரு, கணிதமேதை'' என்று கூறி கலாச்சார முத்தமும் கொடுத்து ஒரு தமிழனை அன்று ஆங்கிலதேசம் வரவேற்றது.

பண்டாரநாயக்கா பல்கலைக்கழகத்தில் நடந்து சென்றபோது இலங்கையின் பிரதமருக்கான நடை என்று ஆங்கிலேயர் சொன்னதுபோல் அவரும் பிரதமமந்திரி ஆகிவிட்டார். பண்டா- செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து 24 மணிநேரத்தில் தனிச்சிங்களமே இலங்கையின் தேசியமொழி என்று சட்டம் இயற்றினார். தமிழர்கள் இதை எதிர்த்துக் காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் இருந்தபோது தென்னிலங்கை முழுக்கத் தமிழர்களை வெட்டிக் குவித்தார்கள். இராணுவம் கைகட்டி வேடிக்கை பார்த்தது. இரண்டு காதுகளும் குத்தியிருப்பவர்கள் தமிழர்கள் என்று இனம்கண்டு அடித்தார்கள். 1958ம் ஆண்டு தமிழர் சிங்களவருக்கிடையில் பாரிய அளவிலான விரிசல்கள் உண்டாகின்.

பாணந்துறை என்னுமிடத்தில் சிவன்கோவிலில் பூஜை செய்துகொண்டிருந்த குருக்களைப் போலீசார் பலவந்தமாகப்பிடித்து சாக்கில் கட்டி பெற்ரோல் ஊற்றி எரித்து ஜீப்பில் கட்டி காலிவீதியால் இழுத்துக்கொண்டு போனார்கள். போத்துக்கீசர் காலத்திற்குப்பின் இரண்டாம் முறையாக இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டது. இந்தக் குருக்களின் தம்பியார்தான் சுந்தரக் குருக்கள். குடும்பத்துடன் யாழ்ப்பாணம் வந்துவிட்டார்கள். சுந்தரக் குருக்களை அறிமுகமான அனைவரும் ஐயர் என்று அழைத்துவந்தனர். ஐயர் ஒரு ஆங்கில அறிஞன். மாணவர்களுக்கான ஆங்கில தனியார் வகுப்புகளை நடாத்தி வந்தார். அவரிடம் நானும் தவராஜாவும் வயது வந்தபின்னர் ஆங்கிலம் படித்தோம். அந்த ஐயர் எவரிடமும் காசுவாங்கமாட்டார். ஒவ்வொரு வகுப்பிற்கும் மாணவர்கள் செல்லும்போது அவர்களால் இயன்ற சில்லறைக் காசுகளை தட்சணையாக அதற்கென இருக்கும் உண்டியலில் போடுவது வழக்கம். ஐயர் அடிக்கடி சொல்லும் வசனம். தமழீழம் கிடைத்தபின்னர் எல்லோருக்குமே இலவசவகுப்புகள் நடாத்துவதாகச் சொல்லிக்கொண்டிருப்பார். அவரிடம் ஆங்கிலலம் படித்தவர்கள் ஏராளம் பேர் இன்று வெளிநாடுகளில் இருக்கின்றார்கள்.

that is a தவராஜா என்று சொன்னவர்தான் பின்நாளில் ஒரு பெரிய வக்கீலானார். ஐயர் தட்சனை வாங்கி படிப்பித்ததுபோல் தவராஜா ஏழை எளியவர்களுக்கு பணம்வாங்காமலே வாதிட்டு வெற்றி பெற்றுக்கொடுத்தார். லண்டனில் இருந்து தவராஜாவைச் சந்திப்பதற்காகவே நான் oxford செல்லும் பஸ்சில் இப்போது பிரயாணித்துக்கொண்டு இருக்கின்றேன். தவராஜா அந்தப் பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார். தவராஜா பெரும்பான்மைத்தமிழர்கள் செய்ததுபோல் தனது குடும்பத்தையும் லண்டனுக்கு அழைத்து நின்மதி இழக்கவில்லை. அவரது குடும்பம் சொந்தக் கிராமத்திலேயே தவராசாவைத் தெய்வமாக மதித்து வாழ்ந்து வருகின்றனர். தவராஜா இப்போது அடங்காத்தழிழன் சுந்தரலிங்கம் இருந்த விடுதியில் அவர் இருந்த அறையிலேயே தங்குகிறார்.

அடிக்கடி நான் தவராஜாவைக் காண்பதால் நாங்கள் சந்திப்பதில் ஒரு த்றில் இல்லை அதனால் தவராஜா ஏதோ புதிய திட்டம் போட்டிருக்கிறாராம் என்றுதான் இன்று செல்கின்றன். அதுதான் அவருடைய அயர்லாந்து செல்லும் திட்டம். சிவமயம் போட்டுத் தொடங்காமல் டப்ளின் தெருவில் நாங்கள் இப்போது நிற்பதில் இருந்து தொடர்கின்றேன். தவராஜாவின் oxford நண்பன் ரவி குடும்பமாக டப்ளினில் வாழ்கின்றான். முகவரியைக் கையில் கொண்டு ஒரு பஸ் எடுத்து அங்கு சென்றோம். குறிப்பிட்ட இலக்கில் நாங்கள் இறங்குவுதற்குப் பதிலாக இந்த அழகிய நகரத்தின் மையப்பகுதியில் இறங்கிவிட்டோம். இலங்கைத் தமிழர்களைக் காண்பது பாயாசத்தில் முந்திரியவத்தல் தேடுவதுபோல் கடியமாக இருக்கிறது. நடந்தே செல்ல ஆரம்பித்தோம். உயர்ந்த கட்டிடங்களும், ஒரேமாதிரியான தெருக்களும் இலக்கைப் பிடிப்பதற்கு சிக்கலாக இருக்கின்றன. தவராஜாவின் முகத்தில் ஒரு சந்தோஷம். என்ன மச்சான் என்றேன். வீட்டைக் கண்டுவிட்டேன் என்றார். எப்படி என்று கேட்டேன். அதோ தெரிகிறதே ஒரு வீடு. அதன் பல்கனியைப்பார். இலங்கைத் தமிழர்கள் எங்கு சென்றாலும் கொடிகட்டித்தான் உடுப்புகள் காயப்போடுவார்கள். அந்தப் பல்கனியில் கொடிகட்டி உடுப்புக் காயப்போட்டிருந்தது எனக்கும் தெளிவாகத் தெரிந்தது.  இருவரும் ரவி வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். உலகத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என்று யாரோ சொன்னதாகக் கேள்விப்பட்டேன், கொடிகட்டி மானத்தைப் பறக்கவிடுகிறார்கள் போல் எனக்கு விளங்கிவிட்ட்து. உங்களுக்கு என்ன விளங்குகிறது.



Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

4.எனக்கு அந்தக் கெட்டபழக்கம் மட்டும் இல்லை


இந்த இலக்கங்களைப்பற்றி சேதுராமன் ஆராட்சி செய்து வெளியிடும்வரை அதைப்பற்றி ஒருவரும் சிந்திக்காமல் இருந்துவிட்டம். தமிழ்ச் சோதிடர்கள் நமக்கு சாத்திரம்பார்த்து பிறந்த குறிப்புககள் கணிக்கும்போது பூமியை இருந்த இடத்தில் வைத்துக் கணித்து விட்டார்கள். அதனால் சாத்திரங்கள் பிழையானவை என்று பரவலாகப் பேசப்பட்டாலும் திருமணத்திற்கு பெண்ணின் பொய்க் குறிப்பும், ஆணின் பொய்க்குறிப்பும் உண்மையில் பொருந்துதா என்று பார்த்து பொய்யிற்கும் பொய்யிற்கும் பொருத்தம் என்று உண்மையில் கல்யாணம் பண்ணிவைக்கினம். இதுவும் ஒரு முறைக்குச் சரிதான் கணிதத்தில் மைனஸ் ( - ) ஐ மைனஸ் ஆல் பெருக்கிளால் சக என்றுதானே எடுக்கிறம். நான் இதைப்பற்றிக் கதைக்க வரவில்லை. என் நிலைக்கண்ணாடி 3 கொஞ்சம் தமிழ்ப்படம் மாதிரி நீண்டுவிட்டது ஆங்கிலப் படம்மாதிரி எடுத்தால் நல்லது என்று நண்பர்கள் கதைக்கினம். எனக்கும் இந்த 3 க்கும் சரிவராது. என் பிறந்த எண் 3 உடன் ஒத்துவராது போல.

முகநூல் ஆரம்பத்தில் சிறியவயதினர்தான் திறந்தார்கள். அப்போ தாய் தகப்பன் நல்ல ஏச்சுக்கொடுத்து திறக்வேண்டாம், திறந்தால் பிள்ளைகள் கெட்டுவிடும் என்று சொன்னார்கள். பொடி பொட்டையள் ஏதோ ஒளிவு மறைவா திறந்து காலத்தை ஓட்டுதுகள். இப்ப என்னவெண்றால் முகநூல்  திறந்தால் கெட்டுப்போவினம் என்று சொன்ன; தாய் தகப்பனே தங்களுக்கு வேறு வேறாகத்திறந்து பாத்றூம் போகும்போதுகூட கணனி கொண்டுபோகிற அளவுக்கு பிசி ஆகிவிட்டினம். காலை வணக்கம், மாலைவணக்கம் ஒழுங்காகச் சொல்லி பாட்டும் போடுபவர்கள் இருக்கிறார்கள். காலை எழுந்ததும் விரும்பியவர்களின் தரிசனம் இல்லாவிட்டால் ஆபீஸ் கட் அடிப்பவர்களும் இருக்கின்றார்கள். முகநூலில் வந்து வெளிப்படையாக அவர் பதிவுகளில் ஒன்றிற்கு விருப்பம்போட்டு  வரவைத் தெரிவித்து இன்பொக்சுக்குள் மணிக்கணக்காக இருப்பவர்கள் இருக்கிறார்கள். நான் நிமிடக்கணக்கில்தான் இருந்திருக்கின்றேன். உண்மை சொல்வதில் எந்தப் பிரச்சனை வந்தாலும் அதைத்தாங்கும் சக்தியை நிட்சயம் கடவுள் நமக்குக் கொடுப்பார். கவிஞர் கண்ணதாசனை 1958ம் ஆண்டு ஒரு பத்திரிகை நிருபர் பேட்டி எடுத்தார். பேட்டி எடுத்தவர் அரசியலில் மற்றப்பாட்டியைச் சேர்ந்தவர். இதன்மூலம் கண்ணதாசனை மடக்கவேண்டும் என்பதே நிருபரின் விருப்பமாக இருந்தது. கேள்வி பதில் நடந்துகொண்டிருந்தது. திடீரென்று கண்ணதாசனைப்பார்த்து நிருபர் கேட்டார். ''நீங்கள் உண்மை சொல்லுவவதாக அறிந்தேன் நான் ஒரு கேள்வி கேட்பேன் சொல்ல முமுடியுமா'' என்றார். கண்ணதாசன் திரித்துக்கொண்டெ கேளுங்கள் என்றார். நிருபர் கேட்டார் ''உங்கள் கெட்ட பழக்கங்களை ஒவ்வொன்றாக மக்களுக்குச் சொல்ல முடியுமா'' என்று கேட்டார். இந்தக் கேள்வியைக்  கேட்டுவிட்டு குறிப்பெடுக்க ஆயத்தமானார். கண்ணதாசன் சொன்னார் ''என் அப்பாவுக்கு வெற்றிலை போடும் கெட்டபழக்கம் மட்டும் இருந்தது, எனக்கு அந்தக் கெட்டபழக்கம் மட்டும் இல்லை'' என்று பதிலளித்தார். நிருபர் பேட்டியை முடித்து வீடு திரும்பினார். இதை கண்ணதாசன் தன் வனவாசம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

நானும் எனக்கென்றொரு பக்கத்தை திறந்தன். அதில் wall (மதில் அல்லது சுவுர்) என்ற ஒன்றில் எல்லோரும் எழுதலாம் என்று எனக்கு கனகாலத்திற்குப் பின்னர்தான் தெரியும். அதனால் பலர் என் அனுமதி இல்லாமலே கண்டதையும் கடியதையும் போட்டார்கள். எனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. விளம்பரம் ஒட்டாதே என்று என்மதிலில் ஒரு மூலையில் தமிழில் எழுதிவிட்டன். தமிழ் வாசிக்கத்தெரியாத ரமிழர் பலர் இப்பவும் என் சுவரில் எழுதுகிறார்கள். அதன் பின்னர்தான் தெரிந்தது ஊரில் மதிலில் எழுதியவர்களும் வெளிநாட்டிற்கு வந்துவிட்டார்கள் என்று. நானும் எங்கள் ஊர் மதிலில் இரவில் எழுதியிருக்கிறன். நீங்கள் நினைப்பதுபோல் தப்பாக என்றும் எழுதவில்லை. இலங்கை அரசாஙகம் தமிழருக்கு எதிராகப் போர்க்கொடி துர்க்கிய காலம். தமிழ்மாணவர் பேரவை அமைக்கப்பட்ட காலம். அப்போதான் நான் பக்கத்து வாத்தியர்ரவீட்டு மதிலில் ''உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு'' என்று எழுதினேன். அப்போது ஊர் நாய்கள் சத்தம்போடும்.

நாய் என்றால் ஐரொப்பாவில் பிறக்கவேண்டும் என்பார்கள். ஒரு வெள்ளைக்காரன் நான் சாப்பிடும் அதே இறைச்சி உணவை உணவுவிடுதியில் வாங்கிப் போட்டதை நான் பார்த்திருக்கின்றேன். ஒரு வெள்ளையன் தன் நாயுடன் தெருவில் நடப்பதை ஒரு கம்பீரத்தோற்றமாக நினைக்கின்றான். பக்கத்து வீட்டு 12 வயது நிரம்பிய வெள்ளைக்காரப் பொடியன் எனனைப் பார்த்து போகும்போது வரும்போது எல்லாம் வணக்கம் சொல்லிவிட்டு போவான். அவன் நான் அந்த இடத்தில் குடியேறிய பின்னர்தான் பிறந்தவன். இன்றுகாலை என்னைக் கண்டதும் கிட்ட ஓடிவந்து பெரிதாக வணக்கம் சொன்னான். மிகவும் என்றுமில்லாதவாறு சந்தோஷமாகவும் இருந்தான். நானும் பதிலுக்கு வணக்கம் சொல்லிவிட்டு விடைபெற ஆயத்தமானேன். அவன் என்னைப்பார்த்து ''நீங்கள் இன்று என்னை காலையில் பார்க்கவில்லையா, பார்க்கவில்லையா என்று ஆவலாகவும், ஒருவித கவலையாகவும் கேட்டான். நான் மன்னித்துக்கொள் இன்று என்ன புதினம் ஏன் அப்படி கேட்கிறாய் என்று கேட்டேன். அவன் சொன்னான் ''இன்று எங்கள் அப்பா எங்கள் நாளை ஒரு மணித்தியாலம் வெளியில் கொண்டுபோகத்தந்தவர்'' அதுதான் எனக்கு இன்று சந்தோஷம் என்றான். நீங்கள் பார்க்காததும் எனக்கு கவலை என்றும் சொன்னான். நான் சொன்னேன் இடுத்தமுறை நீ நாய்கொண்டுபோகும்போது எனக்கு சொல்லு என்றேன். அவன் சொன்னான் ''இந்தமுறை கணக்குப் பாடத்திற்கு அதிக புள்ளிகள் எடுத்தபடியால்தான் நாயை வெளியில் கொண்டுபோகத்தந்தவர். அடுத்தமுறை சமூகவியல் பாடத்திற்கு அதிக புள்ளிகள் எடுத்தால்தான்அப்பா நாய் தருவுதாகக் கூறியிருக்கின்றார். அந்தப்பாடம் எனக்குக் கஷ்டமானது என்றும், தெருவால் நாய் கொண்டு செல்லும் கம்பீரத் தொற்றத்தையும் இழந்தவனாகக் கவலைப்பட்டான். நிட்சயமாக நாய் உனக்கு கிடைக்கும் நன்றாகப் படி என்று சொன்னேன். நன்றி கூறி விடைபெற்றான். நம்ப பிள்ளைகளும் இருக்கே, தாய் தகப்பனை அதை வாங்கித்தா, இதை வாங்கித்தா என்று நாயாகப் படுத்துதுகள்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

3.ஒரு விமானப் பயணம்


அன்று இத்தாலி ரோம் நகர விமான நிலையம் என்றுமில்லாதவாறு களைகட்டி இருந்தது. அதற்குக் காரணம் சிறிலங்கா சென்ற பாப்பரசர் தன் பட்டாளங்கள் புடைசூழ நாடு திரும்புவதுதான். நாடுதிரும்பும்போதும் பாப்பரசர் மண்ணைவணங்கி மக்களைப் பார்ப்பது வழக்கம். இதைப் பார்த்துத்தான் மத்தியகிழக்கில் இருந்து நாடுதிரும்பிய மகிந்தா கட்டுநாயக்கா மண்ணை முத்தமிட்டாரோ என்றும் சிலர் நையாண்டி மேளம் அடிக்கின்றார்கள் அதை விடுவம்.ஒரு கதையை சொல்ல வருவம் என்றால் ஒரே தடங்கலாக இருக்கிறது. சொல்லும் வழியில் வந்த சில சொற்கள் என்னை சிந்திக்க வைக்கின்றன. கட்டுநாயக்கா என்றதும் ஒரு ஞாபகம் வருகிறது. இந்த விமான நிலையம் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்குவந்தால் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் என்றும்,  சுதந்திரக்கட்சி ஆட்சிக்கு வந்தால் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் என்றும் மாறி மாறி பெயர் மாற்றப்படும். இதைப்பார்த்த தமிழ் தெரிந்த ஒரு வெள்ளைக்காரன் கட்டுநாயக்கா, பண்டாரநாயக்காவுக்கு என்ன முறை என்று ஒருவரை கேட்டானாம.  பதில் சொல்லாத இலங்கையரைப்பார்த்து ஒரு சிரிப்புடன் வெள்ளைக்காரன் ''விடிய விடிய இராமர்கதை விடிந்தால் சீதை ராமனுக்கு குஞ்சியாத்தை என்றுவிட்டு சில்லறை விலையில் வாங்கிய சிறிய சவப்பெட்டி (சிகரட்) ஒன்றை பற்றவைத்துக்கொண்டு இடத்தைவிட்டு நகர்ந்தான். இந்த ரோம் நகரத்து விமானநிலையத்தில்தான் ஒரு அழகான பெண் தமிழ் முகத்துக்கு ஆங்கிலச் சாயம்பூசிய உடையுடன் செக்கின் முடிந்து விமானத்திற்காகக்க காத்திருந்தாள். கலங்கிய கண், களைத்துப்போன முகம், சுடுகாட்டில் இருந்து வீடுதிருமபும்போது இருக்கின்ற மனநிலை மாதிரி உணர்வுகள், கிட்டத்தட்ட அவள் உயிருடன் இருக்கின்றாள் என்பதற்குச் சாட்சியாக காதிற்குள் ''இயர்fபோன்'' வைத்து சோகப்பாடல்களைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டிருந்தாள். ஒரு காலத்தில் இப்படி காதிற்குள் வைத்திருந்தால் செவிட்டு மெசின் என்று நினைத்தவர்கள்கூட இந்த உலகத்தில் இன்றும் இருக்கிறார்கள். நான் ஏன் ஆங்கிலச் சொற்களை எல்லாம் தமிழில் எழுதுகிறேன் என்றால் ஒரு சுவாரஷ்யத்திற்காகத்தான். ஆனால் வாசிப்பவர்கள் இவர் ஆங்கிலத்தில் அரைவேக்காடாக்கும் என்று நினைப்பதும் என் செவி அலைவரிசைக்குள்ளும் விழுகிறது.  அந்தப் பெண்ணின் பெயர் வாநதி. நதி என்றதும் கங்கையுடன் சில கற்பனைக் காட்சிகளை உருவாக்கி விடாதீர்கள்.

வானதி தன்னுடன் பிரயாணம் செய்பவர்களை ஒருமுறை நோட்டம் விட்டுப்பார்த்தாள். கூட்டத்திகுள் காவி உடை அணிந்த ஒருதுறவியும், கவுண் அணிந்த ஒரு போதகரும் இருந்தார்கள். மற்றைய பிரயாணிகளைவிட வித்தியாசமான உடையில் இருந்ததால் வானதியின் கண்கள் சற்று நேரம் இவர்களில் நிலைத்தது.மற்றவர்கள் பேசும் பாஷைகள் அவளுக்குப் புரியவேயில்லை. பத்துக்கட்டளைகளை வேண்டுவதற்கு மலைக்குச் சென்ற மோசேஸ் திரும்பி வரும்போது கடவுள் சாபத்தால் ஒருவர் பேசும்மொழி மற்றவருக்கு விளங்கக்கூடாது என்பதைக் கண்ட நினைப்புத்தான் வானதிக்கும் வந்தது. துறவி பிரேமானந்தாவின் கதையைப் பத்திரிகையில் படித்திருந்த வானதி காவித்துறவிக்குப் பக்கத்தில் தனக்கு இருக்கை கிடைக்கக்கூடாது என்பதை இன்னொரு காவித்துறவியான சாயிபாபாவிடம் பிரார்த்திக்குவிட்டு பேசாமல் இருந்துவிட்டாள். போதகரைப் பார்த்ததும் வானதி தான் சிறியவயதாக இருந்தபோது தினகரன் பத்திரிகையின் பின்பக்கத்தில் வந்த ஒரு தலைப்புச் செய்தியை வாசித்தது நினைப்பிற்கு வந்தது. அதாவது ''பாதிரியார் வீட்டில் பாவை பாழ்படுத்தப்பட்டாள், பாதிரியார் தலைமறைவு, போலீசார் வலை'' இதுதான் அந்தச் செய்தி. உள்ளுக்குப் படித்துப் பார்க்கும்போதுதான் விளக்கம் வேறுமாதிரி இருக்கும். ''பாதிரியார், வீட்டில் இல்லாத சமயம்,ஒருபெண்ணைக் கடத்திவந்து அவரது வீட்டை உடைத்து உள்ளே சென்று அவளைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக பின்னர் போலிசாரின் விசாரணையில் தெரியவந்தது'' என்று செய்தி இருக்கும். பத்திரிகை என்றால் பத்துவிடையத்தைத் திரித்து எழுதுவதுதான் என்பது பலரது அவிப்பிராயம். சில பத்திரிகைகள் ஒரு விடையத்தைப் பத்தாக்கியும் எழுதுவார்கள். நான் ''சுவிஸ்தமிழர்'' என்ற பத்திரிகை நடாத்தும்போது உள்ளதை உள்ளபடி போட்டன். நள்ளிரவு 12 மணிக்கு ஒரு தொலைபேசி வந்தது. ''இப்படி எல்லாம் நியூஸ போட்டா உன்னை போடவேண்டி இருக்கும்'' என்று. எனக்கு ஆயுள் கெட்டி என்பதால் பத்திரிகை அன்றுடன் வெளிவரவில்லை. அது போகட்டும்!

வானதி அந்த வெள்ளைக்கார போதகருடன்  நம்நாட்டைச் சேர்ந்த ஒருவர் சரளமாக இத்தாலிப் பாஷையில் உரையாடிக்கொண்டிருப்பதைக் ண்டாள்.  அவர் ஒரு தமிழர். பல காலங்களுக்குமுதல் இத்தாலிக்கு அகதியாகவந்து சேர்ந்தவர். அவரதுபெயர் சிவலிங்கம். இவரது கதையைச் சொன்னால் தயாரிப்பாளர் சேரன் போன்றவர்கள் திரைப்படமே எடுத்துவிடுவார்கள். இருந்தாலும் சுருக்கமாகச் சொல்கிறன். சிவலிங்கம் பாடசாலைப் படிப்பு முடித்து கிராமத்தில் தகப்பனுடன் புகையிலைத் தோட்டம் செய்த காலம். அதாவது ''போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று சிறிலங்கா ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜயவர்த்தனா தமிழருக்கு எதிரான துவேஷத்தை அரங்கேற்றியகாலம். சிவலிங்கத்திற்கு முன்வீட்டுப் பெட்டையில் ஒரு கண். அடைந்தால் மகாதேவி எல்லது மரணம் என்ற முனைப்புடன் திரிந்தவர். தன் நண்பனைவிட்டு காதல் கடிதம் எழுதி, அதைக்  கொடுக்கப் பயந்து பயந்து சட்டைப் பைக்குள் கொண்டுதிரிந்தவர். அவரது தாயார் சலவைத் தொழிலாளிக்கு ஊத்தை உடைகளைக் கொடுக்கும்போது இவரது சட்டையும் (ஷேர்ட்) சலவைத்தொழிலாளி வீட்டுக்குச் சென்றுவிட்டது. தனக்குவரும் உடுப்புக்களில் இருக்கும் பைகளுக்குள் காசுகீசு இருக்கும் என்று சலவைத்தொழிலாளி பார்க்கும்போது சிவலிங்கத்தின் காதல் கடிதம் சிக்கியது. வாசிக்கத்தெரியாத தொழிலாளி அந்தக் கடிதத்தைக் கொண்டுவந்து சிவலிங்கத்தின் தகப்பனிடம் கொடுத்து விசுவாசமாக நடந்துகொண்டார்.

இதைப்பார்த்த சிவலிங்கத்தின் தகப்பனார் சிவலிங்கத்தை உடனடியாக ஒரு ஏயென்சியைப்பிடித்து இத்தாலிக்கு அனுப்பி அந்தக் காதலை காவியமாக்கி மகிழ்ந்தார். இத்தாலிக்குவந்த சிவலிங்கம் வேலைதேடிச் சென்றபோதுதான் பக்கத்தில் இருக்கும் போதகரைச் சந்தித்தார். இரக்க குணமுள்ள இந்தப் போதகர் சிவலிங்கத்தைத் தன்வீட்டில் வேலைக்கு அமர்த்தினார். சிவலிங்கத்திற்கு போதகருக்குச் சமைப்பதும் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதும் தொழிலாக இருந்தது. இத்தாலிச் சாப்பாடுகள் எல்லாவற்றையும் யாழ்ப்பாணப் பாணியில் சிவலிங்கம் சமைக்கத்தொடங்கினார். ஒருநாள் சோடா மூடியால் தேங்காய் துருவிப் பிழிந்து ஸ்ப்பக்கற்றிக்கு சோஸ் செய்து போதகருக்கு சமைத்துக்கொடுத்தார். போதகருக்கு மிகவும் பிடித்திருந்ததால் சிவலிங்கத்தைத் தன்னுடன் வைத்திருக்கப்போவதாக முடிவெடுத்து நிரந்தர விசாவும் வாங்கிக் கொடுத்தார். நன்றிக்கடனுக்கு சிவலிங்கம் போதகரின் மதத்திற்கு மாறினார். பின்னர் போதகர் சிவலிங்கத்திற்கு ஒரு தமிழ்ப்பெண்ணை பார்சலில் வரவழைத்து திருமணமும் செய்துவைத்தார்.

அறிஞர் அண்ணாத்துரை சொன்ன வசனம் சிவலிங்கத்திற்கு நினைப்பு வந்தது. ''நீ எந்த நாட்டில் இருக்கின்றாயோ அந்த நாட்டிற்கு விசுவாசமாக இரு'' என்பதுதான். இத்தாலி நாட்டுடன் இரண்டறக்கலந்த சிவலிங்கம் தனக்குப் பிறந்த மகளுக்கு லசான்யா என்று பெயரைவைத்து மகிழ்ந்தார். போதகர் மதசம்பந்தமான கூட்டங்களுக்குப் போகும்போதெல்லாம் சிவலிங்கத்தை அழைத்துச்செல்வது வழக்கம். அந்தவகையில்தான் இன்று சிவலிங்கம் போதகருடன் சுவீடன் நாட்டிற்குப் பயணம் செல்கின்றார். சொல்ல மறந்துவிட்டன் இப்போ சிவலிங்கத்திற்குப் பெயர் ஈசாக். ஈசாக் என்பது ஆபிரகாம் சாராள் தம்பதிகளின் மகன். இறைநம்பிக்கை உள்ளவன். விமானம் புறப்படத்தயாரானது. பிரயாணிகள் விமானத்தில் ஏற ஆயத்தமானார்கள். வரிசையில் நின்ற ஈசாக் வானதியையும் இது தமிழாக இருக்குமோ என்ற ஐயத்துடன் நடந்து நடந்து இடைக்கிடை பார்த்தார். ஈசாக் பார்ப்பதைக் கண்ணுற்ற வானதி யாழ்ப்பாணத்தில் தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றவர்கள் வணக்கம் போடுவதற்குமுதல் எழுந்து நடந்து நடந்து பார்ப்பதை நினைத்துக்கொண்டாள்.

பாபாவின் அருளால் வானதிக்கு கத்தோலிக்கப் போதகரின் அருகில் இடம் கிடைத்தது. விமானத்திற்குள் வானதி, பக்கத்தில் போதகர், அதற்குப் பக்கத்தில் ஈசாக். விமானம் கிளம்பியது. செவிட்டு மெசின்களைப்போட்டு விமானத்தில் பாடல் கேட்க இயலாது என்பதால் வானதி அதை நிறுத்திவிட்டு தன் கடந்தகாலத்தை நினைக்கலானாள். அவன் பெயர்தான் கந்தசாமி (விக்ரம் என்று நினைத்துவிடாதீர்கள்) இருவரும் ஒன்றாகக் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். காதல் வசப்பட்ட வானதி கந்தசாமிக்கு ஒரு கண்டஷன் போட்டாள். அப்போ வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தமிழீழமே எங்கள் தாரக மந்திரம் என்று அமிர்தலிங்கம் ஐயா அவர்கள் முழங்கியகாலம். வானதி கந்தசாமி காதல் இதயப் பரிமாற்றத்துடன் நிபந்தனைகளுக்கு மத்தியில் வளர்ந்தது. நிபந்தனை என்னவென்றால் ''தமிழ் ஈழத்தில்தான் நமது திருமணம்'' என்பதே வானதியின் நிர்ப்பந்தம். அதற்கு கந்தசாமியும் ஒத்துக்கொண்டு தள்ளியிருந்து காதலை ரசித்து பட்டமும் வாங்கி வெளியேறினர்.

வானதிக்கு வெளிநாட்டுத் தூதுவராலயங்களில் வேலை செய்வதற்கான தகுதி கிடைத்தது. கந்தாசாமி இராணுவக் கெடுபிடியால் நாட்டைவிட்டு மாறி இத்தாலிக்கு வந்து சேர்ந்தார். காதலில் களவியல் காணாத கந்தசாமி வானதியை முடிவைமாற்றி திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளம்படி பல்லைக் காட்டிக்கொண்டு இருந்தார். வானதியின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. இறுதியாகக் கந்தசாமியிடம் இருந்து வானதிக்கு வந்த தகவல் ''அன்பான வானதி, இயக்கத்தில் உள்ளவர்களே திருமணம் செய்யும்போது நாமும் திருமணம் செய்யலாம் என்று நான் கருதுகின்றேன்'' என்று எழுதியிருந்தார். போராட்டத்தில் பாதிப்புற்ற மக்களுக்காக நான் என்வாழ்வை அர்ப்பணித்து அதில் பணியாற்றுகின்றேன். தொந்தரவு செய்யாதீர்கள் என்று பதில் வந்ததைக்கண்ட கந்தசாமி தன் மாமன் பெண்ணை அழைத்து திருமணம் செய்து கொண்டார். கந்தசாமிக்கு சர்க்கரை வியாதி ஆரம்பித்தது. இரண்டு சிறுநீரகங்களும் பழுதுடைந்துவிட்டது. சுவீடன் நாட்டில் வாழ்ந்துவரும் தன் வானதிக்கு இதை கந்தசாமி தெரியப்படுத்தினார். 30 வருடங்களுக்குமுன் வானதி தன் இதையத்தைக் கொடுத்தவள் இன்று கந்தசாமிக்கு தன் சிறுநீரகத்தையும் கொடுத்துவிட்டுச் சென்றுகொண்டிருக்கிறாள். வானதி தன் உழைப்பில் ஈழத்தில் இருக்கும் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் தனிப்பட்ட முறையில் தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்து தன்னை ஒரு மெழுகுவர்த்தி ஆக்கி வாழ்கின்றாள். ஐரோப்பாவில் வாழும் தமிழ்ப்பெண்கள் கல்லும், கம்பியும், போத்திலோடும் கட்டிய சேலைகளை ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் புதிது புதிதாக வாங்குவதை விடுத்து குறைந்த அளவிலாவது தமிழர்களுக்கு உதவிசெய்ய முன்வரமாட்டார்களா என்று நினைத்துச் சிரிக்கின்றாள். வானதி ஒரு ஆயுதம் ஏந்தாத சமூகநலப் போராளி. தியாகத்தின் தீபம், அன்னை திரேசாவின் அசல் வாரிசு. வானதி- கந்தசாமி கதைகளில் கனக்க சென்டிமன்டுகள் இருக்கு. வாசகர்கள் வணக்கம் போடமுதல் எழுந்துவிடுவார்கள் என்பதால் விடையத்தை வெளிக்காட்டவில்லை. வெளிநாட்டில் இருக்கும் 6 இலட்சம் தமிழரும் முன்வந்து போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நேரடியாக உதவி செய்தலே இன்றைய தேவை என்பது வானதியின் கருத்து.

பக்கத்தில் இருந்த பாதிரியார் ஆங்கில நாவல் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தால். அதைப்பார்த்த ஒரு வியட்னாம் காரன் தனது நண்பர்களுக்கு ''பாதிரியார் விமானம் கிழுந்துவிடும் என்ற பயத்தில் ''பைபிள்'' என்று நினைத்து வேறு ஒரு புத்தகத்தை தூக்கிவைத்துக்கொண்டு இருக்கிறார்'' என்றான். பலகை கிளிந்ததுபோல் சிரிப்பொலி வானதிக்கும் கேட்டது. (பெயர்களும், இடங்களும் கற்பபை. சம்பவம் உண்மை)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2.'தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும் என்று உனக்கு தெரியுமா''


சுவிற்சர்லாந்தின் தலைநகரத்து புகையிரத நிலையத்தில் நான் விமானநிலையம் செல்லும் புகையிரதத்திற்காகக் காத்துநின்றேன். 10 நிமிடத்திற்கு ஒரு புகையிரதம் இருந்தாலும் அதைப்பிடிப்பதற்கு பிரயாணிகள் ஓடிக்கொண்டு தரிப்பிடத்தை வந்தடைந்தனர். கட்டாய ஆமிக்காககப் பயிற்சிக்குப் போகின்றவர்களும் சிலர் அந்தப் புகையிரதத்தில் பிரையாணம் செய்யவந்திருந்தார்கள். சிலருக்கு அவர்கள் காதலிகளும் வழியனுப்ப வந்திருந்தார்கள். கட்டாய ஆமி பயிற்சி என்பது 3 மாதத்தின் பின்னர்தான் வீடு திரும்பலாம் என்பது அரசாங்கச் சட்டம். அதனால் 3 மாததத்திற்கும் தேவையான முத்தங்களை சிலர் கொடுத்துக் கொண்டிருந்தனர். நான் திரும்பி வரும்வரை நீ மாறிவிடாதே என்பதும் முத்தத்தின் ஆழத்தில் அடியில் கிடக்கின்ற உண்மை.

3 மாதம் என்தும் எனக்கு நம்ம சங்ககாலம் நினைப்பு வந்தது. அங்கும் இப்படித்தான். முல்லைநில ஆடவர்கள் தங்கள் காதலிகளைப்பிரிந்து கார்காலத்தில் 3 மாதம் எல்லைக் காவலுக்குச் செல்வார்கள். அதனால்தான் முல்லைநிலத்து அக ஒழுக்கம் இருத்தல் என்று ஆகிற்று. சென்று திரும்பும்போது அந்த ஊர் யானையைக்கொன்ற ஒரு வீரனுக்கு சிலரின் காதலிகள் மனைவியாகியிருப்பார்கள். காவல் காக்கச் சென்றவர்களுக்கு தங்கள் காதலிகளுடன் தொடர்பு கொள்வதற்கு தூது விடுதலைத் தவிர வேறெரு சந்தர்ப்பமும் வழியம் இல்லை. அதனால்தான் கண்ணதாசன் அவர்கள் ''வெண்முகிலே கொஞ்ச நேரம் நில்லு என் கண்ணீரிக் கதைகேட்டுச் செல்லு, சொன்னதை நீ அவரிடத்தில் கொல்லு, இல்லை என்னை ஏனும் அங்குஅழைத்துச் செல்லு என்று படிக்கவேண்டி வந்தது. என் சிந்தனையைக் குழப்புவதற்கென்றே புகையிரதம் வந்து தரிப்பீடத்தில் நின்றது. கொழும்பு, மருதானை ஸ்ரைலில் ஒருவரும் பாய்ந்து ஏறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நான் புகையிரதத்தில் ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்தேன். இன்னும் இரண்டுபேர் அதில் இருப்பதற்கான இடம் இருந்தது. தங்களுக்கு இருக்கை இல்லாவிட்டாலும் வெளிநாட்டவனுக்குப் பக்கத்தில் இருக்கக்கூடாது என்ற அமுலை சிலர் நிறைவேற்றி நின்று கொண்டு பிரயாணம் செய்யத் தலைப்பட்டனர். அப்போதுதான் இடம்தேடிக்கொண்டு வந்த இன்னுமொரு தமிழர் எனக்குப் பகக்கத்தில் வந்து குந்தினார். புகையிரதம் புறப்பட்டது. நீங்கள் தமிழா என்று தமிழிலேயே கேட்டார். இது மழைக்குக்கூட ஒதுங்காதவர்களின் சாதாரண வழக்கம். நான் ஆம் என்றதும். இறாத்தல் கணக்கில் அறுத்துக்கொண்டு இருந்தார்.

சுவிஸ் நாட்டில் புகையிரதத்தில் வண்டில்தள்ளி காப்பி, பொருட்கள் விற்பவர்கள் பெரும்பாலோனோர் வங்காளதேசத்து அன்பர்கள். அப்படிப்பட்ட ஒருவர் காப்பி வண்டி தள்ளிக்கொண்டு வந்தார். முன் இருக்கையில் இருந்தவர்கள் காப்பி ஆடர் செய்தார்கள். நம்ம ஆளும் 2 காப்பி ஆடர் செய்து எனக்கும் தந்தார். காப்பி வியாபாரி வெள்ளைக்காரர்களுக்கு ஒரு சீனி கொடுத்தார். எங்கள் காப்பிக்கு மட்டும் இரண்டு சீனி தந்தார்.

. சுவிசில் கச்சல் காப்பிக்கு தமிழர்கள் இரண்டு சீனி போட்டுக் குடிப்பது வழக்கம். காப்பி தந்த வியாபாரிக்கும் அது தெரியம். நம்ம ஆளுக்கு கோபம் வந்துவிட்து. உடனே அந்த வங்காளியைக் கூப்பிட்டார். ''தமிழனுக்கு இரண்டு சீனி வேண்டும் என்று உனக்கு தெரிகிறது! அவனுக்கு ஒரு நாடு வேண்டும் என்று உனக்கு தெரியுமா'' என்று கேட்டார். இம்சா அல்லா என்று வங்காளி வண்டிலை வெகமாகத் தள்ளிக்கொண்டு அடுத்த பெட்டிக்குள் சென்று விட்டான்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1.சூறையாடிய மிருகம்

இரண்டு இனம் தெரியாத பறவைகள் ஒரு மரத்தின் அடியில் ஒன்றும் உச்சியில் ஒன்றுமாக வாழ்ந்துவந்தன. பறவைகள் என்ற வகையில் தங்களுக்குள் எந்தத் தகராறும் இல்லாமல் கிடைப்பதைப் பங்கிட்டு உண்டு மகிழ்ந்தன. அந்தமரமே அவர்களுக்குச் சுதந்திரத் தாயகம்போல் சொர்க்கத்தை அளித்து வந்தது. திடீரென்று ஒருநாள் அதிகாலை உச்சியில் இருந்த பறவை திடுக்கிட்டுக் கண்விழித்துப் பார்த்போது மரத்தின் அடியில் வசித்துவந்த தன் உறவுக்காறப் பறவையைக் காணாது  திகைத்து நின்றது. பலநாட்கள் கழிந்த பின் உச்சிப்பறவை ஒரு முடிவுக்கு வந்தது. உயர்ந்த இடத்தில் வாழ்பவனுக்கே இந்த உலகத்தில் பாதுகாப்பு அதிகம் என்று தனக்குள் தன் இனத்தைச் சூறையாடிய அந்த மிருகத்தைத் திட்டிக்கொண்டது.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS